Tuesday, November 18, 2008

ஒரு தினக் குறிப்பு

நீண்ட நாட்களுக்குப் பிறகு அவன் பற்றிய ஒரு செய்தி அறிகிறேன். மிகுந்த கனமுடைய அச்செய்தி என் அறை முழுதும் நிரம்பிப் பார்க்கும் இடமெல்லாம் ஆழ்சிந்தனையைத் தோற்றுவித்தபடி சிதறிக் கிடக்கிறது. அச்செய்தியைத் திரும்பவும் திரும்பவும் கேட்டுவிடத் திராணியற்றவளாக என்னை உணர்கிறேன். நான் அழுகிறேனா? சொல்லத் தெரியவில்லை. கண்கள் கலங்கியுள்ளன. ஆனால் கன்னங்களில் வழிந்தோடவோ, சிறு விசும்பல்களை உடைப்பதாகவோ இல்லை.

எனதிப்போதைய கண்கள் பொய் சொல்கின்றன. மனதின் விசித்திரக் கோலங்களை முன்னைப்போல ஒழுங்கான விம்பங்களாக அவை காட்டுவதில்லை. சில சமயங்களில் மனது அழும்போதுகூட என்னிரு கண்களும் சிரித்தபடியேயிருக்கின்றன. சில சமயங்களில் உதடுகளில் தோன்றும் சிரிப்பு பொய்யாக இருப்பதைக் கூட உணர்கிறேன். எனது சுயத்திற்கேற்ப, சூழலுக்கேற்ப, சுற்றியிருப்பவர்களுக்கேற்ப நான் நடிக்க வேண்டியவளாக இருக்கிறேன் என்பதனை எனது வதனமும் அதன் பாகங்களும் உணர்ந்தே இருக்கின்றனவோ என்னவோ ?

இன்று எதிலும் ஒரு பற்றற்றவளாக இக்கணங்களைக் கடந்தபடியிருக்கிறேன். அவனது அல்லது அவன் பற்றிய பழைய ஞாபகங்களை மீட்டிப் பார்க்க நினைக்கிறேனா ? அல்லாவிடில் ஏன் வழமையைப் போல இந்நேரத்தின் எனது தேவையான ஒரு தேனீரை ஊற்றவோ, அத் திரவத்தின் ஒவ்வொரு மிடறாகப் பருகியபடி அந்தியின் வண்ணத்தை ரசிக்கவோ மறந்தபடி படுக்கையில் உடலைப் பரப்பி விட்டத்தை வெறித்தபடி இருக்கிறேன் ?

உயிர் பிழைத்த தீப்பற்றிய தேகமொன்றுக்கு மயிலிறகால் களிம்பிடப்படுவதைப் போல எல்லாக் காயங்களையும் காலம் தடவித்தடவி ஆற்றிவிடுகின்றது. தழும்புகள் மட்டும் ஆற்றப்படுவதாகவோ, முழுவதுமாக அகற்றப்படுவதாகவோ இல்லை. வாழ்க்கை ஒரு ஒழுங்கான பாதையில் பயணித்தபடி இருக்கும்பொழுது மட்டும் எப்பொழுதாவது ஓர் நிமிடம் பழைய தடங்களை நினைவில் கொண்டுவந்து ' ஒரு பெரும் வலியைக் கடந்துவந்தவள்' எனச் சந்தோஷிக்கச் சொல்லும் மனம். அக்கணங்களில் மனது தன்னம்பிக்கையால் நிரம்பி வழியும். எவ்வலியையும் தாங்கச் சக்திபெற்றவள் என்ற எண்ணங் கொள்ளவைக்கும். அப்படிப்பட்ட எண்ண அலைகள் மிகுந்திருந்த பொழுதொன்றில்தான் எனது திருமணத்திற்குச் சம்மதித்தேன்.

என்ன விசித்திர மனமிது? என் துணை பற்றி மட்டுமே எண்ண வேண்டிய இதயம் இன்று அவன் நினைவுகளைக் கிளறியபடி இருக்கிறது. அவன் பற்றிய செய்தியைச் சுமந்துவந்த வார்த்தைகளை நான் ஏன் என் காதுக்குள், இந்த அறைக்குள் தொலைபேசியின் துளைகள் வழியே நழுவவிட்டேன்? அவன் பற்றி வந்த இத்தகவலை நல்ல தகவல் அல்லது கெட்ட தகவல் எவ்வகையில் பொருத்திப்பார்ப்பது என்றே தெரியாதவளாக நான் இருக்கிறேன்.

