Monday, September 15, 2008

பயணம்

அப்துல்லாஹ் பஸ்ஸினுள் அமர்ந்திருந்தான். பஸ்ஸை எடுக்க இன்னும் பத்து நிமிடங்களாவது ஆகும். இலேசாகப் பசித்தது. இன்றுதான் அவன் வேலையில் சேர்ந்த முதல்நாள். அவனது நீண்டகால இலட்சியம் நிறைவேறிய நாள். விரல்கள் அனிச்சையாக நெற்றியைத் தடவிக் கொண்டன. காலையில் வேலைக்கு வரும் அவசரத்தில் வீட்டுக் கதவில் இடித்துக் கொண்டிருந்தான். அது இலேசாகப் புடைத்திருந்தது. அம்மா சகுனம் சரியில்லையோ என வருத்தப்பட்டுத் தன் புடவையின் நுனியை ஒரு பந்து போலாக்கி அதனை வாயில் பொத்திக் காற்றூதிச் சூடாக்கி உடனே அவன் நெற்றிக்கு ஒத்தடமிட்டாள். இருந்தும் அந்தப் புடைப்பு இன்னும் முற்றாக நீங்கவில்லை.

அவனுக்கு அந்த ஆசிரியர் வேலை மிகவும் பிடித்திருந்தது. காலையில் அதிபர், காலைக்கூட்டத்தில் அவனை சக ஆசிரியர்கள், மாணவர்கள் எல்லோர் முன்னிலையிலும் வரவழைத்து அறிமுகப்படுத்தி வைத்தார். மெலிந்த, உயர்ந்த, சிவந்த தோற்றம் அவனுடையது. குரல் மட்டும் கம்பீரமாக இருந்தது. இந்த வேலைக்காகத்தான் அவன் மிகவும் கஷ்டப்பட்டுப் படித்தான். அவனை விடவும் சிரமப்பட்டவள் அவனது விதவைத் தாய். வறுமைக்குள் உழலும் குடும்பம் அவனுடையது. அரச உதவிப்பணம் தவறாமல் கிடைத்ததால் அவனால் தொடர்ந்து படிக்க முடிந்தது. இனி தாயை எந்தவிதத்திலும் சிரமப்படுத்தாமல் அவளை ஒரு மஹாராணி போல மகிழ்ச்சியாக வைத்திருக்கவேண்டுமென எண்ணிக் கொண்டான்.

பஸ்ஸினுள் சனம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தபடியே இருந்தது. பஸ்ஸின் படிக்கட்டில் நின்றபடி நடத்துனர் ஒவ்வொரு ஊர் பெயராகக் கூவியபடி சனங்களைச் சேர்த்துக் கொண்டிருந்தார்.வெள்ளைச் சீருடையில் பாடசாலை மாணவ,மாணவிகள் பஸ்ஸுக்குள் ஏறிக் கொண்டனர். பஸ்ஸினுள் இருக்கைகள் எல்லாம் நிறைந்து அவர்கள் நின்றுகொண்டனர். அவர்களுடன் தான் மனிஷாவும் இருந்தாள். மனிஷாவை இந்த வருடம் தான் பாடசாலையில் சேர்த்திருந்தார்கள். ஆறு வயது நடந்துகொண்டிருந்தது.அழகிய சிவப்பு நிறம். கருமையான முடி.சிறகுகள் முளைக்காத சின்ன தேவதை போல இருந்தாள். தனியாக பஸ்ஸில் போய் வரத் தெரியாது. அதுவும் பாடசாலையிலிருந்து வீட்டுக்குப் போகக் கிட்டத்தட்ட இருபது கிலோமீற்றர்கள் பிரயாணம் செய்ய வேண்டும். ஊர் விகாரை தாண்டியதும் இறங்கிக் கொள்ளவேண்டும். இது எதுவும் அவளுக்குத் தெரியாது.பாடசாலைக்கு வரும்போது அதே பாடசாலையில் மேல்வகுப்பில் படிக்கும் சபீதா அக்கா கூடவே வருவாள். போகும் போது அக்காவின் வகுப்புக்கள் முடியும்வரை காத்திருந்து அவளுடனேயே வீடுதிரும்புவது இவளின் வழமையாக இருந்தது.

