Thursday, May 15, 2008

ஜெயாவும், அவர் சார்ந்த துயரங்களும் !


"அப்படியெல்லாம் ஒன்றுமில்லை" எனச் சொல்லிச் சமாளிக்கப்பார்த்தாலும் உலகிலேயே மிக இலகுவான தொழில் முடிதிருத்தும் தொழில்தான் என்ற எண்ணம் சிறுவயதில் எனக்கிருந்தது.

எனது ஏழு அல்லது எட்டு வயதுக்கு முன்னரான காலப்பகுதியில் ஜெயசுந்தர பார்பர் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தினத்தில் எனது முடிவெட்டுவதற்காக வீட்டுக்கே வருவார்.அது பெரும்பாலும் மதியப்பொழுதாகவே இருக்கும்.அவர் தனது சலூன் கடையை மூடிவிட்டு மதிய உணவுக்காக வீட்டுக்குப் போகும் நேரமது.பெரும்பாலும் ஊரிலுள்ள அத்தனை சிறுவர்களையும் அவர் அறிந்திருந்தார்.ஊரில் உள்ள அத்தனை பேரும் கூட அவரை நன்கு அறிந்திருந்தனர்.'ஜெயா' எனச் சுருக்கமாக அழைக்கப்படும் அவர்தான் ஊருக்கேயிருந்த ஒரே பார்பர்.எப்பொழுதும் புன்னகையைத் தேக்கிய முகம் அவருக்கு வாய்த்திருந்தது.வெள்ளைச் சாறன்,மேற்சட்டை.அவர் செருப்பணிந்து நான் பார்த்ததில்லை.

பள்ளிக்கூடம் விட்டு வந்து முற்றத்தில் விளையாடிக்கொண்டிருக்கும் நான் வாசல் படலையை விலக்கிக்கொண்டு அவர் வருவதைக் கண்டால் ஓடிஒளிய சகுனம் பார்ப்பேன்.ஓடி விளையாடும் பருவத்தில் முக்கால் மணித்தியாலம் உட்காரவைத்து முடிவெட்டுவதென்றால் பெரும் சித்திரவதை அந்நேரம்.

முற்றத்து வேப்பமரத்தடியில் எனக்குக்கதிரை போடப்படும்.மழைக்காலமென்றால் பின் கொல்லைவாசல் திண்ணை.கதிரையில் நான் வலுக்கட்டாயமாக அமர்த்தப்படுவதோடு நான் ஓடிப்போய் விடாமல் கைகளைப் பிடித்துக்கொண்டு வாப்பா பக்கத்திலேயே நிற்பார்.சிலவேளைகளில் நான் அழுவேன் என்பதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

முதலில் மேல் சட்டை எதுவும் அணியாத என் உடல் மேல் அவர் கொண்டுவரும் வெண்ணிற மல்பீஸ் துணியை ஒரு உதறு உதறிப் போர்த்துகையில் அதில் வியர்வையும்,பவுடரும் கலந்தவொரு வாடையடிக்கும்.அதுவே அன்று பெரும் வதையாக உணர்வேன்.வீட்டிலேயே ஒரு கிளாஸ் தண்ணீர் வாங்கி தலைமுடி பூராவும் தெளித்து ஒருமுறை சீவிவிடுவார்.முன் நெற்றி முடிகளிலிருந்து கத்தரிக்கத் தொடங்குவார்.

தண்ணீர் விசிறப்படும்போது காதுமடல்களில்,கழுத்தில் துளிகள் பட்டு உடல் சிலிர்க்கும்.இரு விரல்களில் சிறிதுசிறிதான முடிக்கற்றை பிடித்து இயலுமானவரை குட்டையாக வெட்டிவிடுவார்.அதற்கே அரை மணித்தியாலங்களுக்கும் மேல் பிடிக்கும்.கத்தரிக்கப்பட்ட பின் பார்த்தால் ஒரு முடியின் நீளம் ஒரு அங்குலம் கூட இருக்காது.பின்னர் இறுதி வேலையாக பொலிதீன் பைக்குள் சுற்றி எடுத்துவந்த ஒரு பழங்கால மெஷினை எடுத்து 'டிக் டிக் டிக்' எனச் சந்தம் கேட்க பின்மண்டையில்,கழுத்தின் மேற்புறமாக இயக்க ஆரம்பிப்பார்.