எம்மிருவருக்குமிடையில் ஒரு இறந்தகாலம் இருந்தது. அதில் அவன் என் நேசனாகவும் ஒரு நல்ல நண்பனாகவும் இருந்திருக்கிறான். அந்த நுனியைப் பற்றிப் பிடித்தபடி நான் இப்பொழுது அவனது நினைவுகளை இழுத்துக் கொண்டிருக்கிறேனா? அல்லது அவன் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளை, நினைவுகளை முழுவதுமாக மறந்துவிட்டேனா என என்னையே நான் சோதித்துக் கொண்டிருக்கிறேனா ? அல்லது நானும் அவனைக் காதலித்தேனா ?

ஐந்து வருடங்களுக்கு முன்னதாக என் மனப்பிம்பத்தில் பதிந்திருக்கும் உருவத்தின்படி, அவன் அழகன். அழகன் என்ற ஒற்றைச் சொல்லுக்குள் அவனை அடக்கி விட முடியாது எனினும் வேறுவழியில்லை. கம்பீரமானவனாகவும், உயரமானவனாகவும் ஏன் தேவதைப் பெண்கள் கூட வரிசையில் நின்று அவனை அள்ளிப் போவதற்குத் தயாராகும் தோற்றத்திலும் அவன் இருந்தான். ஒரு குழந்தையைப் போன்ற மனமுடையவனாக அவன் இருந்தான். அவனது நாட்களின் ஒவ்வொரு துளியையும் என்னிடம் ஒப்புவிப்பவனாக இருந்தான். அவனது உதடுகள் என்னிடம் உதிர்த்த சொற்களில் பொய்கள் இருக்கவில்லை. கபடங்கள் இருக்கவில்லை. எந்த எதிர்பார்ப்புகளும் கூட இருக்கவில்லை. எனினும் ஒரு சிறுகுழந்தை தனது உலக ஆச்சரியங்களைத் தன் தாயிடம் ஒப்புவிப்பதைப் போல அவனும் என்னிடம் ஒப்புவித்தபடி இருந்தான்.

இருவரும் ஒரே இடத்தில்தான் வேலை பார்த்தோம். அவனுக்கு மிகவும் பொறுப்பான வேலை. நான் அவனது உதவியாளாகச் சேர்ந்திருந்தேன். அன்பான மொழிகளில் வேலைகளைப் பற்றிச் சொல்லிக் கொடுத்ததில் அவனை எனது நண்பனாக ஏற்றுக் கொள்வதில் எனக்குச் சிரமமேற்படவில்லை. வேலை நேரங்கள் தவிர்ந்து நான் தங்கியிருந்த பெண்கள் விடுதி வரை அவன் தனது வாகனத்தில் என்னைக் கொண்டுவந்து விட்டுப் போகிறவனாகவும் இருந்தான். ஒரு கம்பீரமான மேலாளர் எனக்குச் சாரதி வேலை பார்ப்பதில் நான் கர்வப்பட்டேனோ என்னமோ? மறுக்கவில்லை.

சில நேரங்களில் கவிதையெனச் சொல்லிக்கொண்டு நான் கிறுக்குபவைகள் அவனுக்குப் பிடித்திருந்தன. சொல்லச் சொல்ல, சில நேரங்களில் சொல்லச் சொல்லியும் கேட்பான். அலை நுரைத்துக் கரையிலடிக்கும் கடற்கரையோரம் மாலை நேரங்களில் அவனிடம் கவிதை சொல்லியபடி அந்தியை ரசிப்பது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இப்பொழுதும் பிடிக்கும். எனினும் அருகினில் கடலோ, கவிதை ரசிக்கும் துணையோ எனக்கு வாய்க்கவில்லை.

அவனது பிறந்தநாளொன்றின் போது, நினைவிருக்கிறது. அது அவனுடைய இருபத்தி ஏழாம் பிறந்தநாள். முதன்முதலாக அவன் வசித்த வீட்டுக்கு அழைத்தான். சம்மதித்த பின்னர் அந்த விடுமுறை நாளில் அவனே விடுதிக்கு வந்து அழைத்துச் சென்றான். அன்று நான் வெள்ளை நிற உடையில் இருந்ததாக நினைவிலிருக்கிறது. அவ்வீட்டில் அவனை விடவும் மிகுந்த அன்புடையவர்களாக அவனது பெற்றோரை நான் கண்டேன். ஒரு தேவதையைப் போல இருப்பதாக அவனது அன்னை என் காதில் கிசுகிசுத்தார். அக்கணம் தொட்டு நானும் அவரை அம்மா என்றழைக்கலானேன்.