மனிஷாவுக்கும் இன்று இடம் கிடைக்கவில்லை. அக்கா பஸ் இருக்கையின் கைப்பிடியைப் பிடித்துக் கொள்ளச் சொல்லி அவளும் அருகிலேயே நின்றுகொண்டாள். ஓரளவு சனம் நெருக்கியடித்தது. அவ்வளவு நெருக்கத்திலும் மனிஷா தன் மழலை கலந்த குரலில் வகுப்பில் நடந்தவற்றை அக்காவிடம் ஒப்பிப்பதை நிறுத்தவில்லை. அவளது வகுப்பில் படிக்கும் சஞ்சீவ் தனது பென்சிலைப் பறித்ததை ஏதோ ஒரு பெரிய குற்றத்தைப் பற்றி பொலிஸாரிடம் முறையிடுவதைப் போன்று சொல்லிக் கொண்டிருந்தாள். சூழ இருந்த ஒன்றிரண்டு சனம் அந்தப் பேச்சினைக் கேட்டு ரசித்துப் புன்னகைத்தது. அக்காவுக்கு அது சங்கடமாகப் போயிற்று. எல்லாவற்றையும் வீட்டுக்குப் போய்ப் பேசிக் கொள்ளலாமெனத் தங்கையிடம் அன்பாகவும் மெதுவாகவும் சொன்னாள்.

அவ்வளவு கூட்டத்துக்குள்ளும் கிறிஸ்தோபர் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதை சபீதா உணர்ந்தே இருந்தாள். இலேசாகத் திரும்பிப் பார்த்தபொழுது அவன் சட்டென்று தலைகுனிந்து கொண்டான். அவன் தலை உயர்த்தி இவளைப் பார்க்க நோக்கும் கணம் இவள் இலேசாகப் புன்னகைத்தாள். கிறிஸ்தோபரும் அதே பாடசாலைதான். வேறு பிரிவில் படிக்கிறான். பஸ்ஸில் போகும்போதும் வரும்போதும், பாடசாலைக்குள் முகம் பார்க்க நேரிடும் போதும் இப்படித்தான் பார்த்துப் புன்னகைத்துக் கொள்வார்கள்.

பஸ்ஸினை இன்னும் எடுத்தபாடில்லை. நடத்துனர் தொடர்ந்து கத்திக் கொண்டே இருந்தார். அது நீண்ட, பெரிய அரசுக்குச் சொந்தமான பஸ்.அந்த ஊருக்குப் போகும் இந்த பஸ்ஸைத் தவற விட்டால் அடுத்த பஸ் வர இன்னும் ஒரு மணித்தியாலம் ஆகும். அதுவரைக்கும் காக்கப் பொறுமையற்ற மக்களும், அவசரத்திலிருந்த மக்களும் கூட்டத்துக்கு மத்தியிலும் ஏறிக் கொண்டார்கள். சனம் நெருக்கத் துவங்க மனிஷா சிணுங்கத் தொடங்கினாள். அவள் பிடித்திருந்த கைப்பிடிக்குரிய இருக்கையில் அமர்ந்திருந்த விஜயலட்சுமி மனிஷாவை அழைத்துத் தன் மடியில் அமர்த்திக் கொண்டாள்.

விஜயட்சுமியின் மனது இன்று மகிழ்ச்சியில் துள்ளாட்டம் போட்டுக் கொண்டிருந்தது. எத்தனை கோயில்கள் ? எத்தனை வேண்டுதல்கள் ? எத்தனை நேர்ச்சைகள் ? எல்லாமே பலித்துவிட்டன. இரவுகளில் தலையணை நனைய அழுத காலங்களுக்கு இனி விடுதலை. மாமியாரின் ஏச்சுக்களும் ஊர்ப்பெண்கள் சிலரின் தகாத வார்த்தைகளும் இனி அவளை நோக்கி ஏவப்படாது. திருமணமாகி எட்டு வருடங்கள். இதுவரையில் குழந்தையில்லை. அனைவரினதும் வாய்களுக்கு அவலாகிப் போயிருந்தாள். இனி அவர்கள் முன்னால் தலைநிமிர்ந்து நடக்கலாம். வீட்டு விஷேசங்களில் கலந்துகொள்ளலாம். தாயாகப் போகிறாள்.அவளுக்கென்றொரு அந்தஸ்து வந்துவிட்டது. ஒரு பெரும் நிம்மதி வந்து மனதில் அப்பிக் கொண்டது.

