Monday, October 10, 2011

காக்கைகள் துரத்திக் கொத்தும் தலைக்குரியவன்

(சர்வதேச ரீதியில் வம்சி பதிப்பகம் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசினை வென்ற சிறுகதை)
_______________________________________________

காக்கைகள் எப்பொழுதும் அவன் தலையைத்தான் குறி வைத்தன. அவன் பகல் வேளையில் வெளியே வந்தால் போதும். தெருவின் கரண்ட் கம்பிகள், தொலைபேசிக் கம்பிகளில், வேலியோரப் பூவரச மரங்களில், வீட்டுக் கூரைகளில், மீன் வாடியிலெனக் காத்திருக்கும் காக்கைகள் அல்லது ஒற்றைக் காக்கையேனும் அவனது தலையைக் குறி வைத்துப் பறந்து வந்து கொத்திவிட்டுச் செல்லும். ஒரு முறை கொத்திவிட்டுப் போன காக்கை, திரும்ப அவன் வெளியில் அலைந்து வீடு திரும்பும் வரை கொத்துவதுமில்லை, துரத்துவதுமில்லை. அவன் வீட்டுக்குத் திரும்பி, மறுபடியும் வெளியே வரும் சமயம் வந்து கொத்திவிட்டுப் பறக்கும். அதை அவன் கவனித்திருக்கிறான். ஒருமுறை கழுத்துப்பகுதியில் சிறகுதிர்ந்த, சற்று சாம்பல் நிறம் கலந்த காக்கை இப்படித்தான் செய்தது. எல்லாக் காக்கைகளும் இப்படித்தானென அதிலிருந்து அவன் புரிந்து கொண்டான். தங்களுக்குள் முறை வைத்துக்கொண்டு வந்து கொத்துகின்றனவோ என்று கூட ஐயப்பட்டான்.

காக்கை கொத்திவிட்டுப் பறக்கும்போதுதான் அவன் ஆதி முதல் கற்றறிந்த வசவு மொழிகளை வெளியில் உதிர்ப்பதைக் காணக் கிடைக்கும். ஓங்காரமான குரல், தெருவெல்லாம் அலறும். தலையைக் கொத்திப் போன வலி மறையும் வரை மிகக் கொச்சையான சொற்கள் எல்லாம் அவனிலிருந்து காக்கைகளுக்குப் பறந்துகொண்டே இருந்தன. தெருவின் பெரியவர்கள் தமக்கிடையே திட்டிக் கொண்டும், வீட்டுக் கதவு ஜன்னல்களை அடைத்தபடியும் தாங்கொணா அவனது வசவு மொழிகள் தமது வீடுகளுக்குள் நுழைந்திடாதபடி தடுத்துக்கொண்டனர். சிறுவர்களுக்கு அவனது தலையை காக்கைகள் கொத்திவிட்டுப் பறப்பது மிகப் பெரும் வேடிக்கையாயும், அவனுதிர்க்கும் சொற்கள் அவனை மீண்டும் மீண்டும் உசுப்பியும் குழப்பியும் விடப் போதுமானதாயும் இருந்தன. காக்கைகளெல்லாம் கொத்திவிட்டுப் பறந்த பின்னர் அவன் திட்டித் திட்டி ஓய்ந்து, தலையைத் தடவிய படியும், தடவிய விரல்களில் இரத்தச் சிவப்புகளேதேனும் ஒட்டியிருக்கிறதா எனப் பார்த்தபடியும் வரும்போது சிறுவர்கள் 'கா..கா' எனக் காக்கையின் மொழியைக் கத்திவிட்டு ஓடுவார்கள். அவன் விந்தி விந்தி ஓடித் துரத்துவான். அவன் ஓடுவதைப் பார்க்க, தவளையின் பாய்ச்சல் போலவும் நண்டின் நகர்வினைப் போலவும் இருக்கும்.

ஒழுங்காக ஓட முடியாமல் அவனது முழங்கால்கள் இரண்டும் பிறப்பிலேயே வளைந்திருந்தன. இன்னும் அவன் மிகவும் ஒல்லியானவன். அவனது முகம் போஷாக்கேதுமற்று மெலிந்த ஒரு இரண்டு வயதுக் குழந்தையைப் போன்று சிறியது. நெடிய இமைகளைக் கொண்ட சிறிய விழிகளைப் பார்க்கப் பாவமாகவும் இருக்கும். கருத்த சருமம் உடையவனல்ல. அதற்காக சிவப்பானவனாகவும் இல்லை. ஒரு மாதிரியாக வெள்ளைக் காகிதத்தில் செம்மண் தூசு அப்பியதைப் போன்ற வெளிறிப் போன நிறம். நெற்றியிலிருக்கும் சுருக்கக் கோடுகளை வைத்து மட்டுமே அவனது வயது முப்பதுக்கும் நாற்பதுக்குமிடையிலிருக்குமென அனுமானிக்கலாம். குட்டையானவன். வளைந்த கால்கள் அவனை இன்னும் குட்டையாகக் காட்டின. ஒருபோதும் அச் சிறுவர்கள் எவரும் அவனிடம் அகப்பட்டதில்லை.

சாதாரணமாகவே அவன் யாரிடமும் பேசுவதில்லை. எந்தக் கொம்பனாலும் அவனது நாவசைய வைத்து, வாயிலிருந்து ஒற்றைச் சொல்லை உருவியெடுக்க முடியாது. எல்லாக் கேள்விகளுக்கும் 'ஆம்,இல்லை' என்ற ஆமோதிப்பு அல்லது மறுப்புக்களைக் குறிக்கும் தலையசைவுதான் அவனிடமிருந்து வெளிப்படும். மிகவும் முக்கியமென்றால் மட்டும் கைகளால் கூடச் செய்கை செய்வான். அவனுக்கு அவர்கள் புரட்டிப் புரட்டிப் பேசும் மொழிகளெல்லாம் நன்கு தெரிந்திருந்தது. அவை அவனிடமிருந்து ஏதோ ஒன்றைக் காற்றுக்கு எடுத்துப்போவதாக நினைத்தானோ என்னவோ அவன் ஏனோ சொற்களை உதிர்க்கப் பயந்தான். ஒருவேளை அவனிடம் நிறைந்திருக்கும் சொற்களையெல்லாம் உதிர்க்க வைப்பதற்காகத்தான் காக்கைகளும் வந்து கொத்திவிட்டுப் பறக்கின்றனவோ என்னவோ? வானொலிப் பெட்டிக்கு அதன் தலையில் ஒரு அழுத்தி இருக்கும். அதை அழுத்திவிட்டால் பேசும். ஒலிக்கும். பாடும். அதுபோல அவனது பேச்சுப் பெட்டிக்கும் தலையில்தான் அழுத்தி இருப்பதாகவும் காக்கைகள் வந்து அழுத்திவிட்டுச் சென்றால்தான் அது பேசுமெனவும் குழந்தைகளுக்குக் கதை சொன்னபடி தாய்மார் உணவூட்டினர்.