எனக்கு மட்டுமாகவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிறந்தநாள் விழா அது. என்னை அவனது குடும்பத்திற்கு அறிமுகப்படுத்த பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழா அதுவெனப் பின்னாளில் அறிந்தேன். அன்றைய தினம் அங்கிருந்து, அவன் அம்மாவுக்குச் சமையலில் உதவிசெய்தேன். அப்பாவின் மூக்குக் கண்ணாடி துடைத்துக் கொடுத்தேன். அழகிய, அன்பான குடும்பமொன்றின் சூழலுக்குள் நான் ஆட்பட நேர்ந்ததையெண்ணி அன்றைய இரவில் நெடுநேரம் மகிழ்வில் விழித்திருந்தேன். பின்வந்த காலங்களில் எனது வாரவிடுமுறை நாட்கள் அவன்வீட்டில் கழிந்தன. விடுதியை விட்டு முழுவதுமாக வந்துவிடும்படி அவனது பெற்றோர் அன்பாக நச்சரித்தபடி இருந்தனர்.

விவாகரத்துப் பெற்றுத் தந்தை ஒரு தேசத்திலும், தாய் இன்னுமொரு தேசத்திலும் தத்தம் துணைகளுடன் வசித்தபடியிருக்க சிறுவயதிலிருந்தே விடுதி வாழ்க்கை பழகிவிட்டிருந்தது எனக்கு. அத்துடன் எனது சுயத்தை அல்லது சுயமரியாதை என என்னைச் சூழ எழுப்பிக் கொண்டிருந்த அரணை அக்குடும்பத்துக்காக இழக்க நான் விரும்பவில்லையோ என்னவோ, அவர்களது வேண்டுகோளை மறுத்தே வந்தேன். அதே எண்ணம்தானோ என்னவோ ஓரு அழகிய மழை நாளில் அவன் தன் காதலை என்னிடம் சொன்னபோது கன்னத்தில் அறைந்தது போல என் மறுப்பைக் காட்டமாகச் சொல்லச் செய்தது ?

'உனது நேசத்தில் பொய்யிருக்கிறது. உனது கண்களில் கள்ளமிருக்கிறது. உனது நட்பில், உனக்கு மட்டுமே எனச் சொல்லிக்கொள்ள ஒரு சுயநலமிருக்கிறது. இத்தனை நாளாக நட்பாகப் பழகியதுவும் அன்பாகப் பேசியதுவும் இதற்குத்தானா? பழகத் தொடங்கிய மூன்றாம் நாளில் ரோசாப்பூக் காகிதத்தில் இதயமும் அம்புக்குறியும் வரைந்து காதல் கடிதம் நீட்டும் எல்லா ஆண்களையும் போலவேதானா நீயும்? உன்னை மனதில் உயர்ந்த இடத்தில் வைத்திருந்தேன். இன்று அதிலிருந்து அதலபாதாளம் நோக்கி நீ குதித்துவிட்டாய். ஒரு நல்ல தோழனாகவும், நேசனாகவும் உன்னையே நினைத்தேன். இன்று ஒரு சுயநலவாதியாகவும்,பொய்காரனாகவும், நட்பிற்குத் துரோகமிழைத்தவனாகவும் ஆகிவிட்டாய்' என ஒரு நல்ல நட்பைக் கொச்சைப்படுத்துவதாகச் சொல்லி அவனை வார்த்தைகளால் இம்சித்தேன்.