அருகிலிருந்த கணவனின் தோள்களில் ஆறுதலாகத் தலைசாய்த்துக் கொண்டாள். அவர் முகமும் மகிழ்ச்சியில் மலர்ந்திருந்தது.மருத்துவமனையில் அவளது சிறுநீரைப் பரிசோதித்து கர்ப்பிணி என உறுதிப்படுத்தியிருந்தார்கள். அவளுக்குச் சீக்கிரமாக வீடுதிரும்பி மாமியாரிடம் தான் மலடியில்லை எனச் சொல்லவேண்டும் போல இருந்தது. இதோ அடுத்தவருடம் அவளது கைகளில் ஒரு சிறுகுழந்தை துயிலும். அதற்கடுத்த வருடம் , முன்னிருக்கையில் தாயின் கைகளிலிருந்து மனிஷாவை நோக்கிக் கை நீட்டிச் சிரித்துக் கொண்டிருக்கும் அந்தக் குழந்தை போலச் சிரிக்கும். இன்னும் ஏழு வருடங்களில் தன் மடியிலமர்ந்திருக்கும் மனிஷாவைப் போலத் தன் குழந்தையும் பள்ளிக்கூடம் போகும்.

முன் இருக்கையிலிருந்த தன் அம்மாவின் கைகளிலிருந்து கொண்டு அக்குழந்தை மனிஷாவைப் பார்த்துச் சிரித்தது. ஒரு வயதிருக்கும். ஐம்பது காசு அளவில் பெருத்த பொட்டொன்று அதன் நெற்றியில் இடப்பட்டிருந்தது திருஷ்டிக்காக இருக்கவேண்டும். மனிஷாவும் அக்குழந்தையைப் பார்த்துச் சிரித்தாள். அதுவரையில் வாய்க்குள் போட்டுச் சப்பிக்கொண்டிருந்த கையினை எடுத்து அவளை நோக்கி நீட்டியது. அவளும் அதன் எச்சில் பட்ட விரல்களைப் பிடித்துக்கொண்டாள். அது கைகளை விடுத்து கறுப்பு ரிப்பன் கட்டிய அவள் தலைமயிரைப் பிடித்திழுத்தது.

கூட்டத்துக்குள் காவியுடையணிந்த பௌத்தபிக்கு ஒருவர் ஏறிக் கொண்டார். கைகளில் கறுப்புக் குடை. அப்துல்லாஹ் உடனே எழுந்து அவருக்கு இருக்கையை அளித்துக் கூட்டத்துக்குள் நின்றுகொண்டான். அவர் ஒரு மெல்லிய புன்னகையைத் தன் முகத்தில் படரவிட்டு அவ்விருக்கையில் உட்காந்து கொண்டார். அவனது கையிலிருந்த புத்தகங்களை வாங்கித் தன் மடியில் வைத்துக் கொண்டார்.

காலையில் தன் பாடசாலைக்கு புதிதாக வந்த ஆசிரியர் தன்னருகில் நிற்பதைக் கவனித்த கிறிஸ்தோபர் அப்துல்லாஹ்வுக்கு நின்றுகொள்ளச் சௌகரியமாக இடம் கொடுத்தான். அப்துல்லாஹ் அவனைப் பார்த்துப் புன்னகைத்தான். பஸ் இப்பொழுது மெதுவாக நகர ஆரம்பித்தது. சபீதாவைப் பல தலைகள் மறைத்துக் கொண்டதில் கிறிஸ்தோபர் பெரிதும் எரிச்சலுற்றான். சக வகுப்பில் படிக்கும் அவள் மேல் புரியாத ஓர் ஈர்ப்பு வந்திருந்தது. அவளது அடக்கமான அமைதி அவள்பக்கம் அவனை ஈர்த்திருக்க வேண்டும்.