அப்பழைய மெஷினின் இடுக்குகளில் சிக்கி சில முடிகள் பிடுங்கப்பட்டு வர ஆரம்பிக்கையில் அழ ஆரம்பிப்பேன்.வாப்பா அழாமல் இருக்கும் படி ஐஸ் பழ,மிட்டாய் ஆசை காட்டினாலும் நிற்காத அழுகை ஜெயா சவரக்கத்தியைக் கையில் எடுத்ததும் தானாக நின்றுவிடும்.

ஏறத்தாழ நாற்பத்தைந்து நிமிடப் போராட்டத்திற்குப் பிறகு தலைமுடி சீராகக் குட்டையாக வெட்டி முடிக்கப்பட்டிருக்கும்.என் தலை தடவிப் புன்னகைத்து 'இனி அழப்படாது' எனத் தமிழில் சொல்லி அவரது சட்டைப்பைக்குள்ளிருந்து ஒரு டொபியை எடுத்து நீட்டுவார்.அவர் மகனுக்குக் கொண்டுசெல்வதாக இருக்கக் கூடும்.என் வயதில் அவருக்கு ஒரு மகன் இருக்கிறான்.

பால் கலந்த தேனீர் குடிக்கமாட்டார் என்பதால் கொடுக்கப்படும் வெறும் சிவப்புச் சாயத்தேனீரோடு சீனியைக் கையில் வாங்கித் தொட்டுக்குடிப்பார்.முடிவெட்டியதற்கான கூலியாக அரிசியைக் கேட்டு வாங்கிக்கொண்டு அவர் போக,உம்மா வெட்டப்பட்டுக் கீழே கிடக்கும் முடிக்கற்றைகளை ஒன்றாய்க்கூட்டி முற்றத்து மருதோன்றி மரத்தினடியில் புதைக்க, நான் வாப்பாவோடு ஆற்றுக்குப் போவேன்.

எட்டு,ஒன்பது வயதிற்குப் பிற்பாடு நான் அழமாட்டேன் என்ற தைரியத்தில் வாப்பா அவர் முடி வெட்டச் செல்லும்பொழுது என்னையும் ஜெயாவின் பார்பர் சலூனுக்கு அழைத்துச் செல்வார்.சலூனென்றால் இப்போதைய சலூன்கள் போல சுவரின் நான்கு பக்கங்களுக்குக் கண்ணாடியும்,நிலத்தில் மாபிள் கற்களும் பொருத்தப்பட்டு காற்றில் வாசனை கமழும் சலூனல்ல அது.

முடிவெட்டப்படும் வாடிக்கையாளர் உட்கார ஒரு கதிரை.நீள்வாக்கில் போடப்பட்ட இரண்டு பலகை வாங்குகள் காத்திருக்கும் வாடிக்கையாளர் உட்காரப் போடப்பட்டிருக்கும்.ஒரு பெரிய கண்ணாடி,சீப்பு,ஒரு பழைய பவுடர் பேணி,கத்தரிக்கோல்,மெஷின்,தண்ணீர்க் கோப்பை,வெண்ணிறக்கல்,துருவேறிய ப்ளேட்கள் ஒரு டப்பா மேசையில் இருக்கும்.சுவர்முழுதும் அக்காலச் சிங்கள நடிகைகள் குத்துவிளக்குகளோடு கலண்டர்களில் புன்னகைக்க,வலது மேல்மூலையில் சிறிய புத்தர் படத்துக்குக் கீழ் சந்தனத் திரி எரியும்.

வாப்பாவுடன் சலூனுக்குப்போனால் அங்கு அவருக்குப் பெரும் மரியாதை கிடைக்கும்.எனக்கும் தான்.வாப்பாவை உட்காரச் சொல்லிவிட்டு எனக்கு முடிவெட்ட ஆரம்பிப்பார்.அதே வெள்ளைத் துணி,அதே கத்தரி,சீப்பு,மெஷின்.மெஷினால் வெட்ட ஆரம்பிக்கும் போது வாப்பா வந்து பக்கத்தில் நிற்பார்.நான் அவர் கையைப் பிடித்துக்கொள்வேன்.பின்னர் வாப்பாவுக்கு முடிவெட்டும் வரை அங்கு போடப்பட்டிருக்கும் நீளவாங்கில் அமர்ந்து பார்த்துக்கொண்டிருப்பேன்.