இப்பொழுது புலம்பிப் பயனென்ன இருக்கிறது? என்னிடம் காதலைச் சொன்ன அவனைக் காயப்படுத்தும் நோக்கில் அல்லது எனது இருப்பையும் கருத்தையும் நியாயப்படுத்தவேண்டி முட்டாள்தனமான முடிவொன்றை அப்பொழுதில் எடுத்தேன். அவனையும், அவனது குடும்பத்தையும் நிராகரிக்கத் தொடங்கினேன். அவனுடன் நானென்ன தொழில் பார்ப்பது என்ற சுயகௌரவம் தடுக்க அவ்வேலையை உதறினேன். 'சரி. காதல் வேண்டாம். நட்பாகவே தொடர்ந்து பழகலாம்' எனத் திரும்பத் திரும்ப விடுதிவரை தேடி வந்த அவனது அன்பை காவல்காரனைக் கொண்டு விரட்டியடித்தேன். அவ்வளவு வதை செய்ய அவன் செய்த தவறுதான் என்ன? இப்பொழுது நினைத்துப் பார்த்தால் ஒன்றுமில்லை. ஆமாம் ஒன்றுமேயில்லை.

அந்த நேரத்தில் எனக்கென்ன தேவையாக இருந்தது ? பணமா? இல்லை. எனது மூலங்கள் வசிக்கும் இரு தேசங்களுக்கும் ஒரு மின்னஞ்சல் அனுப்பினால் அது தேவைக்கும் அதிகமாகக் கிடைக்கும். பிறகு தொழில் ? இல்லை. படித்திருக்கும் படிப்பு வேறு நல்ல தொழில்களை இலகுவாகத் தேடித்தரும். பிறகென்ன ? அன்புதானே ? எனது கிறுக்கல்களைப் பாராட்டவும், எனது துயரங்களைச் சொல்கையில் தோள்கொடுத்துத் தலை தடவவும் ஒரு ஜீவன் தானே? அந்த அன்பு அவனிடம் மிகைத்திருந்த பொழுது ஏன் அதை நிராகரித்தேன்? நட்பு என்ற முலாம் பூசிய காதலின் சுயநல உருவம் என அவனைத் தப்பாக நினைத்ததுதான் அவனை, அவனது அன்பான குடும்பத்தை நிராகரிக்கத் தூண்டியதா? இல்லாவிடில் அனேகமாகச் சந்திக்க நேர்ந்த ஆண்கள் அனைவரும் போல எனதழகையும், தனித்திருக்கும் அவலத்தையும் கண்கொத்திப் பாம்பாக நோக்கிக் காதல் விண்ணப்பம் விடுத்ததில் காதல் மேல் எனக்கிருந்த வெறுப்பா?

எதுவோ ஒன்று. என்னையும் அவனையும் பிரித்திற்று. அவனைப் பழிவாங்குவதாக நினைத்து எனது தோழியொருத்தியின் அண்ணனொருவனைக் காதலித்து ஆமாம் நானே வலியப் போய்க் காதலித்துத் திருமணம் செய்துகொண்டேன். எனது அம்மாவுக்கும், அப்பாவுக்கும் இரு நாட்கள் கழித்து மின்னஞ்சலில் தகவல் சொல்லி அதிலேயே வாழ்த்துக்களும் பெற்றேன். எனது திருமணத்திற்கு அவனையோ, அவனது குடும்பத்தையோ ஒரு சம்பிரதாயத்துக்குக்கூட அழைக்கவில்லை. ஆனால் அவன் அழைத்தான். ஒரு ஏழைப்பெண்ணுக்கு எளிமையான முறையில் அவன் வாழ்வளித்தபொழுது எந்தவித அதிருப்திகளோ, பகைமை உணர்ச்சியோ இன்றி அவன் அழைத்தான். நான் செல்லவில்லை. அழைப்பிதழை பல நூறு துண்டுகளாகக் கிழித்தெறிந்தேன். அவனுக்குச் சமமாக அந்த ஏழைப் பெண்ணைக் காணத் திராணியற்று அல்லது நானமர்த்தப்பட வேண்டிய மணமேடையில் மங்களங்கள் சூழ இன்னொருத்தி அமர்ந்திருப்பதைப் பார்க்கச் சகிக்காமல் நான் அப்படிச் செய்ததாக இன்று என்னால் நியாயம் கற்பிக்கமுடியும். எனினும் அன்றைய நாளில் முழுத்தவறும் செய்தவள் நானாகிறேன். இப்பொழுதும் வருந்துகிறேன்.