நடத்துனர் இப்பொழுது பஸ்ஸின் உள்ளே வந்து முன்னிருக்கையிலிருந்து சில்லறைகளை வசூலிக்க ஆரம்பித்திருந்தார். சாரதி தண்ணீர்ப் போத்தலை எடுத்து வாய்க்குள் ஊற்றிக் கொண்டே பஸ்ஸை இயக்கிக் கொண்டிருந்தார். பஸ் அதன் வழமையான பாதையின் இரண்டாவது சந்தியைத் தாண்டிய கணத்தில்தான் பஸ்ஸிற்குள் அதி சக்திவாய்ந்த அந்தக் குண்டு வெடித்து அனைவரும் பலியானதாக மாலைச் செய்தியறிக்கையில் சொன்னார்கள்.

-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

Monday, September 1, 2008

விட்டில் பூச்சிகள்

நானும் அம்மாவும் வைத்தியசாலைக்குப் போவதற்குத் தயாரானோம். யசோதா அத்தையை பெரும் களேபரத்துக்கு மத்தியில் வைத்தியசாலையில் அனுமதித்திருந்தார்கள். நான் எனது பச்சை நிற ரப்பர் செருப்பினை அணிந்துகொண்டேன். அம்மாவுக்குச் செருப்பணியும் பழக்கம் கிடையாது. மழையோ, வெயிலோ எந்தக் காலநிலையானாலும் அம்மா செருப்பணிவதில்லை. ஆனாலும் அம்மாவிடம் செருப்புச் சோடியொன்று இருக்கிறது. அதனை அம்மா யாருடைய வீட்டிலாவது கல்யாணத்துக்கு அழைத்திருந்தால் அணிந்துகொண்டு போவாள். அங்கும் சமையல் வேலைகளை அவள்தான் பார்த்துக் கொள்ளவேண்டியிருக்கும். அணிந்துசெல்லும் செருப்பினை சமையலறையின் மூலையில் கழற்றிவைக்கும் அவள் எல்லா வேலைகளும் முடிந்ததன் பின்னால் மீண்டும் செருப்பினை அணிந்துகொண்டு மணப்பெண், மாப்பிள்ளையைப் பார்த்துவிட்டு வருவாள். அவள் வீடு வரும் போது சாப்பாட்டின் மிச்சம்மீதிகளையெல்லாம் ஒரு காகிதப்பெட்டியில் போட்டு எங்களுக்காக எடுத்துவருவாள்.

அம்மா ஆகாய நீல சேலையொன்றை அணிந்துகொண்டிருந்தாள். எல்லாப் பயணங்களுக்கும் இதே சேலைதான். எங்காவது உடுத்திக் கொண்டுபோய் அழுக்காகி விடும் நாளில் வீட்டுக்கு வந்த உடனேயே கிணற்றடியில் கொண்டு போய் அலசிக் கழுவி காயவைத்து எடுத்து மடித்து வைப்பாள். சாதாரணமாக வீட்டிலோ, கூலி வேலைக்குச் செல்லும் நாட்களிலோ மேற்சட்டையும், சீத்தைத் துணியும் மட்டும்தான்.

யசோதா அத்தை எங்கள் வீட்டுக்கருகில் வந்து குடியிருக்கத் தொடங்கி அப்பொழுது ஆறுவருடங்களாகி விட்டிருந்தது. எனது மாமா, அம்மாவின் தம்பி எங்கோ தூர இருந்த நகரமொன்றிலிருந்து பதினெட்டு வயதுகளிலிருந்த அவரைத் தன்னோடு கூட்டிவந்திருந்தார். ஆரம்பத்தில் அம்மாவுக்கு இது பிடிக்கவில்லை. பின்னர் போகப் போக யசோதா அத்தையின் நற்குணங்கள் அம்மாவை அவர் பக்கம் ஈர்த்தது.