சலூனின் பின்மூலையில் வெட்டப்பட்ட முடிக்கற்றைகள் மூடைகளாக நிறைந்திருக்க,வாங்குகளில் ரேஸ் பேப்பர்கள் இறைந்திருக்கும்.எப்பொழுதும் வாடிக்கையாளர் தவிர்த்து குறைந்தது நான்கு பேர் வாங்குகளில் மூட்டை கடிப்பதையும் மறந்து உட்காந்திருப்பர்.ஊர்க்கதை பேசவும்,ரேஸ் பேப்பர் படிக்கவும் வரும் ஜெயாவின் நண்பர்களாக இருக்கக்கூடும்.

எப்பொழுதுமே ரேஸ் பேப்பர்கள் சாதாரணப்பத்திரிகைகளை விடவும் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்துபவை.அதில் சிறிய ஆங்கில எழுத்துக்கள் நெருக்கி நெருக்கி அச்சடிக்கப்பட்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன்.வாப்பா சொல்லித்தான் அதன் பெயர் ரேஸ் பேப்பர் என்றே தெரியும்.வாப்பா அதற்கு மேல் எதுவும் சொன்னதில்லை.ஒருவேளை அவருக்கும் தெரிந்திருக்காது.

அந்நாட்களில் ரேஸ் பேப்பர்கள் படிக்க பெரும் அறிவு வேண்டும் என எண்ணியிருந்தேன்.ஜெயா ஆங்கிலப் பேப்பரெல்லாம் படிக்கிறார் என்பதே எனக்கு ஆச்சரியமாக இருந்தது.ஏனெனில்,நான் வீட்டில் படிக்காமல் விளையாடித் திரியும்போது 'இப்படிப் படிக்காமல் விளையாட்டுப்பிள்ளையாத் திரிஞ்சால் பிறகு ஜெயாவைப் போலத்தான் வீடு வீடாகப் போக வேண்டிவரும்' எனத் திட்டு வாங்கியிருக்கிறேன்.அப்பொழுது முதல்தான் நினைத்திருந்தேன் 'மூலதனமாக ஒரு சீப்பு,கத்தரிக்கோல் போதும்.உலகிலேயே மிக இலகுவான தொழில் முடிதிருத்துவது தான்' என்பதாக.

பிந்திய வயதுகளில் சலூனுக்கு நான் தனியாகவே போக ஆரம்பித்தேன்.மேலும் புதிய அழகான சலூனொன்று ஊருக்குள் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.ஊர் இளைஞர்கள் எல்லோரும் அதில் நிறைய ஆரம்பித்தனர்.

எங்கள் வீட்டு வயலின் நாற்றுக்கள் பிடுங்கி நடும் காலங்களிலும்,களையெடுக்கும் காலங்களிலும்,அறுவடைக்காலங்களிலும் ஜெயசுந்தரவின் மனைவி செனகலதா தன் மகனோடு கூலிவேலைக்கு வருவாள்.நானும் அவர் மகனோடு சேர்ந்து சேற்றில் இறங்கி நாற்றுநட்டிருக்கிறேன்.

இருவரும் பேசிக்கொண்டதில்லை.எனக்கு சிங்களமோ,அவனுக்குத் தமிழோ தெரியாது.புன்னகை மட்டும்தான் பாஷை.காற்றடிக்கும் காலங்களில் பட்டம் விடுவதற்காக எங்கள் வயலுக்கு வருவான்.எனக்கும் பட்டம் கட்டித் தந்திருக்கிறான்.ஊரிலிருந்த சிங்களப் பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்தான்.