அவன் ஒரு அநாதை என்றே ஊரில் எல்லோரும் பேசிக்கொண்டனர். எங்கிருந்தோ வந்து சேர்ந்தவன் அவ்வூரில் நீண்ட காலமாக வாழ்ந்து வந்தான். காக்கைகள் துரத்திக் கொத்துமெனக் கண்டறிந்த நாள் முதல் அவன் பகல்வேளைகளில் வெளியே வரத் தயங்கினான். மிக முக்கியமான தேவைகள் இருந்தால் மட்டுமே பகலில் வெளியே வருவான். அவன் அவ்வூரில் பெரிய ஹோட்டல் வைத்திருக்கும் பெரியவர் ஹோட்டலிலேயே வேலைக்கிருந்தான். அவனுக்கென்று சிறு குடிசையொன்றை ஹோட்டலுக்கருகிலேயே கட்டிக் கொள்ளும் அனுமதியைப் பெரியவர் அவனுக்கு வழங்கியிருந்தார். அவன் அதில்தான் வசித்தான். ஒரு தண்ணீர்க்குடம், இரண்டு அலுமினியப் பீங்கான்கள், ஒரு கேத்தல், ஒரு சிறுகுவளை, ஒரு சாக்குக் கட்டில், ஒரு தலையணை, இரண்டு வெள்ளைச் சாரன்கள், முன் பக்கத்தில் இரண்டு பாக்கெட்டுக்கள் வைத்த இரண்டு வெள்ளை அரைக்கைச் சட்டைகள் அவனது உடைமைகளென அக் குடிசையை நிரப்பின. அடுத்த நாள் ஹோட்டலில் வழங்கும் ரொட்டிக்காக இரவில் மா பிசைந்து ரொட்டி தயாரிப்பது அவன் வேலை. காக்கைகளுக்குப் பயந்து அவையெல்லாம் கூடடைந்த பின்னரான முன்னிரவில் அவன் ஆற்றுக்குப் போய்க் குளித்துவருவான். பிறகு ஹோட்டலுக்குப் போய் பகல் சமைத்து மீதமிருக்கும் சோற்றை உண்டு விட்டு ரொட்டி தயாரிக்கத் தொடங்குவான். வேலை முடிந்த விடிகாலையில் காலை மற்றும் பகலுணவுக்கென சில ரொட்டிகளைப் பார்சலாக எடுத்துக்கொண்டு அவன் குடிசைக்கு வந்தால் இனி அந்தி சாயும் நேரம் வரை உறக்கம்தான். உணவுக்கும் தண்ணீருக்குமென மட்டும் எழும்புபவன் மீண்டும் உறங்கிப்போவான்.

எப்பொழுதாவது மிகவும் முக்கியமாகத் தேவைப்பட்டு, பெரியவர் உத்தரவிட்டால் மட்டுமே அவன் பகல்வேளையில் வெளியே வருவான். ஒருமுறை இப்படித்தான் பெரியவர் வீட்டில் விறகு வெட்டித் தரும்படி அவனைக் கூப்பிட்டிருந்தார். வீதி தோறும் விரட்டிக் கொத்திய காக்கைகள், பெரியவர் வீட்டுமுற்ற மாமரத்தில் வசித்த காக்கைகளெனப் பல காக்கைகள் கொத்தியதில் விறகு வெட்டும்போது அவனது வியர்வையோடு சொட்டு இரத்தமும் நெற்றியிலிருந்து கோடாய் வழியலாயிற்று. வசவு மொழிகள் வாயிலிருந்து பெருஞ்சத்தமாக உதிரலாயிற்று. வீட்டின் கன்னிப்பெண்கள் யன்னல் வழி விசித்திரமாகப் பார்த்திருந்தனர். பெரியவரின் தாய்க்கிழவி அவனை விறகுவெட்ட வேண்டாமெனச் சொல்லி அவனது வீட்டுக்கு அனுப்பிவைத்தாள். அவனது சிறுவயதில் குஞ்சுகளிருந்த காக்கைக் கூடொன்றைக் கைகளால் பிய்த்தெறிந்தாகவும் அதற்காகத்தான் காக்கைகள் எப்பொழுதும் அவனைப் பழி வாங்குவதாகவும், காக்கைகள் அவனைக் கொத்துவது குறித்து ஊருக்குள் நிலவி வந்த கதையைக் கிழவி அப்பெண்களோடு பகிர்ந்துகொண்டாள். வரும்வழியில் கொத்தி ஓய்ந்த எந்தக் காக்கையும் அவனைக் கொத்தவுமில்லை. துரத்தவுமில்லை. அவன் அமைதியாகக் குடிசை வந்து சேர்ந்தான். தலையைத் தடவியபடியே உறங்கிப்போனான்.

ஹோட்டலில் வெளியே அனுப்ப ஆளில்லாச் சமயங்களில் பெரியவர் அவனை மீன் வாங்க அனுப்பிவைப்பார். அதுதான் அவனுக்கு அவனது வேலைகளிலேயே மிகவும் வெறுப்பான வேலை. மீன் வாடிக்கருகில் எப்பொழுதும் நிறைந்திருக்கும் காக்கைகள் குறித்து அவன் பயந்தான். மீனின் உதிரிப்பாகங்களைக் கொத்தித் தின்று பழகிய அவைகளின் சொண்டுகள் மிகக் கூர்மையானவை என்பதனை அவன் உணர்ந்திருந்தான். அவனைக் கண்டதும் சொண்டிலிருக்கும் உணவுப்பாகத்தைத் துப்பிவிட்டு, அவை ஒரு கடமையை நிறைவேற்றுவது போல அவனது தலையைக் கொத்திவிட்டுப் பறந்தன. சந்தைக்கு வந்திருக்கும் அவனையறியாத புதிய மனிதர்களெல்லாம் அவனை ஒரு அதிசயப்பிராணியாகப் பார்த்தனர். இடுப்பில் குழந்தைகளைச் செருகியிருக்கும் அம்மாக்கள், குழந்தைகளுக்கு அவனை வேடிக்கை காட்டினர். சந்தையிலிருக்கும் ஒரு விசித்திர, வேடிக்கைப் பொருள் என்பதுபோல அக்குழந்தைகளும் அவற்றின் கண்கள் மின்னவும், வாய் பிளந்தும், சிரித்தும் அவனைப் பார்த்து ரசித்தன.

இப்படித்தான் ஒருமுறை அவன் சந்தையிலிருந்து மீன் வாங்கி வரும்வேளை பள்ளிக்கூடச் சீருடையோடு ஒரு சிறுமி, புளியங்காட்டுக்குள் தனியாக அழுதுகொண்டிருந்ததைப் பார்த்தான். அவளது இதழ்கள் கோணி, எச்சிலும், மூக்குச் சளியும், கண்ணீரும் ஒரு சேர வடிய கைகளில் இரு புளியம்பழங்களோடு அந்த அத்துவானக் காட்டுக்குள் அவள் தனித்திருந்ததைப் பார்த்தான். நின்று அருகில் போய் என்னவென்று கைகளால் விசாரித்தான். யாருமற்ற காட்டுக்குள் வெண்ணிற ஆடையோடு கால்கள் வளைந்து குட்டையான இவனைப் பார்த்ததும் முதலில் அச்சமுற்ற சிறுமி பின்னர் தான் பழம் பறிக்க வந்து வழி தவறிப் போனதைச் சொல்லி விசித்தழுதாள். அவளை அழைத்துக்கொண்டு மீண்டும் சந்தைப்பகுதிக்கூடாக வந்து அடுத்த ஊருக்கான தெருவிலுள்ள அவளது வீட்டுக்கு அவளைக்கொண்டு சேர்த்தான். இடையில் புளிய மரக் காக்கையொன்று அவன் தலையைக் கொத்திவிட்டுப் பறந்தது. அந்தத் தெருவிலுள்ள ஒன்றிரண்டு காக்கைகளும் அவனது தலையைக் கொத்திப் பறந்தன. காக்கை பறந்துவரும் 'விஸ்க்' எனும் ஒலியைக் கேட்டபோதெல்லாம் சிறுமி விம்மியபடி திரும்பி காக்கையைப் பயத்தோடு பார்த்தவாறிருந்தாள். சில சிறுவர்கள் 'கா..கா' எனக் கத்திவிட்டு ஓடினர். மிகவும் அதிசயப்படத்தக்கதாக அவன் அச்சிறுமி முன்னால் காக்கைக்கெதிரான வசவு வார்த்தைகள் எதையும் உதிர்க்கவில்லை. அச் சிறுவர்களைத் துரத்தி ஓடத் துணியவில்லை. மௌனமாக, அத்தோடு அச் சிறுமியிடம் கேட்காமலேயே அவளது வீட்டுக்கு அவளை மிகச் சரியாகக் கொண்டு வந்து சேர்த்திருந்தான். அன்றிலிருந்துதான் ஊரில் எல்லோரையும் அவன் நன்றாக அறிந்து வைத்திருக்கிறானென்ற செய்தி ஊருக்குள் பரவியது. காக்கையன் என ஊருக்குள் அழைக்கப்படுபவன் சிறுமியைப் பத்திரமாகக் கொண்டு வந்து சேர்த்த செய்தி அவன் பற்றிய நல்லெண்ணத்தை ஊருக்குள் விதைத்தது.