அவர் வந்த சில மாதங்களில்தான் நான் பிறந்தேனாம். வைத்தியசாலையில் நிரப்பிக் கொடுக்கவேண்டிய பிறப்புச் சான்றிதழ் பத்திரத்தை அவள்தான் பூரணப்படுத்திக் கொடுத்தாளாம். நன்றாகப் படித்த பணக்கார வீட்டுப் பெண். அவளது வீட்டில் சாரதியாக வேலை செய்துகொண்டிருந்த எனது மாமாவிடம் தன் மனதைப் பறிகொடுத்து அவளது நகை, உடுபுடவைகள் அனைத்தையும் சுற்றி எடுத்துக் கொண்டு மாமாவுடன் வந்து ஒருநாள் விடிகாலையில் எமது வீட்டுக்கதவைத் தட்டியிருக்கிறார்கள். கதவைத் திறந்த அம்மாவுக்கு முதலில் ஒன்றும் புரியாமல் பிறகு புரிந்து தன் தம்பியைத் திட்டித் தீர்த்திருக்கிறார். அப்பாதான் சமாதானம் செய்து இருந்த ஒரு அறையையும் அவர்களுக்கு ஒழுங்குபடுத்திக் கொடுத்திருக்கிறார்.

தனது மகள் , வீட்டுவேலைக்காரனோடு ஓடிப் போய்விட்ட சங்கதி அறிந்ததும் அவள் வீட்டில் அவளைத் தலைமுழுகி விட்டிருந்தனர். அவர்கள் உயர்சாதிக்காரர்கள். பெரும்பணக்காரர்கள். இந்தத் தீட்டை அவர்களுக்குள் பூசிக் கொள்ளவிரும்பவில்லை. ஆனால் யசோதா அத்தையிடம் இது குறித்தான எந்தப்பெருமையையும் காணமுடியாது. மிக இயல்பாக இருந்தாள். என்னை அம்மா வளர்த்ததை விடவும் யசோதா அத்தை வளர்த்ததுதான் அதிகம்.

அம்மா எந்நாளும் போல வீட்டில் இருக்கமாட்டாள். பெரிய இடத்து வீட்டுவேலைகள், கூலிவேலைகள் இப்படி ஏதாவதொரு வேலை அவளைத் தேடி தினசரி வந்துகொண்டே இருக்கும். யசோதா அத்தைதான் என்னை அன்பாகப் பார்த்துக் கொண்டாள். கிணற்றடிக்குக் கூட்டிக் கொண்டு போய்த் தண்ணீர் இறைத்து என்னைக் குளிப்பாட்டி விடுவதிலிருந்து, அழகாக உடுத்திவிடுவதுவும், உணவு சமைத்து ஊட்டிவிடிவதுவும் அவளது வேலையாக இருந்தது. அது குறித்து அவள் என்றைக்குமே விசனப்பட்டதில்லை. இந்த வேலைகளை அவள் விருப்பத்துடனேயே ஏற்றுக் கொண்டிருந்தாள்.

மாமா, திரும்பவும் ஒரு தொழிலுக்காக அலைந்துகொண்டிருந்தார். கிராமங்களில் பெண்களுக்கு எளிதாகக் கிடைக்கும் கூலிவேலைகள் கூட ஆண்களுக்குக் கிடைப்பதில்லை. நான் பிறந்து சில மாதங்களில் மாமா, அத்தையின் நகைகளை விற்று எமது வீட்டுக்கு அண்மையிலிருந்த அவரது பூர்வீகக் காணியில் ஒரு சிறிய மண்குடிசையொன்றைக் கட்டிக் கொண்டார். அதுவரையில் எனது வீட்டில் தங்கியிருந்த அவர்கள் அன்றிலிருந்து அந்தக் குடிசையில் தங்கள் வாழ்க்கையைத் தொடர்ந்தனர். நான் பெரும்பாலும் அவர்களுடனேயே வளர்ந்தேன்.