உண்மையில் இதனைத் தவிர ஜெயசுந்தர பற்றியோ,அவனது குடும்பம் பற்றியோ எனக்கு வேறெதுவும் தெரிந்திருக்கவில்லை அன்றைய இரவு வரும் வரைக்கும்.கல்விப்பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சைக்குத் தோற்றும் பதினாறு வயது எனக்கு அப்போது.பரீட்சைக்காக வகுப்பு நண்பர்கள் அனைவரும் எனது வீட்டில் சேர்ந்து படித்துக்கொண்டிருந்தோம்.

நடுச்சாமத்தில் பெண்ணின் அலறல் கேட்டது.தன்னைக் கொல்ல வருவதாகக் கத்திக்கொண்டு வீட்டு முன் வீதிவழியே ஓடி வந்தாள்.வாப்பாதான் முன்கதவைத் திறந்து பார்த்தார்.படித்துக்கொண்டிருந்த நாங்கள் எல்லோரும் எல்லாவற்றையும் அப்படியப்படியே போட்டுவிட்டு வாசலுக்கு வந்தோம்.

காப்பாற்றச் சொல்லி இரு கைகளையும் தலையிலடித்துக்கொண்டு வீட்டுக்குள்ளேயே செனகலதா வந்துவிட்டாள்.நன்றாகக் குடித்துச் சிவந்த விழிகளோடு பின்னால் ஜெயா கத்தியோடு துரத்தி வந்திருந்தார்.அன்றுதான் நாங்கள் அனைவரும் ஜெயசுந்தரவின் இன்னொரு முகத்தையும் கண்டோம்.

வாப்பாவைக் கண்டதும் ஜெயசுந்தரவின் வெறி சற்றுத் தணிந்தது போலிருந்தது.

"ஹாஜியார், இவள்...இவள்...நான் காசு கேட்டா தர மாட்டேங்குறா.இவளை உயிரோடு விடக்கூடாது " என்று போதையில் உளறிக்கொண்டிருந்தார்.

வாப்பா ஜெயசுந்தரவை சமாதானப்படுத்தி அனுப்பிவிட்டு செனகலதாவை அன்றிரவு எங்கள் வீட்டில் தங்கி காலையில் போகச் சொன்னார்.ஜெயா தினமும் குடித்துவிட்டு வந்து தான் கூலி வேலை செய்து தேடும் பணத்தைக் கேட்டுச் சண்டை பிடிப்பதாகவும்,தன் விருப்பத்துக்கு மாறாக மகனை படிப்பை விட்டும் நிறுத்தி கொழும்பு ஹோட்டலொன்றுக்கு வேலைக்கு அனுப்பிவிட்டதாகவும்,தான் இனிமேல் அவருடன் சேர்ந்து வாழ்வதில்லை எனவும் உம்மாவிடம் சொல்லி அன்றிரவு நீண்ட நேரம் அழுதுகொண்டிருந்தாள் செனகலதா.

காலையில் ஜெயா கடைக்குப் போகும் வரை பார்த்திருந்து பின் வீடு சென்றாள்.

பரீட்சைக்குப் பின் நாங்கள் ஊரில் இருக்கவில்லை.வீட்டையும் வயலையும் விற்றுவிட்டு குடும்பத்தோடு கொழும்பு வந்துவிட்டோம்.ஒவ்வொருமுறை முடிவெட்டும் போதும்,காது மடல் சிலிர்த்திடும் போதும் எனக்கு ஜெயா சம்பந்தமான நினைவுகள் வந்துபோகும்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு கொழும்பிலிருந்த முதியோர் இல்லமொன்றுக்கு அன்பளிப்பாக மின்விசிறிகள் தேவைப்படுவதாக எனக்கு மெயில் ஒன்று வந்தது.அது சம்பந்தமாக என்னுடன் வெளிநாட்டிலிருந்த ஊர் நண்பர்கள் அனைவரும் இணைந்து சில மின்விசிறிகள் வாங்கினோம்.நான் இலங்கைக்குச் செல்லவிருந்த காரணத்தால் கொண்டு சென்று ஒப்படைக்கும் பணி என்னிடம் தரப்பட்டது.

அதன் படியே நானின்று இந்த முதியோர் இல்லம் வந்தேன்.எல்லா மின்விசிறிகளையும் பொறுப்பாளரிடம் ஒப்படைத்துவிட்டுத் திரும்பிவர எண்ணிய போது அவர் என்னை அம்முதியவர்களிடம் அறிமுகப்படுத்தி வைக்க விரும்பினார்.நானும் அதை விரும்பினேன்.