அன்றிலிருந்து ஊருக்குள் அவனைக் காணும் சிலர் அவனின் நலம் விசாரித்தனர். பதில்களெதுவும் வராது எனினும் அவனைக் காக்கைகள் கொத்தாமலிருக்க வெளியே வரும்போது தொப்பி அணிந்துகொள்ளும் படியும் அல்லது காக்கைகள் பார்த்து மிரளும்படியாக மினுங்கும் ஏதாவதொரு நாடாவைத் தலையைச் சுற்றிக் கட்டியபடி வெளியே வரும்படியும் சிலர் ஆலோசனைகள் கூறினர். சிலர் பலாப்பழத்தோலைப் போல கூறு கூறாய் மேல் நோக்கி வளர்ந்திருந்த அவனது தலைமுடியினை முழுவதுமாக அகற்றி மொட்டையடித்துக் கொள்ளும்படியும், அல்லது நீண்ட கூந்தல் வளர்க்கும்படியும் கூடச் சொல்லினர். இன்னும் சிலர் இது ஏதோ செய்வினை, சூனியமெனச் சொல்லி அவர்களுக்குத் தெரிந்த மாந்திரீகர்களிடம் தாயத்து வாங்கிக் கட்டிக் கொள்ளும்படி கூறினர். அவன் எதுவும் பேசாமல் தலையை அசைத்து ஏற்றுக்கொண்டதாகச் செய்கை செய்தான். அடுத்த முறை பகலில் வெளியே வருகையில் அவர்கள் சொன்னவற்றை நடைமுறைப்படுத்தப் பார்த்தான். எதற்கும் அசையாக் காக்கைகள் அதன் பின்னால் தொப்பியைக் கொத்திப்பறந்தன. ஒரு முறை கொத்திய காக்கைகள் கூட மீண்டும் மீண்டும் சுற்றிவந்து திருப்பித் திருப்பிக் கொத்தின. கூடி நின்று ஒரு சேரக் கொத்தின. அவ்விடத்திலேயே பெருத்த ஓசையுடனான வசவு வார்த்தைகளோடு தொப்பியையும் நாடாவையும் கழுத்தில் ஏறியிருந்த கறுப்புத் தாயத்தையும் கழற்றி வீசியெறிந்தான்.

ஒரு இரவில் அவன் ஹோட்டலுக்கு ரொட்டி தயாரிக்க வராததைக் கண்டு பெரியவர் அனுப்பிய ஆள் அவனது குடிசை திறந்து தேடிப்பார்த்தான். தண்ணீர் குடத்தையும், இருந்த ஆடைகளையும் காணப் பெறாதவன் அவன் ஊரை விட்டு எங்கோ போய்விட்டதாக வந்து சொன்னான். அவனைத் தேடிப்போக அலுத்தவர்கள் ஓரிரண்டு நாள் பொறுத்துப்பார்க்கலாம் என இருந்தனர். ரொட்டி தயாரிக்கும் பொறுப்பு நெடுங்காலமாக ஆவலாகக் காத்திருந்த, வேலை தேடிப்போயிருந்த ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டது. மறுநாள் விடிகாலையில் குளிக்கப்போன அவ்வூர் மருத்துவச்சிக் கிழவிதான் கரையோரப் பாறையொன்றில் வழுக்கிவிழுந்து மண்டை உடைந்து பெரிய சிவப்பு எறும்புகள் மொய்க்க, குருதி காயச் செத்துக்கிடந்தவனைக் கண்டு அலறினாள். ஆற்றங்கரையின் மருத மரத்தில், அயல்மரங்களிலென எல்லாவற்றிலும் கருப்புத் திட்டுக்களாய்க் காக்கைகள் அவனைச் சுற்றிலும் கரைந்தபடி இருந்தன. அவன் எழவில்லை. எனினும் அவ்வூர்க் காக்கைகளெல்லாம் ஒன்று சேர்ந்தாப்போலக் கூட்டமாக இருந்து அவனைப்பார்த்துக் கரைந்தன. இரை தேடி அலைதல் மறுத்து அப் பிணம் அகற்றப்படும் வரையில் அங்கேயே கிடந்தன. இனிமேல் அவனது தலை வானொலிப்பெட்டியை அழுத்தி, ஒலிக்கவைக்கச் செய்யமுடியாதென அறிந்தோ என்னமோ, அவை அவனைக் கொத்தவுமில்லை, துரத்தவுமில்லை.

 - எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை


நன்றி
# பெருவெளி - இலக்கிய இதழ் - 07, ஜனவரி, 2011
# கலைமுகம் இலக்கிய இதழ் - 51, ஏப்ரல் - ஜூன், 2011
# எங்கள் தேசம் - 200 ஆவது சிறப்பிதழ்
# வடக்குவாசல் - செப்டம்பர், 2011
# காற்றுவெளி
# உயிர்மை
# நவீன விருட்சம்
# திண்ணை
# தமிழ் எழுத்தாளர்கள் இணையத்தளம்

Monday, August 1, 2011

பூமராங்

கறுப்பென்றால் கறுப்பு அந்தப் பெண் அப்படியொரு கறுப்பு. தொட்டால் விரல்களில் ஒட்டிக் கொள்ளக் கூடுமோ என்ற நினைப்பினைத் தோற்றுவிக்கும்படியான அட்டைக் கறுப்பு. அட்டை, கறுப்பு நிறமா என்றெல்லாம் நீங்கள் கேட்கக் கூடாது. அது எனக்குத் தெரியாது. அவள் கறுப்பு நிறம். அவ்வளவுதான். அணுவளவேனும் வெளிச்சமற்ற ஓர் அமாவாசை இரவில் அவளைத் தனியே நிற்கவைத்து ஊசித் தும்பிகளின் சிறகடிப்பினைப் போல அடிக்கடி அடித்துக் கொள்ளும் இமைகளை மூடிக் கொள்ளும்படியும், சிரிப்பில் மின்னும் வெள்ளைப் பற்களைக் காட்டக் கூடாதெனவும் கட்டளையிட்டால் அவளை யாராலுமே கண்டுபிடிக்க முடியாதென அடித்துச் சொல்வேன். நீங்கள் ஏற்க மறுத்தால் மறுத்துவிட்டுப் போங்கள். ஆனால் அவள் நிறம் அப்படியொரு கறுப்பு. இருட்டோடு இருட்டாகக் கரைந்துவிடும் கறுப்பு.