எங்கள் வீடு இருந்த மேட்டுப்பகுதியிலிருந்து குறுக்குவழியால் பிரதானவீதிக்கு நடந்தோம். அன்றும் இதே நேரம் தான். உடம்பெல்லாம் எரிந்த நிலையில் உயிர் மட்டும் மிச்சமிருக்க யசோதா அத்தை வேதனையில் ஓலமிட்டார். இதே பாதையில்தான் அவரைப் பாயொன்றில் கிடத்தி நாலுபுறமும் நான்கு அக்கம்பக்கத்து ஆண்கள் தூக்கிவந்து வைத்தியசாலையில் சேர்த்துவிட்டிருந்தனர். வைத்தியசாலைக்கு உடனே போனபோதும் யசோதா அத்தையைப் பார்க்கமுடியவில்லை. அவரை சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தியிருப்பதாக வெள்ளை வெளேரென உடையணிந்திருந்த தாதியொருத்தி சொன்னாள். நானும் அம்மாவும் அங்கிருந்த வாங்கில் நீண்ட நேரம் காத்திருந்தோம். இருட்ட ஆரம்பித்த போது அங்கிருந்து வெளியேறி, இரவுச் சாப்பாட்டுக்காகப் பாண் வாங்கிக் கொண்டு திரும்பவும் பஸ் பிடித்து வீட்டுக்கு வந்த பொழுது செய்தி கேள்விப்பட்டு பக்கத்து நகர ஹோட்டல் ஒன்றில் வேலை செய்துவந்த அப்பா வந்திருந்தார். அம்மா அவரிடம் விபரம் சொல்லி அழுதாள்.

யசோதா அத்தைக்கு அதிர்ந்து பேசத் தெரியாது. அழகான பெண். எப்பொழுதுமே அவர் கண்கள் சிரிக்கும். எந்தக் கஷ்டமானாலும் முகத்தில் ஒரு புன்னகை இழையோடும். மாமாவின் பரம்பரையே அது போன்ற பெண்ணொருத்தியைப் பார்த்திருக்க மாட்டாது. தன்னைப் பள்ளிக்கூடத்துக்குக் கூட்டிவர , கூட்டிப் போக எனது மாமாவைத்தான் சாரதியாகப் போட்டிருந்தார் எனவும் அது பின்னர் காதலாக அரும்பிற்று என்றும் அம்மாவிடம் சொல்லியிருந்தாள்.

அடுத்த கிராமத்தில் மாமாவுக்கு பலகை அறுக்கும் இடமொன்றில் வேலை கிடைத்தது. காலை உணவைச் சாப்பிட்டுவிட்டு, மதிய உணவைப் பொதி செய்து எடுத்துக்கொண்டு அவர் தினமும் புறப்பட்டால் வீடுவர இரவாகிவிடும். அதுவரையில் யசோதா அத்தைக்கு நான் தான் துணை. அம்மா வேலை முடிந்து வீடுவரும் வரைக்கும் அவர் வீட்டில் விளையாடிக் கொண்டிருப்பேன். அம்மா வந்ததும், யசோதா அத்தையும் அவர் வீட்டுக்கதவைப் பூட்டிக் கொண்டு எனது வீட்டில் வந்திருப்பார். இரவில் மாமா வேலை விட்டு வரும்போது எங்கள் வீட்டிற்கு வந்து அத்தையைக் கூட்டிப் போவார். அப்பொழுது அவரிடமிருந்து கடுமையான சாராய வீச்சமடிக்கும்.

அவர்கள் தங்கள் வீட்டுக்குப் போன கொஞ்ச நேரத்திலேயே தாறுமாறான சத்தங்கள் அந்த வீட்டிலிருந்து கேட்கத் துவங்கும். யசோதா அத்தை அடிவாங்கிச் சிவந்திருப்பாள். போதையிலிருக்கும் மாமாவுக்குக் கோபம் வந்தால் கையில் எது கிடைத்தாலும் அதைக் கொண்டு அடிப்பார். யசோதா அத்தை கைகூப்பி மன்றாடுவாள். அவளது பெற்றோர்கள் கூட அவளை இதுவரை அடித்திருக்கமாட்டார்கள். முதல் கொஞ்ச நாளுக்கு அம்மா ஓடிப் போய் என்னவென்று விசாரித்துத் தடுத்தாள். பின்னர் அது வழமையாகி விட்டிருந்தது.