எல்லாம் நடந்து முடிந்து இன்று ஐந்து வருடங்களாகின்றன. பனி பொழியும் ஐரோப்பிய தேசமொன்றில் இயந்திர மகளாகத் தொழில்செய்து கொண்டு முரட்டுக்கணவனோடு வாழ்ந்துவருமெனக்கு அவனைப்பற்றிக் கிடைத்த தகவலைத்தான் இந்நாட்குறிப்பில் எழுதி வைக்க நினைக்கிறேன். இழந்த நாட்களின் குறிப்புக்கள் வானத்தில் சஞ்சரித்தபடியே இருக்குமோ? எல்லாவற்றையும் மீட்டெடுத்து எழுத்துக்களில் வார்த்துச் சேமிக்க முடியுமோ? இந்தக் குறிப்புகளை எழுதிவைப்பதன் மூலம் அவனது நினைவுகளை பின்னொரு காலத்தில் மீட்டிப்பார்க்க விரும்புகிறேனா? எவ்வாறாயினும் எழுதிவைக்கலாம். இனித் தவறுகள் செய்யுமிடத்து மீட்டிப்பார்த்துத் தவறுகளைத் தவிர்க்கலாம். எழுதி முடித்த பின்னர் துணையின் பாசம் வரண்ட விழிகளிலிருந்து இந்நாட்குறிப்பை, இவ்வெழுத்துக்களை எப்படிப் பாதுகாப்பதெனப் பின்னர் யோசிக்கலாம். எழுதத் தொடங்குகிறேன்.

15.11.2008

முன்னர் வேலை பார்த்த அலுவலகத் தோழி இன்று மாலை தொலைபேசியில் அழைத்தாள். அவன் வேலையை விட்டு நீங்கிவிட்டானாம். மிகுந்த சம்பளத்துடனான வேலையை விட்டு நீங்கியதற்குக் காரணம் என்னவெனத் தெரியவில்லை என்றாள். அத்துடன் அவனது ஒரே குழந்தைக்கு என் பெயர் வைத்திருக்கிறான் என்ற தகவலையும் சொன்னாள். நீண்ட நாட்களுக்குப் பிறகு அவன் பற்றிய ஒரு செய்தி அறிகிறேன். மிகுந்த கனமுடைய அச்செய்தி என் அறை முழுதும் நிரம்பிப் பார்க்கும் இடமெல்லாம் ஆழ்சிந்தனையைத் தோற்றுவித்தபடி சிதறிக் கிடக்கிறது. அச்செய்தியைத் திரும்பவும் திரும்பவும் கேட்டுவிடத் திராணியற்றவளாக என்னை உணர்கிறேன். நான் அழுகிறேனா? சொல்லத் தெரியவில்லை. கண்கள் கலங்கியுள்ளன. ஆனால் கன்னங்களில் வழிந்தோடவோ, சிறு விசும்பல்களை உடைப்பதாகவோ இல்லை.....


- எம். ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

Saturday, November 1, 2008

நேபாளத்து அம்மா

அதிகாலையில் வந்திருந்த தொலைநகல் ஒரு துயரச் செய்தியைச் சுமந்துவந்திருந்தது. கிஷோரின் தாயார் சுகவீனமுற்றுத் தனது அந்திம நிலையில் இருப்பதாகவும் தனது மகனைப் பார்க்க விரும்புவதாகவும் எழுத்துக்களில் கோர்த்திருந்த அந்தச் செய்தியை இன்னும் அவனுக்குத் தெரிவிக்கவில்லை.

கிஷோர் ஒரு நேபாள தேசத்தவன். அலுவலக உதவியாளாக இந்த நாட்டுக்கு வந்திருக்கிறான். அவனது வேலைகளும், நேர்த்தியும், சுறுசுறுப்பும் அலுவலகத்தில் எல்லோருக்கும் பிடித்திருந்தது. பொதுவாகவே நேபாளிகளிடத்தில் சுத்தத்தையும் நேர்த்தியையும் காணக் கிடைப்பது அரிது. எனினும் இரண்டுமே இவனிடம் மிதமிஞ்சியிருக்க அதனாலேயே எல்லோருக்கும் பிடித்தமானவனாகவும் இருந்தான்.