நான் அவனைக் கொன்றதற்கு அடுத்தநாளிலிருந்து அவள் என்னைத் தினமும் பின்தொடர்கிறாள் என்பதனை நான் இந்த ஒரு வாரகாலத்துக்குள் உறுதிப்படுத்தியாயிற்று. அவளது விசித்திரமான பெரிய கண்களுக்கு மேலே புருவங்களிரண்டும் வானில் தூரத்தே பறக்கும் பறவையொன்று நம் பார்வைக்கு இரு பூமராங்குகளை ஒன்றாக இணைத்தது போல இருக்குமே. அப்படி நடுவில் இணைந்து மிக மெல்லிய கோடுகளாக இருபுறமும் சமச்சீராகப் பரவியிருந்தது. நான் பார்த்த போதெல்லாம் அவளது அகன்ற கண்களை மேலும் விரித்து அவள் என்னை உற்றுப் பார்ப்பதாகத்தான் தோன்றிற்று.

அவள் என்னைப் பின்தொடர்வதாகக் கண்ட முதல்நாள் தற்செயலாகத்தான் அதனை உணர்ந்தேன். முந்தைய நாள் இரவில் ஒரு கொலையைச் செய்தவனுக்கு, அடுத்தநாள் யாரைப்பார்த்தாலும் அவர்களெல்லோரும் தன்னைத்தான் உற்றுநோக்குவதாகத் தோன்றுமே. கொலை கூட வேண்டாம். ஏதாவது ஒரு தவறை, கொள்ளையை, வழிப்பறியை, வல்லுறவை இது போல ஏதேனுமொரு சமூகக் குற்றத்தைச் செய்துவிட்டால் அடுத்த கணத்திலிருந்து தன்னைத் துரத்தும் அந்த யாரோ குறித்து அச்சப்பட வேண்டியிருக்குமே. அதுபோலத்தான் முதலில் அவள் என் பின்னாலேயே வருவதைக் கண்டும் அதிர்ந்தேன்.

அவள் என்னைப் பின் தொடரும் தூரம் மிக அதிகமாக ஏதுமில்லை. ஒரு இருநூறு மீற்றர் தூரம் தான். ஆமாம். எனது அலுவலகக் கார் நிறுத்தும் இடத்திலிருந்து அலுவலகத்துக்கு நான் நடக்கும் தூரம் இருநூறு மீற்றர்தான் இருக்கும். அதைவிடவும் குறைவாக இருந்தாலும் கூடுதலாக இருக்காது. நான் காரை நிறுத்தி இறங்கும்போது சரியாக அவள் என் பின்னால் நின்று கொண்டிருப்பாள். நான் நடக்கத்தொடங்கும்போது அவளும் தயாராகுவாள். பின்னர் என் பின்னாலேயே அலுவலகம் வரை வந்து எனக்குக் கதவு திறந்து வழிவிட்ட காவலாளியின் காலைவணக்கத்துக்குப் பதிலுரைத்துவிட்டு உள்நுழைந்து கண்ணாடிக் கதவு வழியே வந்த வழியை நான் பார்ப்பதற்குள் அவள் காணாமல் போயிருப்பாள். எங்கிருந்து வருகிறாள். எங்கு போகிறாள். எதுவும் தெரியவில்லை எனக்கு.

இந்த ஒருவார காலத்துக்குள் தினந்தோறும் இதே கதைதான். மூன்றாம் நாள் நான் தைரியமாக அவளை எதிர்கொள்ளக் காத்திருந்தேன். அவளது விழிகளை உற்றுப்பார்த்து 'என்ன வேண்டும் உனக்கு?'  எனக் கேட்கவேண்டுமென தூக்கமின்றி உருண்ட முந்தைய நாள் இரவே யோசித்து வைத்திருந்தேன். ஆனால் அவளைப் பார்த்ததும் அக் கேள்வி எனது உணர்வுகளிலிருந்தும் நழுவி, கயிறறுந்து பறக்கும் பட்டமொன்றைப் போல எங்கோ நான் அறியாத் திசைகளில் பறந்துபோயிற்று. குதியுயர்ந்த அவளது பாதணிகளின் ஓசை அன்றும் பின்னாலேயே வந்தது.

ஒரு மெய்ப்பாதுகாவலாளி போல மிகுந்த அக்கறையோடு தினமும் என் பின்னாலேயே வந்தாள். ஒருவேளை எனது அலுவலகத்திலேதேனும் வேலையை எதிர்பார்க்கிறாளோ? அவளது நோயோ, கடனோ பாதித்த குடும்பத்துக்கு ஏதேனும் நிதி உதவிகளை எதிர்பார்க்கிறாளோ? இல்லாவிட்டால் காவல்துறை என்னைக் கண்காணிக்க அவளை அனுப்பி வைத்திருக்கிறதோ ? ஒருவேளை என்னைக் காதலிக்கிறாளோ ? இந்த ஐம்பது வயதுகளில் முதல் இரண்டு மனைவிகளைக் கொன்றுவிட்டு மூன்றாவது ஒரு அழகியோடு குடும்பம் நடத்தும் நான் எப்படி இப்படியான கறுத்து, கன்னங்கள் ஒடுங்கிய ஒரு  அசிங்கமான பெண்ணைக் காதலிப்பேனென அவள் எதிர்பார்த்துப் பின்தொடரலாம்? இல்லை. இல்லை. ஒருவேளை, நான் கொன்றவனது காதலியோ? இருக்காது. அவனுக்கு வயது இருபதுக்குள் தானே. இவளுக்கு எப்படியும் முப்பது கடந்திருக்கும். அதுவுமில்லாமல் என் மகனுக்கு இப்படியொரு காதலி இருந்திருந்தால் எனக்கு இதுவரை தெரியாமலா போயிருந்திருக்கும்?

'இன்றும் போகுமிடமெல்லாம் என்னைத்தானே அதிகமாக நினைத்துக்கொண்டிருந்தீர்கள் அன்பே?' எனக் கேட்ட என் இருபது வயதுகளே நிரம்பிய அழகிய காதலிக்கு இந்த ஒரு வாரமாகப் பொய்யைத்தான் பதிலாகச் சொல்லவேண்டியிருந்தது. அந்த கறுப்புப் பெண்ணைக் கண்ட நாளிலிருந்து அவள் குறித்த வினாக்கள் மனதுக்குள் ஓடிக்கொண்டே இருந்தது. அவளது உடல் கறுப்புப் போதாததற்கு அவள் உடுக்கும் ஆடை கூட முழுக்கறுப்பாகவே இருந்தது. தலையை மூடிய ஆடை ஒரு பெங்குவின் பறவையின் உடலைப்போல அப்படியே கீழிறங்கி கணுக்கால்வரை மூடியது. பெங்குவின் பறவைகூடப் பரவாயில்லை. சிலதின் வயிற்றுப்பகுதியில் வெள்ளை கலந்திருக்கும். ஆனால் அவளது அப்படியல்ல. வெள்ளை சார்ந்த உள்ளங்கால்களை மறைக்கவும் கறுப்புக் காலுறையையே அணிந்திருந்தாள். சரி விடுங்கள். ஒரு பெண்ணின் நிறம் குறித்து நான் விரிவாகப் பேசப் போனால் நீங்கள் என்னோடு சண்டைக்கு வரக் கூடும்.