மாமாவுக்கு இன்னுமொரு பெண்ணிடம் தொடர்பு இருந்தது என யசோதா அத்தை சந்தேகப்பட்டாள். அம்மாவிடம் அது பற்றிக் கதைத்தபோது அம்மா யசோதா அத்தையைத் திட்டினாள். தன் தம்பியோ, தனது பரம்பரையோ அப்படிப்பட்டதல்ல என உறுதியாகச் சொன்னாள் அம்மா. ஆனாலும் யசோதா அத்தை தனது சந்தேகத்துக்குரிய காரணிகளை எடுத்துச் சொன்னாள். தான் கணவனுக்குச் சமைத்துக் கட்டிக் கொடுக்கும் சாப்பாட்டுப் பொதிகள் ஒருநாள் அவர்கள் போகும் ஒற்றையடிப்பாதையிலிருந்த வேப்பமரத்தடியில் வீசப்பட்டிருந்ததாகச் சொன்னாள்.

அம்மாவுக்குத் தனது தம்பி மேல் சிறிதும் சந்தேகம் எழவில்லை. யசோதா அத்தையைப் போல் அழகான பெண் இந்தச் சுற்றுவட்டாரத்திலோ, பக்கத்துக் கிராமங்களிலோ இருக்கமாட்டாள் என்பது அவளது உறுதியான நம்பிக்கையாக இருந்தது. அவளை விட்டுவிட்டு இன்னுமொரு பெண்ணைத் தன் தம்பி நினைத்துக் கூடப் பார்க்கமாட்டான் என யசோதாவிடம் உறுதிபடக் கூறினாள்.

யசோதா அத்தையின் மனது ஓரளவு சமாதானமாகிவிட்டாலும் தொடர்ந்த மாமாவின் நடவடிக்கைகள் சந்தேகத்தைக் கிளறியபடியே இருந்தன. சில தினங்கள் மாமா வேலைக்குப் போனால் இரவில் வீட்டுக்கு வருவதில்லை. அத்தினங்களில் யசோதா அத்தை அவருக்காகக் காத்திருந்து காத்திருந்து எங்கள் வீட்டில்தான் தூங்கிப் போவாள். அவர் தன் வீட்டுக்கு வந்தநாட்களிலும் அவர்கள் சண்டையிட்டுக் கொள்ளும் சத்தங்கள் எங்கள் வீட்டுக்குக் கேட்கும்.

அன்று அம்மா வேலைக்குப் போகவில்லை. மாமாவை வேலைக்கு அனுப்பிவிட்டு யசோதா அத்தை எங்கள் வீட்டில் வந்திருந்தாள். தனக்கு நன்றாகத் தையல் வேலை தெரியும் எனவும், யாராவது கொஞ்சம் பணம் தந்தால் ஒரு தையல் மெஷின் வாங்கி ,வீட்டிலிருந்து துணிமணி தைத்துக் கொடுத்துச் சம்பாதிக்கலாம் எனச் சொல்லிக்கொண்டிருந்த வேளையில் மாமா வந்தார். நன்றாகக் குடித்து விழிகள் சிவந்திருந்த மாமா.

அத்தை, உடனே அவருடன் அவர்கள் வீட்டுக்குப் போனார். போய்க் கொஞ்சநேரத்தில்தான் அந்த மரண ஓலம் கேட்டது. நாங்கள் எல்லோரும் ஓடிப்போய்ப் பார்த்தபொழுது அத்தை தன்னுடலை எரித்துக் கொண்டிருந்த தீக்கு மத்தியிலிருந்து அலறிக் கொண்டிருந்தாள். .தன்னைக் காப்பாற்றும்படி ஓலமிட்டுக் கொண்டிருந்த அத்தையின் குரல் அயலிலிருந்தவர்களையெல்லாம் அவள் வீட்டுக்குக் கூட்டி வந்திருந்தது. மாமா எங்கோ தப்பிவிட்டிருந்தார்.

பார்வையாளர் நேரமென்பதனால் வைத்தியசாலை நிரம்பிவழிந்து கொண்டிருந்தது. நோயாளிகளைப் பார்வையிட வந்தவர்கள் நோயாளிகள் அருகில் அவர்களுக்கு உணவூட்டிக்கொண்டும் நலம்விசாரித்துக் கொண்டுமிருக்க, அம்மா அவர்களுள் யசோதா அத்தையைத் தேடினாள். பெண்கள் பகுதிக்குப் பொறுப்பாக இருந்த பெரிய தாதியிடம் விசாரித்தோம்.யசோதா அத்தை அவசரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தாள்.