இரண்டாம் மாடியில் ஒரு நீண்ட பெரும் அறையில் இரு புறங்களிலும் கட்டில்கள் போடப்பட்டு வெள்ளைச் சட்டை,பிஜாமா சாறனணிந்திருந்த முதிய ஆண்கள் உட்காந்திருந்தனர்.பொறுப்பாளர் எனது உதவி பற்றிச் சொல்ல எல்லோரும் எனைக் கை கூப்பி நன்றி தெரிவித்தனர்.அதில் ஒருவராய்த் தான் நான் திரும்பவும் ஜெயாவைச் சந்தித்தேன்.

தலை முழுதும் மொட்டையடிக்கப்பட்டிருந்த அவரைக் காட்டி 'அவர் ஜெயாவா?' எனப் பொறுப்பாளரிடம் கேட்டேன்.ஆமென்றதோடு அவரை யாரும் பார்க்கவருவதில்லையெனச் சொன்னார்.தன் மனைவியை உலக்கையால் தாக்கிக் கொலை செய்த குற்றத்திற்காக பத்து வருட சிறைத் தண்டனை அனுபவித்துவிட்டு,பார்வை மங்கி,யானைக்கால் நோய் தாக்கிய நோயாளியாகி கவனிக்க யாருமற்ற நிலையில் பொலிஸாரால் இங்கு கொண்டுவந்து விடப்பட்டதாகவும் கூறினார்.

நான் அவருடன் பேசவிரும்புவதாகக் கூறி அவரருகில் செல்ல பொறுப்பாளர் என்னை அவருக்கு அறிமுகப்படுத்திவைத்தார்.நான் 'ஜெயா' எனப்பெயர் சொல்லி அழைக்க,அவர் முகத்தில் அப்படி ஒரு பரவசம்.உடனே என்னிரு கரங்களையும் பற்றிக்கொண்டார்.அதில் அன்பைத் தேடும் ஒரு ஆதங்கம் தெரிந்தது.அவரது வலதுகைப் பெருவிரல் பின்னோக்கி வளைந்திருந்தது.கத்தரிக்கோல் பிடித்துப் பிடித்தே வளைந்திருக்கக்கூடும்.

கண்பார்வை குறைந்திருந்ததால் நான் மங்கலாகத் தெரிவதாய்ச் சொன்னார்.இன்னாரின் மகன் எனச் சொன்னதும் அவருக்கு என்னை அடையாளம் தெரியலாயிற்று."நீங்களாவது என்னைப் பார்க்க வந்தீங்களே.என் மகனைப் பார்ப்பதைப் போலிருக்கு" என்றார்.கால்கள் இரண்டும் நோய்த் தாக்கத்தில் வீங்கியிருந்தன.இவர் இருப்பது முன்னரே தெரிந்திருந்தால் உணவுப்பொருள் ஏதாவது எடுத்துவந்திருக்கலாம்.

தன் மகனைப் பற்றி எதுவுமே தெரியவில்லையென்றும் நான் சந்திக்க நேர்ந்தால் ஒரு முறை இங்கு வந்துபோகச் சொல்லும் படியும் சொன்னார்.

"நான் வேலை,வேலைன்னு அலைஞ்சப்போ பையனை ஒழுங்காப் பார்த்துக்கல.இன்னிக்கு வேலையெதுவும் இல்லாம இங்க இயலாம இருக்கேன்.என்னைப் பார்த்துக்கப் பையனும் இல்ல."

இவரா தன் மனைவியை உலக்கையால் அடித்துக் கொன்றார்? ஆச்சரியமாக இருந்தது.