கிடைக்கும் சிறிய ஓய்விலும் எதையாவது எழுதிக் கொண்டே இருப்பான். பெரும்பாலும் அவை வீட்டுக்கு எழுதும் கடிதமாகவோ அல்லது அவனது தனிப்பட்ட வரவுசெலவுக் கணக்காகவோ இருக்கும். எப்படியும் மாதத்திற்கு இரண்டு கடிதம், ஒரு பண டிராப்ட் அனுப்பிவிடுவான். அக்கடிதங்கள் அவனது மனைவிக்கு எழுதப்படுவன.அவனுக்கு எட்டு வயதுக்குக் கீழே இரண்டு குழந்தைகள். இளைய குழந்தையின் மூளை வளர்ச்சி குன்றியிருப்பதோடு நடக்கவும் இயலாமையினால் தனது மனைவி கூலி வேலைகள் எதற்கும் செல்வதில்லையெனச் சொல்லியிருக்கிறான்.

நேபாளக் கிராமங்களில் அனேகமாகப் பெண்களே குடும்பப்பொறுப்பைத் தலையில் சுமந்தபடி வாழ்கிறார்கள். விவசாயம், தறி நெய்தல், சமைத்தல், குழந்தை வளர்ப்பு எனப் பெறும் பொறுப்புக்களை பெண்கள் தலையில் சுமத்தி விட்டு அக்குடும்பங்களின் ஆண்கள் வெட்டியாகப் பொழுதுபோக்குவார்கள். எண்ணிச் சிலரே இப்படியாகத் தன் குடும்பப் பொறுப்பை உணர்ந்து அயல் தேசங்களை அண்டிப் பாடுபட வருகிறார்கள். எவ்வாறாயினும் நேபாளத்தில் ஆண்களுக்குப் பெறும் மதிப்பு இருப்பதாகக் கிஷோர் சொல்லியிருக்கிறான்.

ஒரு ஆண்குழந்தை பிறந்தவிடத்துக் கொண்டாடப்படும் விழாக்கள் தொடங்கி அவனது திருமணம், இறப்பு எனப் பல பருவங்களும் பலவிதமாகக் கொண்டாடப்படுகின்றன. பெண்களுக்கு அது போலச் சடங்குகள் அங்கே குறைவு. பொதுவாகப் பெண் குழந்தை பிறந்தால் குடும்பத்துக்காக உழைக்க இன்னொரு உயிர். அவ்வளவுதான். அது தவிர்த்து அவளுக்கு அங்கே வேறு மதிப்பு கிடையாது. ஒரு ஆணுக்கு ஒன்று, இரண்டு, மூன்றெனப் பல பெண்களை மணமுடிக்கலாம். அவனது தொழில் பற்றியெதுவும் விசாரிக்கப்பட மாட்டாது.

அவ்வாறான கிராமமொன்றிலிருந்துதான் தனது குடும்பப் பொறுப்பை உணர்ந்த கிஷோர் வயது முதிர்ந்த விதவைத் தாயையும், மனைவியையும், இரண்டு குழந்தைகளையும் விட்டுவிட்டு ஐந்து மாதங்களுக்கு முன்னால் இங்கே வேலைக்காக வந்திருக்கிறான். இன்னும் சற்று நேரத்தில் வரும் அவனிடம் இந்தத் துயரச் செய்தியைக் கையளிக்கவேண்டும். அது வரையில் அச்செய்தி என் மேசையில் கனத்தது.

வெண்ணிற ஆடையில் காலை வணக்கங்களைச் சொல்லியபடி உள்ளே நுழைந்தவனை அழைத்தேன். சிரித்தவாறு நின்றிருந்தவனுக்குத் ஆங்கிலத் தொலைநகலின் துயரச்செய்தியை எளிமைப்படுத்தி விளக்கினேன். விழிகள் கலங்க வாங்கிக்கொண்டவன் தனக்கு வெளியே போய்த் தனது வீட்டுக்குக்குத் தொலைபேசி அழைப்பொன்றினை எடுத்துவர முப்பது நிமிடங்கள் அளிக்கும்படி கேட்டுக் கொண்டான். அனுமதித்தேன்.

அவசரத்துக்குப் போய் வர முடியாத கடல் கடந்த தேசங்களிலிருந்து வரும் இப்படியான துயர்செய்திகள் ஒரு கலவரத்தை மனதில் உண்டுபண்ணிக் கனக்கச் செய்வன. மனம் பதைக்கச் செய்வன. ஆண்டாண்டு காலமாகப் பேணி வளர்த்த தாய் தனது இறுதி மூச்சைத் தன் ஒற்றை மகனின் கைப்பிடித்து விடுவதில் தனது முழு வாழ்வின் மகிழ்வைக் கொண்டிருக்கிறாள். அந்நிய தேசங்களில் எழுதப்பட்ட சட்டங்களில் இருக்கிறது அவளது ஆசையின் இறுதி மூச்சு.