இப்படித்தான் என் முதல் மனைவியும் எனக்கொரு காதலி இருப்பதைக் கண்டபொழுதில் என்னுடன் சண்டை பிடித்தாள். அப்பொழுது எமது ஒரே மகனுக்கு பதினெட்டு வயது. வெளிநாட்டுக்குப் படிக்க அனுப்பியிருந்தேன். வீட்டினை நிறைத்திருந்த பெறுமதியான பொருட்கள், நகைகளையெல்லாம் கூட வெறி பிடித்தவள் போல எனது முகத்துக்கு நேரே தரையில் போட்டுச் சிதறடித்தாள் அவனது தாய். ஆற்றாமையில் கத்தினாள். அவளிடம் நான் என்ன குறையினைக் கண்டேனெனக் கேட்டுக் கதறியழுதாள். அவளுக்குத் துரோகம் செய்யவேண்டாமெனச் சொல்லிக்கொண்டு என் கால்களில் விழுந்தாள். இருந்த பலமெல்லாவற்றையும் சேர்த்து எட்டி உதைத்தேன். தூரப்போய் விழுந்தாள். ஒருவேளை அவள் மன்றாடாமல் என்னை ஏதேனும் வழியில் மிரளும்படி செய்திருந்தால் நான் அடங்கிப்போயிருக்கக் கூடும். எங்கும் எதிராளிகளிருவரைத் தராசொன்றின் இருபுறமும் வைத்தால் சமநிலையின்றி ஒரு பக்கம் தாழ்ந்தும் மறுபக்கம் உயர்ந்துமிருக்குமே. அதுபோலத்தான்.

அவளுக்குச் சொல்லிப் புரியவைக்க முடியாதெனக் கண்டுகொண்டேன். இல்லை. அது பொய். நான் அவளுக்குச் சொல்லிப் புரியவைக்கவும் முயற்சிக்கவில்லை. நான் வீணாக எதுவும் எப்பொழுதும் பேசுவதில்லை. யாருடனும் எதையும் வீணாகக் கதைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் என்னால் பல கோடிகள் சம்பாதித்து விட முடியும். இல்லாவிடில் சில காதலிகளைக் கண்டடைய முடியும். அதுபற்றி விரிவாக உங்களிடம் விபரிக்கவேண்டிய அவசியம் எனக்கு இல்லை. கோபித்துக் கொண்டால் கோபித்துக் கொள்ளுங்கள். என் பணம். என் காதலிகள். நான் சம்பாதிக்கிறேன். அவ்வளவுதான். அதுபற்றி மேலும் கேட்டால் உங்களையும் நான் என் முதல் மனைவியைக் கொன்றது போலக் கொல்லவேண்டி வரும்.

அவள் தொடர்ந்தும் அழுதுகொண்டே இருந்தாள். எப்படியும் ஆளை அழித்துவிடவேண்டுமென்று நான் தீர்மானித்துவிட்டதால் வீணாக அழுதழுது அவளது சக்தியை அவள் வீணாக்கியிருக்கவே தேவையில்லை. அவளது அழுகைக்குக் காரணமான காதலியிடம் இதைச்சொன்னபோது அவள் வாய்விட்டுச் சிரித்தாள். இந்தப் பிரச்சினை வருமென அவளுக்கு முன்பே தெரியுமென்றாள். பெண்கள் எப்பொழுதும் காலத்துக்கு முன்கூட்டியே பயணித்து, பின்வரப்போகும் ஒவ்வொரு கணப்பொழுதுக்குமான வழிகளை முன்பே கண்டுகொள்கிறார்களென அன்று நான் அறிந்தேன். அவளையும் நான் குடியிருந்த வீட்டுக்கு அழைத்து வந்தேன்.

என் மனைவி அவளைக் கண்டதும் ஓடி வந்து அவளது கைகளைப் பிடித்துக் கொண்டு தனது கணவனை விட்டுப் போகும்படி கெஞ்சினாள். அவள் என் மனைவியின் கைகளை இறுக்கமாகப் பற்றிக்கொண்டாள். நான் என் மனைவியின் பின்னாலிருந்து அவளது கழுத்துக்கு கயிற்றினை மாட்டி இறுக்கினேன். கால்கள் மடங்கிக் கீழே விழுந்து திமிறியவளின் மேலேறி என் காதலி அமர்ந்துகொள்ள நான் மேலும் மேலும் இறுக்கினேன். அவள் இறுதியாக விட்ட மூச்சுக் காற்றில் எனதும் காதலியினதும் சுவாசங்களும் கூடக் கலந்திருக்கும். பாவிப்பெண் கண்களைத் திறந்தபடியே உயிர்விட்டிருந்தாள். பிணங்களின், முக்கியமாக நீங்கள் கொன்ற பிணங்களின் கண்களை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அவை பரிதாபமூட்டும். பல கேள்விகளை, பல விடைகளை அவற்றுக்குள் புதைத்து வைத்திருக்கும். அக் கருமணிகளில் ஏதோவொரு துடிப்பிருப்பதைக் கொன்றவன் மட்டும் காண்பான். அவை அச்சமூட்டும். என் மனைவியின் நிலைத்த பார்வை நாங்கள் திரும்பிய திசைகளெல்லாம் எங்களை நோக்கியே இருந்ததாகப் பட்டது. அக் கண்களைப் பார்த்தபடி எங்களால் இருக்கமுடியவில்லை. உடனே அவளைப் பொதி செய்து காரில் அடைத்தோம். சிறிது தூரம் பயணித்து, பொதி செய்யப்பட்டிருந்த அவ்வுடலுக்கு மிகவும் பாரமான கல்லொன்றினைக் கட்டி அந் நள்ளிரவில் மிகவும் உயர்ந்த பாலமொன்றிலிருந்து இரண்டையும் கடலுக்குள் தூக்கியெறிந்தோம்.

அன்றிலிருந்து காதலி இரண்டாவது மனைவியாகப் பொறுப்பேற்றுக் கொண்டு அவ் வீட்டில் முதல் மனைவியின் நடமாட்டத்தை நிரப்பினாள். அவளைக் கொன்ற பின்னரான நாட்களில் இது போல எந்தக் கறுப்புப்பெண்ணும் என்னைப் பின் தொடரவில்லை. மிகவும் நிம்மதியாக இருந்தேன். மிகவும் விலையுயர்ந்த பிளாட்டின, வைர நகைகளோடும் அதிகக் காமத்தோடும் வீட்டுக்கு விரைவாகப் போகத் தொடங்கினேன். திகட்டத் திகட்ட வாழ்க்கையை அனுபவித்துச் சில மாதங்களில் அதுவும் சலித்துப் போகத் தொடங்கியது.