"என்ன செய்ய தம்பி?நான் குடிச்சது அவளுக்குப் பிடிக்கல.ரேஸ் போட்டது அவளுக்குப் பிடிக்கல.நீங்களே யோசிச்சுப் பாருங்க.நாள் முழுக்க நின்னுக்கிட்டு,ரெண்டு கைகளையும் உயர்த்திக்கிட்டு,நான் வெட்டுறது இவனுக்குப் புடிக்குமோ புடிக்காமப் போய் சண்டை பிடிப்பானோன்னு ஒரு பதற்றத்தோட முடி வெட்டுறதுங்குறது லேசான காரியமா? ராத்திரியான ரெண்டு கையும்,காலும் பயங்கரமா வலிக்கும்.அதான் குடிச்சேன்.அந்தத் தரித்திரம் புடிச்ச வாழ்க்கையில ஏதாவதொரு அதிஷ்டம் வரும்னு நம்பித்தான் இருந்த ஒரே வீட்டையும்,கடையையும் அடகுவச்சு ரேஸ் போட்டேன்.இது எதுவுமே அவளுக்குப் புரியல.அதான் ஒரு வாக்குவாதத்துல இப்படியாகிப் போச்சு.இன்னிக்குக் கூட நிறைய பேர் முடிவெட்டுறதுங்குறது ரொம்ப லேசான காரியம்னுதான் நெனச்சிட்டிருக்காங்க "எனச் சொல்லி அவர் கீழ் நோக்க அவரது பிஜாமா சாறனில் இரு சொட்டுக் கண்ணீர்த் துளிகள் விழுந்தன.

"அப்படியெல்லாம் ஒன்றுமில்லை" எனச் சொல்லி அவரை சமாதானப்படுத்தப் பார்த்தாலும் உலகிலேயே மிக இலகுவான தொழில் முடி திருத்தும் தொழில்தான் என்ற எனது எண்ணம் தூள்தூளானது.


-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

Thursday, May 1, 2008

அக்கக்காக் குஞ்சு !


இன்னும் தன் கண்திறவாக் குருவிக்குஞ்சினைக் குளிப்பாட்டித் துடைத்துத் தாலாட்டுப்பாடித் தூங்கவைக்கும் யாரையாவது எங்கேனும் பார்த்திருக்கிறீர்களா? நான் பார்த்திருக்கிறேன்.

சச்சுவுக்கு அப்பொழுது ஏழு அல்லது எட்டு வயதிருக்கும்.அந்த வயதுச் சிறுமிகளுக்கேயுரித்தான அத்தனை குறும்புகளும், சேட்டைகளும் அவளுக்கும் வாய்த்திருந்ததில் ஆச்சரியமேதுமில்லை. எனினும் சில பொழுதுகளில் அவள் செய்யும் செயல்களை எண்ணும்போது இப்படியும் யாராவது உலகிலிருப்பார்களா எனவும் எண்ணத் தோன்றும்.

சச்சு எனது பக்கத்து வீட்டிலிருந்தாள். அவளது அப்பாவுக்குச் சொந்தமான ஒரு செங்கல் சூளை ஊரில் இருந்தது. அக்காக்களிருவரும் பக்கத்து,பக்கத்து ஊர்களில் வாழ்க்கைப்பட்டுப் போய்விட அப்பாவுடன் அம்மாவும் சூளை வேலைக்குச் செல்லும் நாட்களில் சச்சுவுக்கு என் வீடும், முற்றமும்தான் விளையாடுகளமானது.

அன்றைய நாட்களில் எனது வீட்டுமுற்றத்தில் அடர்த்தியாகிக் குட்டையானவொரு எலுமிச்சை மரம் இருந்தது. ஒரு முறை அதன் நெருங்கிய கிளைகளுக்கிடையில் ஒரு குருவிக்கூடு இருப்பதைப் பார்த்துவிட்டவள் முட்கள் குத்தக் குத்தக் கூட்டினை எடுத்து விட்டாள்.உள்ளே சாம்பல் நிறம் படர்ந்த ஒரு குஞ்சு, எந்தப் பாசாங்குமற்ற விழிகளை மூடியவாறும் இளஞ்சூட்டோடும் சிறு நுரையீரல் நிரப்பிய காற்று வயிறை உப்ப வைத்துக்கீழிறக்கத் துயிலிலிருந்தது.