அவன் கட்டாயமாகப் போய்வர வேண்டும்தான். ஆயினும் அவனுக்கு விசா வழங்கிய ஷேக்கின் முடிவைப் பொறுத்துத்தான் அலுவலகம் அதற்கான ஏற்பாடுகளைச் செய்து தரும். ஒருவரின் ஒப்பந்தக்காலம் முடிந்திருப்பின் அவர் விரும்பியபடி விடுமுறையில் செல்லலாம். அதற்கும் ஒரு கால அளவு உண்டு. அல்லது திரும்ப வராமலேயே இருக்கலாம். எனினும் கிஷோரின் ஒப்பந்தக்காலம் முடிய இன்னும் ஒன்றரை வருடங்கள் இருக்க ஷேக் அவன் நாடு செல்ல அனுமதிக்காமல் இருக்கவும் சாத்தியங்கள் உண்டு. இது குறித்து நான் தான் ஷேக்கிடம் பேச வேண்டும்.

வெளியே போன இருபது நிமிடங்களிலேயே கிஷோர் திரும்பி வந்தான். அவனது தாய் ஒரு பள்ளத்தில் விழுந்து இடுப்பெலும்பு உடைந்து நகராஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பரிசோதித்த வைத்தியர் கைவிரித்து விட்டதாகவும் இறப்பதற்கு முன் தன்னைப் பார்க்க ஆசைப்படுவதாகவும் கலங்கியபடி சொன்னான். தாயைப் பார்ப்பதற்காகத் தான் உடனே செல்ல வேண்டுமென்றான். நான் ஷேக்கிடம் இதுபற்றிக் கதைத்துப் பார்ப்பதாகக் கூறினேன்.

அவனை அனுப்புவது சம்பந்தமாக ஷேக்கிடம் கதைத்தபோது இலேசில் சம்மதிக்கவில்லை. அவனது தயாரிப்பான அற்புதமான கோப்பியின் சுவையை அவர் இழக்கவிரும்பவில்லை போலும். ஒருவாறாகப் பலமுறை எடுத்துச் சொல்லிப் பதினைந்து நாட்கள் விடுமுறை பெற்றுத் தந்தாயிற்று. பதினைந்து நாட்களுக்கு மேல் அவன் விடுமுறை கேட்பானெனில் அலுவலகத்திலிருந்து அவனை வேலைநீக்கம் செய்து விசாவினை ரத்துச் செய்துதான் அனுப்பப்படுவான். இரண்டு வருடங்களுக்குள் மீண்டும் இந்த நாட்டுக்கு வரமுடியாது என ஷேக் சொல்லியிருந்தார்.

பதினைந்து நாட்கள் விடுமுறைச் செய்தியை கிஷோரிடம் சொன்னால் பெரிதும் மகிழ்வான் என எண்ணிச் சொன்னபோது அது அவனை மகிழ்விக்கவில்லை என்பது போன்ற ஒரு உணர்ச்சியை முகத்தில் காட்டினான். தனக்கு விடுமுறை போதாதெனச் சொன்னான். விசா நடைமுறைகளை எடுத்துச் சொன்னபின்னர்,

" அப்ப நான் விசாவைக் கேன்சல் பண்ணிட்டே போறேன் பொஸ் " என்றான்.

"கிஷோர், அப்படிப் போனா இரண்டு வருஷத்துக்கு உனக்கு திரும்ப இந்த நாட்டுக்கு வரமுடியாது. இது போல நல்ல சம்பளம் கிடைக்கிற வேலைக்கும் , செலவுக்கு பணத்துக்கும் என்ன செய்வே ? அம்மாவைப் பக்கத்துல இருந்து பார்த்துக்க பதினைந்து நாட்கள் போதும் தானே ?"

" அதுக்கு ஏதாச்சும் வழி பண்ணிக்குவேன் பொஸ். அம்மா இன்னிக்கு செத்தா நல்லாயிருக்குமே, அம்மா இன்னிக்கு செத்தா நல்லாயிருக்குமேன்னு ஒரு பதற்றத்தோட லீவ்ல இருக்குற பதினஞ்சு நாளைக்கும் நாட்களெண்ணிக்கிட்டு இருக்கமுடியுமா பொஸ் ? "

- எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.