யசோதா அத்தையின் உடல் முழுதும் வெள்ளைப் பருத்தித் துணியினால் மூடப்பட்டிருந்தது. அவளது முகத்தைப் பார்த்து அதிர்ந்தேன். அழகான சிவந்த முகம், காதுமடல் என முழுதும் கருகி அதன் மேல் மஞ்சள் களிம்பு ஏதோ பூசப்பட்டிருந்தது. சேலைன் திரவம் சொட்டுச் சொட்டாக அவர் உடம்பில் ஏறிக்கொண்டிருந்தது. அம்மா பார்த்து விசும்பினாள். அம்மாவின் விசும்பல் கேட்டு அத்தை கண் திறந்தாள். வலிக்கிறதெனச் சொல்லி முனகினாள். பூசியிருந்த மஞ்சள் களிம்பின் மேலால் அத்தையின் கண்ணீர் ஓடியது.

நாங்கள் அத்தையைப் பார்த்துவிட்டு வரும்பொழுது வைத்தியசாலை வாயிலில் அப்பா எதிர்ப்பட்டார். அவரும் ஹோட்டலிலிருந்து நேராக அத்தையைப் பார்க்கவந்திருந்தார். பார்வையாளர் நேரம் முடிந்துவிட்டிருந்த காரணத்தால் அவரால் உள்ளே வரமுடியவில்லை. அம்மா, அவரிடம் நடந்த விபரங்களைச் சொல்லிக் கொண்டே வந்தார்.

அன்று மாமா அத்தையிடம் அவரது காதணியைக் கேட்டுச் சண்டை பிடித்திருக்கிறார். அத்தை கொடுக்க மறுக்கவே போதையின் பிடியிலிருந்த அவர் அத்தையின் மேல் மண்ணெண்ணெய் ஊற்றி எரிய விட்டுவிட்டு ஓடித் தப்பியிருக்கிறார். காலை வைத்தியசாலைக்கு வாக்குமூலம் பெற வந்த பொலீஸாரிடம் குடும்பப் பிரச்சினை காரணமாகத் தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டதாக சொல்லியிருக்கிறாள் யசோதா அத்தை. அன்று மாலை நானும் அம்மாவும், அப்பாவும் அவரைப் பார்க்கப் போனபொழுது அத்தை இறந்துவிட்டிருந்தாள்.

அதன் பின்னர் சடங்குகள் எல்லாம் சம்பிரதாயமாக நடந்தன. அத்தையின் பெற்றோருக்குத் தகவல் அனுப்பியும் யாரும் வரவில்லை.அன்று ஓடிப்போன மாமாவும் வரவேயில்லை. அவரைப் பற்றிய தகவல்கள் கூடக் கிடைக்கவில்லை. அருகிலிருந்த நீர்வீழ்ச்சியொன்றிலிருந்து அவரது வயதினை ஒத்த ஒருவரது சிதிலமடைந்த உடல் கண்டெடுக்கப்பட்ட பொழுது மாமா தான் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என ஊருக்குள் பேசிக் கொண்டார்கள். அம்மா அதற்கும் ஒரு பாட்டம் அழுதுதீர்த்தாள். பின்னர் எல்லாக் கண்ணீரும் வற்றிப் போன ஓர்நாளில் அம்மாவும், அப்பாவும், நானும் சேர்ந்து மாமாவும், யசோதா அத்தையும் வாழ்ந்து வந்த குடிசையினைத் துப்புரவாக்கி, ஒழுங்குபடுத்தினோம். அம்மா அவர்களது குடிசையினைப் பூட்டிச் சாவியினை எடுத்து வைத்துக் கொண்டாள்.

இது நடந்து ஒரு வருடமிருக்கும். ஒரு விடிகாலையில் வீட்டுக் கதவு தட்டப்பட்டது. அம்மாதான் கதவு திறந்தாள். வாசலில் மாமாவும், கரங்களில் மாமாவின் சாயலையொத்த இரு வயதுக் குழந்தையோடு பதினெட்டு வயதுகளிலான ஒரு பெண்ணும் நின்றிருந்தனர்.


- எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.