அவ்வேளைதான் எனது புதிய காதலி வேலை நேர்முகத்துக்கென என் அலுவலகத்துக்கு வந்தாள். சுருண்ட, அவிழ்த்து விடப்பட்ட நீண்ட கூந்தல், மை பூசப்பட்ட, நீள் இமைகள் சூழ, முத்தினைப் பாதி காட்டும் சிப்பியொன்றைப் போலக் கண்களைக் கொண்டவள். மிகவும் அழகாகவும், இளமையாகவும், வாசனையாகவும் ஒரு பூவைப் போல இருந்தாள். அவளைக் கண்டது முதல் காதலிக்கத் தொடங்கினேன். நான் உடனே அவளுக்கு அவ் வேலையைக் கொடுத்திருப்பேனென நீங்கள் எண்ணினால் அது தவறு. நூற்றுக்கு நூறு முற்றாகத் தவறு. தேர்வு அறையிலிருந்த எல்லோரையும் வெளியே அனுப்பிவிட்டு அவளிடம் தனியாக எனது காதலைச் சொன்னேன். அவளுக்கு ஏற்கெனவே ஒரு காதலன் இருப்பதாகச் சொன்னாள். நான் எனது அந்தஸ்து, வசதிகளைப் பட்டியலிட்டேன். அவளது கருவிழிகள் விரிந்தன. பின்னர் எனக்குச் சிரமமாக எதுவும் இருக்கவில்லை இரண்டாவது மனைவியைத் தவிர. எனது சட்டையிலிருந்த காதலியின் வாய்ப்பூச்சுக் கறைகளைக் கண்ட அவளும் விதவிதமாகக் கேள்விகள் கேட்கத் தொடங்கினாள்.

உங்கள் ஊகம் சரிதான். மூன்றாவது காதலியோடு சேர்ந்து இரண்டாவது மனைவியைக் கொன்றேன். முதல் மனைவியைப் போல இரண்டாமவளைக் கொல்வது இலகுவாக இருக்கவில்லை. நான் காதலியை வீட்டுக்கு அழைத்து வந்ததுமே அவள் புரிந்துகொண்டு விட்டாள். கூடொன்றுக்குள் புதிதாக அடைக்கப்பட்ட பட்சியொன்றைப் போல எல்லாக் கதவுகளும் பூட்டப்பட்ட வீட்டுக்குள் தப்பித்து ஓடிவிட முயன்றாள். பருத்த உடம்பையும் கனத்த தொப்பையையும் தூக்கிக் கொண்டு நானும் அவளுடன் பின்னால் ஓடவேண்டியிருந்தது. இவ் வேளை அழகி உதவிக்கு வந்தாள். மானொன்றைப் போல ஓடியும், முயலொன்றைப் போலத் தாவியும் அவளும் பின்னால் ஓடி இரண்டாமவளை சமையலறை நிலத்தில் வீழ்த்திக் கன்னத்தில் அறைந்தாள்.  அவள் சுதாகரிக்குமுன் அருகிலிருந்த முனை கூரிய கத்தியெடுத்து ஒரு தேர்ந்த கொலைகாரியைப் போல வயிற்றிலும் கழுத்திலும் மாறிமாறிக் குத்தினாள். நான் அருகிலிருந்த கதிரையிலமர்ந்து இதையெல்லாம் பார்த்தபடி இளைப்பாறிக் கொண்டிருந்தேன். பின்னர் முன்பு போலவன்றி வியர்த்த, இரத்தம் தெறித்த உடலைக் கழுவவென என் காதலி குளியலறைக்கு அகன்ற பின்னர் நான் மட்டும் தனியாக பிணத்தினைப் பொதி செய்தேன். பின்னர் முன்பு போல இருவருமாகக் காரில் கொண்டு சென்று பாலத்தில் நின்று கல்லைக் கட்டித் தூக்கியெறிந்தோம். ஒரு பெரிய தாகத்தோடு கடலும் முன்புபோலவே இப் பிணத்தினையும் விழுங்கிக் கொண்டது.

மூன்றாவது மனைவியாக அவ்வீட்டில் நடமாட என் காதலி மறுத்துவிட்டாள். மனித இரத்த வாடை பரவிய வீட்டில் பேய்கள் மிகக் குரூரமான எண்ணங்களோடு அலையுமென அவள் பயந்தாள். அவை அவள் தூங்கும் போது கழுத்தை நெரித்து விடுமெனவும் பகலில் தனியாக இருக்கும்போது சீண்டி வதைகள் செய்யுமெனவும் அச்சப்பட்டாள். அவளுக்கு மிகவும் பயந்த சுபாவம். எனது மகன் விடுமுறைக்கென வந்து தன் தாயைத் தேடிப் பார்த்து எப்படியோ விபரம் தெரிந்து  புதிய காதலியை அம்மாவாக ஏற்றுக்கொள்ள மறுத்து அவளுக்கென நான் வாங்கிக் கொடுத்திருந்த பங்களாவுக்கே தேடிவந்து அவளது அழகிய முகத்துக்கு நேரே விரல் நீட்டி அப்பாவை விட்டுப் போய்விடும்படி எச்சரித்த பொழுது அவள் மிகவும் பயந்துபோனதாக என் காதுக்குள் பின்னர் சொன்னாள். அன்றுதான் மகனைக் கொன்றுவிடுவது குறித்து நாம் திட்டமிட்டோம்.

மகனைக் கொல்வது எனக்கு மிகவும் இலகுவாக இருந்தது. அதுவரை நான் செய்த கொலைகளிலேயே இறுதியானதும் மிகவும் இலகுவானதும் இதுதான். அவனது அம்மா வாழ்ந்த மற்றும் இறந்த அதாவது எனது பழைய வீட்டில் அதற்காக அவனுடன் ஒருநாள் நான் தங்கவேண்டியிருந்ததுவும் அவன் உறங்கப் போகும்போது அருந்தும் பாலில் மூன்று துளி விஷம் கலந்ததுவும் மட்டும்தான் நான் செய்த காரியம். இதற்கு முன்னைய எனது கொலைகளிலெல்லாம் உயிர் பிரிவதை என் இரண்டு கண்களாலும் நேரடியாகப் பார்த்திருக்கிறேன். மகன் விடயத்தில் மட்டும் விதிவிலக்காக உறக்கத்திலேயே அவன் உயிர் பிரிந்திருந்தது. அடுத்தநாள் காலையில் அவ்வீடு முழுதும் பற்றியெரியும்படியாக எல்லா வேலைகளையும் செய்துவிட்டு நான் மெதுவாக அகன்றேன். அதில் எனக்கு இரண்டு இலாபங்கள். முதலாவது பிணத்தினை, தனியாகப் பொதி செய்து கடலில் தூக்கியெறிய அவசியமற்றும், மரணத்துக்கான காரணங்கள் சொல்லத் தேவையற்றும் முற்றாகப் பொசுங்கிப் போகச் செய்தது. அடுத்தது அவனது அம்மாவின் அவ் வீட்டுக்கான காப்புறுதிப் பணம் முழுதாக எனக்குக் கிடைக்கும். இதைத்தான் ஒரே கல்லில் இரு மாங்காய்களெனவும் இன்னும் சில பழமொழிகளிலும் நீங்கள் சொல்லக் கூடும்.

அந்தக் காலையிலிருந்துதான் இந்தக் கறுப்புப்பெண் என்னைத் தொடர்கிறாள். அந்த வீட்டின், மகனின் பிணத்தின் மொத்தமான கரும்புகைதான் எலும்பாகிச் சதையாகி மனித உருவெடுத்துப் பெண்ணுருவில் கறுப்பாக என் பின்னால் நடமாடுகிறதோ ? அல்லது நான் கொன்றொழித்த மனிதர்கள் எல்லோருமாக ஒன்று சேர்ந்து ஓருருவாகி என்னைப் பழிவாங்கப் பின்னால் அலைகின்றனரோ ? ஒருவேளை நான் எப்பொழுதும் ஒதுக்கித் தள்ளும் என் மனசாட்சியோ? இல்லை எப்பொழுதும் அழகிய பெண்களில் மிதந்து வழியும் என் காமமோ ?