தனக்குத் துணைக்கு விளையாட ஒரு உயிர், தான் பெயர் வைத்து ரசிக்க ஒரு ஜீவன்... இன்னும் என்னென்ன நினைத்தாளோ, அப்படியே என் வீட்டுத் திண்ணை நிழலுக்கு எடுத்துவந்தவள் என்னை அழைத்ததன் பெயர் கேட்டாள்.ஓர் நாள்க் குஞ்சின் உருவம் பார்த்துப் பெயர் சொல்லுமளவிற்கு பறவை சாஸ்திரமெதுவும் அறிந்தவனல்ல நான்.மௌனமாய் அவள் முன் உதடு பிதுக்க 'இது அக்கக்காக் குஞ்சாக்கும்' என அவளே சொன்னாள். நள்ளிரவில் மட்டும் கீச்சிடும் குருவியதுவெனவும் அது பற்றி அம்மா நிறைய கதை கதையாய்ச் சொல்லியிருக்கிறாவெனவும் குருவிக் குஞ்சினைத் தடவிக்கொடுத்தவாறே சொன்னாள்.

பிறகு எவ்வளவோ எடுத்துச்சொல்லியும் கேட்காமல் திரும்பக் கூட்டில் வைக்கமறுத்துவிட்டாள். ஒரு குஞ்சின் பிடியில் இன்னொரு குஞ்சு. எதுவும் செய்ய இயலாதவனாக எனது உயர்தரப் பரீட்சைக்கான ஆயத்தங்களில் ஆழ்ந்துவிட்டேன்.

மாலையில் பார்த்தபோது சச்சு விழிகள் சிவக்க விசும்பிக்கொண்டிருந்தாள். என்னவென்று கேட்க, அவள் காட்டிய மாமர நிழலில் ஒரு சிறு மண்மேடு. அதன் மேல் நடப்பட்டவாறு செஞ்செவ்வரத்தம் பூவோடு கிளையொன்று.என்ன நடந்திருக்குமென ஊகிக்க என்னால் முடிந்ததானாலும் கேட்டேன்.

தான் தவறாக ஏதும் செய்யவில்லையெனவும் அதனைக் குளிப்பாட்டித் துடைத்துப் பின் சோறு ஒரு பருக்கை ஊட்டித் தூங்கவைத்ததாகவும் பிறகு பார்த்தால் செத்திருந்ததாகவும் மூக்கிழுத்து விசும்பியவாறு சொன்னாள். அளவிடமுடியாக் கோபம் என்னை ஆட்கொள்ள அவளது காதைத் திருகி உச்சந்தலையில் குட்டி விட்டேன்.மதியம் நான் அவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை.

பின்வந்த ஒரு வாரத்துக்கு எனை நோக்கும் கணங்களில் அவள் முகத்தில் புன்னகை இருக்கவில்லை. கோபம் நிறைந்து அப் பாரம் உடலை அழுத்துவது போலவே வளைய வந்தாள். எல்லாம் என் வீட்டு முகட்டிலிருந்து அணில்குஞ்சொன்று விழும் வரைக்கும்தான்.

அப்பொழுதிருந்த என் பழைய வீட்டில் சீலிங் வசதி எதுவும் செய்யப்பட்டிருக்கவில்லை.நாட்டு ஓடுகளால் மூடப்பட்ட வீட்டின் முகடுகளில் அணில்கள் வெகு சுதந்திரமாய் ஓடித்திரியும். முகட்டுக்கு நேராகத் தரையில் தும்புச் சிதறல்கள், வைக்கோல் துண்டுகள் சிதறிக்காணப்படின் தாய் அணில் பிரசவத்திற்காகக் காத்திருப்பதையும் அதற்கான கூட்டின் ஆயத்தங்களில் இருப்பதையும் உணர்ந்து கொள்ளலாம்.

ஒரு காலைப் பொழுதொன்றில் காதைச் சில்லிட வைக்கும் 'கீச் கீச்' சத்தம் வீடு முழுக்க நிறைந்திருந்தது. வீட்டின் எந்த மூலையிலிருந்து சத்தம் வருகிறதென ஒவ்வொரு கீச்சிடலையும் தொடர்ந்து வீடு முழுக்கத் தேடிப் பார்க்க சாப்பாட்டு மேசை மேல் சிறு உயிர் துடிப்பது தெரிந்தது.