எப்படியோ என் கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தேவையற்று அடுத்த நாளிலிருந்து அவள் என் பின்னால் வரவில்லை. நானும் அலுவலகம் செல்லவில்லை. அந் நாள் இரவு என் அழகிய காதலி, மூன்றாவது மனைவியாகப் போனவள் நான் அவளுக்கு வாங்கிப் பரிசளித்திருந்த பங்களாவில் வைத்து அவளது இன்னுமொரு காதலனோடு சேர்ந்து நான் உறங்கும்போது என் கழுத்துக்குக் கயிறிட்டு நெருக்கினாள். காதலன், விழித்துத் திமிறிய என் கன்னத்திலறைந்து வயிற்றிலும் கழுத்திலும் நீண்ட கத்தியால் குத்திக் கிழித்தான். பின் அவ்விருவருமாகச் சேர்ந்து பிணமாகிக் கனத்த என்னைப் பொதி செய்து பாலத்து மேற்புறச் சுவரில் வைத்துப் பெற்றோல் ஊற்றி எரியவிட்டு அப்படியே கீழே தள்ளிவிட்டார்கள். எப்பொழுதும் பசியுடனிருந்த கடல், எரிந்தபடி விழுந்துகொண்டிருந்த என்னையும் சூட்டோடே விழுங்கிக் கொண்டது. இப்படியாக, கறுத்துக் கன்னங்கள் ஒடுங்கி, பெங்குவின் போல நீண்ட கறுத்த ஆடை அணிந்த பெண் இருநூறு மீற்றர் தூரங்கள் என்னைப் பின் தொடரமுடியாவண்ணம், நான் என் அலுவலகத்துக்குப் போகமுடியாவண்ணம் என் அழகிய இளம் காதலி என்னைக் கொன்றொழித்திருந்தாள்.

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை

நன்றி
# அகநாழிகை இலக்கிய இதழ் - இந்தியா
# வல்லினம் கலை இலக்கிய இதழ் - மலேசியா
# உயிர்மை
# காற்றுவெளி
# திண்ணை

Friday, June 3, 2011

தண்டனை

அன்றைய திங்கட்கிழமையும் வழமை போலவே அலுவலகத்தில் எனது பணிநேரம் முடிந்ததன் பிற்பாடு நேராகப் பக்கத்திலிருந்த மதுபானசாலையில் கொஞ்சம் மதுபானம் அருந்திவிட்டு எனது வீடிருந்த குடியிருப்பிற்குக் காரில் வந்து சேர்ந்தேன். எனது தளத்திற்கான மின்னுயர்த்தியில் என்னுடன் பயணித்த எனது பக்கத்து வீட்டு இளம்பெண் மென்மையாகச் சிரித்து நலம் விசாரித்ததற்கான எனது பதில், மதுவாடை கலந்த ஏப்பத்துடன் வெளியானதில் அவள் முகம் சுளித்தது இன்னும் ஞாபகத்திலிருக்கிறது. எல்லா அழகிகளும் ஒன்று போல மதுவாடையை ஏற்றுக் கொள்பவர்களல்லர். அல்லது அஸ்விதாவைப் போல எல்லா உணர்ச்சிகளையும் முகத்தில் காட்டாவண்ணம் மறைக்கத் தெரிந்தவர்களுமல்லர்.

வீட்டு வாசலில் இரண்டு நாட்களாகத் தண்ணீர் ஊற்றப்படாதிருந்த போகன்வில்லாச் செடிகள் வாடியிருந்தன. வெண்ணிறப்பளிங்குத் தரையில் அதன் செம்மஞ்சள் நிறப்பூக்கள் உதிர்ந்து வீழ்ந்து குப்பையாகிக் கிடந்ததைக் கவனிக்காமல் அஸ்விதா என்ன செய்கிறாளெனக் கோபம் வந்தது. வழமையாக இதன் பராமரிப்பு எல்லாம் அவள் பொறுப்பில்தான். இதில் நீங்கள் ஆச்சரியப்பட ஏதுமில்லை. உங்கள் வீட்டிலும் பெண்கள் இது போன்ற வேலைகளைத் தாங்களே பொறுப்பெடுத்துச் செய்பவர்களாக இருப்பார்கள்.

அழைப்பு மணியை மூன்று முறை விட்டு விட்டு அடித்தேன். அது எனது வருகைக்கான சங்கேதமொழி. அஸ்விதாவிற்கு மட்டுமே தெரிந்த பாஷை. 'ஆறு மாதத்திற்கு முன்னர் உன்னழகிய சங்குக்கழுத்தில் தாலி கட்டிய உன் கட்டிளம் கணவன் வந்திருக்கிறான் ' என அவளிடம் ஓடிப்போயுரைக்குமொலி. வழமையாக ஒரு அழைப்பிலேயே ஓடி வந்து கதவைத்திறந்து ஒதுங்கி வழிவிட்டு நிற்பவள் இன்று நான்கைந்து முறை அழைப்புமணியை அழுத்தியும் திறப்பவளாக இல்லை. எனக்கு மிகவும் எரிச்சலாக வந்தது.

ஒருவேளை தூங்கிக் கொண்டிருப்பாளோ என்றும் நினைத்தேன். ஆனால் இதுவரையில் அவளை எனக்கு முன்னதாகத் தூங்கியவளாக நான் கண்டதில்லை. இறுதிச் சனிக்கிழமை காலை வரையில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஏதாவது எழுதியபடியே இருந்தவள். இப்பொழுதும் ஏதாவது எழுதிக்கொண்டிருப்பாளோ எனத் தோன்றிடினும் அவளுக்கு அதற்கான எந்த எழுதுகருவியையோ, காகிதத் தாள்களையோ நான் விட்டு வைக்கவில்லையே என்பதுவும் நினைவில் வந்தது.

கதவின் பக்கத்திலிருந்த ஒற்றை யன்னல் வழியே கையை நுழைத்து கதவின் உள்கொக்கியை விடுவித்துத் திறந்தேன். எனது வீட்டுக் கதவு திறக்கப்படும் போதும் , மூடப்படும் போதும் சன்னமாக ஒலியெழுப்பும். நீங்கள் கேட்டீர்களானால் அடுத்த முறை வரும் போது ஏதேனும் எண்ணெய்ப் போத்தலை எடுத்து வந்து கதவின் மூலையில் பூசிவிடுவீர்களென நினைக்கிறேன். அந்தளவுக்கு அகோரமான சப்தம் அதிலிருந்து வரும். இந்தச் சத்தத்திற்கு அவள் எங்கிருந்தாலும் வாசலுக்கு வரவேண்டுமென எதிர்பார்த்தேன். ஆனால் வரவில்லை. மிகவும் அழுத்தக்காரி என நினைத்துக் கொண்டேன்.

வீட்டின் உள்கூடத்தில் சனிக்கிழமை காலையில் நான் எரித்த காகிதங்களினதும் அவை சார்ந்தவற்றினதும் கரிக்குவியல் அப்புறப்படுத்தட்டிருந்தமை எனது கோபத்தையும் எரிச்சலையும் மட்டுப்படுத்தியதோடு , தீயின் கரங்கள் கரும்புகை ஓவியங்களாய்ப் பளிங்குத்தரையில் வரைந்திருந்த எல்லாத்தடயங்களையும் அவள் கழுவிச் சுத்தம் செய்திருந்தமை எனக்கு மகிழ்வினைத் தந்தது.