எலிக்குஞ்சுக்குச் சமமான தோற்றமெனினும் தலை சற்றுப் பெரியது.கண்கள் முடிக்கிடக்க இளஞ்சூடாக இருந்தது.இடைவெளி விட்டு விட்டுக் கீச்சிட்டது. ஒரு மேசைக்கரண்டியில் பாலெடுத்து சிறு துணியை அதில் நனைத்து அதன் வாயில் வைத்து அது சப்பத் தொடங்கிய வேளை சச்சு வந்தாள். அவளுக்குத் தரச்சொல்லி அத்தனை கெஞ்சியும் கையில் கொடுக்கமறுத்தேன். என்ன நினைத்தாளோ...? அவசரமாய் அவ்விடத்தை விட்டும் ஓடிப் போனாள்.

பிற்பாடு ஏணி வைத்துச் சுவரில் ஏறி உச்சி முகட்டில் குஞ்சினை வைத்துவிட்டேன். அடுத்த கணமே தாய் அணிலின் வருகையைப் பார்க்கமுடிந்தது. ஒரு உயிரைக் காப்பாற்றிய மகிழ்ச்சி எனக்குள் வந்ததைப்போலவொரு மிகப் பெரும் களிப்பை அதுவும் உணர்ந்திருக்க வேண்டும். சத்தமாய்ச் சத்தமிட்டது.

அடுத்த ஐந்து நிமிடத்தில் வீட்டுக்குப்போய் அவளுக்காகப் பேச மூன்றாம் பிரசவத்துக்காக வந்திருந்த அவளது மூத்த அக்காவை அழைத்து வந்திருந்தாள் சச்சு. அவளது அக்கா அவ்வளவாகப் பேசமாட்டார். அடர்த்தியான மௌனமும், வார்த்தையில் விவரிக்க முடியாதவொரு மென்சோகமும் எப்பொழுதும் அவர் முகத்தில் இழையோடும். முதல் இரண்டு பெண்குழந்தைகளுக்குப் பிறகு மூன்றாவதாக ஒரு ஆண்குழந்தையைப் பெற்று வரவேண்டுமென்ற வலியுருத்தலோடு மாமியாராலும், கணவனாலும் தாய் வீட்டுக்கு அனுப்பப்பட்டிருந்தார்.

உயர்தரப் பரீட்சை எழுதிமுடித்த கையோடு நானும் அப்பாவும் அம்மாவும் அப்பாவின் வேலை இடம் மாற்றத்தாலும் எனது கணணிப்படிப்பைக் கருத்தில் கொண்டும் தலைநகர் வந்துவிட்டோம்.அதன் பிறகு ஊரோடு கடந்த பதினொரு வருடங்களாக எமக்கெந்தத் தொடர்பும் இருக்கவில்லை.

மூடிக்கிடக்கும் பழையவீட்டை விற்றுவிடலாமெனச் சமீபத்தில் நாங்கள் தீர்மானித்து ஊர் நோக்கி வரும்போது வாகனத்துக்குள் பழைய ஊர்க்கதைகளோடு சச்சு பற்றியும் பேசிக்கொண்டோம். பாழடைந்த வீட்டுக்குரிய அத்தனை குணாதிசயங்களோடும் நிறைந்திருந்த எமது வீட்டைச் சுற்றிப் பார்த்துத் திரும்பியவேளை அம்மாவுடன் சச்சுவும் நின்றிருந்தாள்.

மூத்த அக்கா மூன்றாவதாகவும் பெண்குழந்தையைப் பிரசவித்துவிட்டு இறந்துபோனதைத் தொடர்ந்து சில மாதங்களில் அப்பாவும் இறந்து போக, மூன்று குழந்தைகளைப் பராமரிக்கவும், ஆண் வாரிசுக்காக வேண்டியும் சச்சு, அக்கா கணவனுக்கு வாழ்க்கைப் பட்டிருந்தாள். மேடுற்ற வயிரோடு , ஒரு அடர்த்தியான மௌனமும், வார்த்தையில் விவரிக்க முடியாதவொரு மென்சோகமும் அவள் முகத்தில் இழையோடிக்கொண்டிருந்தது.

-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.