அவள் நல்லவள்தான். அமைதியானவள்தான். எனது முன்னைய காதலிகளைப் போல எனது பணத்தினைக் குறிவைத்து அது வேண்டும், இது வேண்டும் என்று நச்சரித்துக் கேட்பவளல்ல. கண்ணியமானவள். நாணம், ஒழுக்கம் நிறைந்தவளும் கூட. எனது பிரச்சினைகளெல்லாம் அவளது எழுத்துக்கள் சம்பந்தமானதாகவே இருந்தன. எப்பொழுது பார்த்தாலும் ஏதாவது எழுதிக் கொண்டே இருந்தாள். எழுத்தின் அத்தனை பரிமாணங்களும் அவளது விரல்களினூடே தாள்களில் கொட்டப்படவேண்டுமென்பது போல ஏதாவது எழுதிக் கொண்டே இருந்தமைதான் எனக்குப் பிடிக்கவேயில்லை.

அவளைப் பெண் பார்த்து நிச்சயிக்கும் முன்பே வீட்டில் சொல்லியிருந்தார்கள். மணப்பெண்ணுக்குப் பொழுதுபோக்கு எழுத்துத்தானென்று கட்டாயம் மணமகனிடம் சொல்லச் சொன்னாளாம். அதை இந்த மணமகன் மிகச் சாதாரணமாகத்தான் எண்ணியிருந்தேன். பணமும் சொத்துக்களும் நிறைந்தவளுக்கு எழுத்து ஒரு பொழுதுபோக்காக இருப்பதென்பது கல்யாணத்தை நிறுத்தும் அளவிற்குப் பெரிய பிரச்சினையாக நான் கருதாததால் பெரியவர்கள் பார்த்து முடிவு செய்த ஒரு சுபயோக சுபதினத்தில் அஸ்விதா என் மனைவியென்றானாள். திருமணத்திற்குப் பின் கொஞ்ச நாட்களுக்குள்ளேயே அவளது ஆறாவது விரலாகப் பேனா இருப்பது புரிந்தது.

எல்லாவற்றையும் எழுதிவந்தாள். நகரும் ஒவ்வொரு கணத்தையும் ஏன் மூச்சையும் கூடத் தன் தினக்குறிப்பேட்டில் பதிந்து வருபவளாக இருந்தாள். கடந்த மாதம் இந்தத் திகதியில், இந்த மணித்தியாலத்தின் இந்த நிமிடத்தில் நீங்கள் என்ன செய்துகொண்டிருந்தீர்களென உங்களால் இப்பொழுது கூற முடியுமா? ஆனால் அவளிடம் கேட்டால் அவளால் முடியும்.

அதற்காக அவள் தனது நேரங்களனைத்தையும் எழுதியபடியேதான் செலவழிக்கிறாளென நீங்கள் எண்ணக்கூடாது. வழமையாக இந்த சமூகத்தில் பெண்களுக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் வேலைகளனைத்தையும் ஒழுங்கு தவறாமல் நிறைவேற்றுவாள். ஒவ்வொருநாளும் விதம்விதமாக எனக்குப்பிடித்தமான உணவுகளாகட்டும், அலங்காரமாகட்டும், எல்லாவற்றிலும் மிகச் சிரத்தையெடுத்து அழகாகச் செய்தவள் அவள். சொல்ல மறந்துவிட்டேன். அவளது கண்கள் மிகவும் அழகியவையாக இருந்தன. அந்தக் கண்களின் மாயசக்திதான் என்னை அவள் பக்கம் ஈர்த்தனவோ என்னவோ...?

நான் சொல்லவந்ததை விட்டு எங்கெங்கோ போகிறேனென நினைக்கிறேன். இப்பொழுது என்னைப் பற்றியும் தெரிந்துகொள்ளுங்கள். எனக்குப் பயங்கரமாகக் கோபம் வரும். எதற்கென்றில்லை. ஒருமுறை வீதியில் ஒளிச்சமிக்ஞை அனுமதிக்காக வாகனத்தை நிறுத்திவைத்துவிட்டுக் காத்திருக்கையில் பக்கத்து வாகனச் சாரதி மிகச்சத்தமாகவும் உல்லாசமாகவும் தனது வானொலியை முடுக்கிவிட்டு இலேசாக நடனமாடிக் கொண்டிருந்ததைப் பார்க்கப்பார்க்க எனக்குக் கோபம் பொங்கிற்று. எனது பக்கத்திலிருந்த அஸ்விதாவின் அழகிய கரத்தினை சிகரெட்டால் சுட்டுத்தான் என்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ளமுடிந்தது.

அவள் மகா பொறுமைசாலி. எனக்கு வரும் கோபத்தையெல்லாம் நான் அவளிடம்தான் காட்டவிழைந்திருக்கிறேன். கையில் கண்டதைத் தூக்கியெறிந்திருக்கிறேன். அவள் எழுதிவைத்த காகிதங்கள் கண்ணில் பட்டால் கிழித்தெறிந்திருக்கிறேன். சில சமயங்களில் அவளைச் சிகரெட்டால் சுட்டிருக்கிறேன். சரி விடுங்கள். முகஞ்சுளிக்கிறீர்கள். அதற்கு மேல் வேண்டாம்.

எனக்கும் அஸ்விதாவிற்குமான இறுதிச்சண்டை கடந்த சனிக்கிழமை காலையில் வந்தது. சண்டையென்றும் சொல்வதற்கில்லை. இருவரும் பலசாலிகளாகவும் இறுதியில் ஒருவர் வெற்றி கொள்வதும் மட்டுமே சண்டையெனப்படுமெனில் அது சண்டையே இல்லை. எனது கரம் மட்டுமே மேலோங்கும் ஒரு கோபத்தின் ஆதிக்கம் எனக் கொள்ளலாம்.சனி, ஞாயிறு வழமை போலவே எனக்கு விடுமுறை தினங்கள். சனியன்று பகல் வரையில் நன்றாகத் தூங்கியெழுவேன். அன்றைய சனியும் வழமை போலவே தூங்கிக் கொண்டிருக்கும் போது விடிகாலையில் தூக்கத்தில் எனது கைபட்டு கட்டிலுக்கருகில் வைத்திருந்த தண்ணீர்ப்பாத்திரம் நிலத்தில் விழுந்து சிதறிய அந்தச் சத்தத்தில் நான் விழித்துக் கொள்ள வேண்டியவனானேன்.

எனது தூக்கம் கலைந்ததற்கான கோபமும் எரிச்சலும் மிதந்து பொங்கிற்று. அருகில் படுத்திருக்க வேண்டிய அவளைத் தேடினால் அங்கு அவள் இருக்கவில்லை. அவள் பெயர் சொல்லி இயன்றவரை சத்தமாகப் பலமுறை அழைத்துப் பார்த்தும் பயனற்ற காரணத்தால் மூடியிருந்த என்னறைக் கதவைத் திறந்து அவளைத் தேடினேன். அவள் மாடியின் வெளிப்புற வராந்தா ஊஞ்சலில் அமர்ந்து தன் நீண்ட ஈரக் கூந்தலை உலர்த்தியவளாக ஏதோ எழுதிக் கொண்டிருந்தாள்.

மிதமிஞ்சிய கோபத்தோடு அவளை நெருங்கிய நான் அவளது கன்னத்தில் அறைந்ததோடு நிற்காமல் அவளது கையிலிருந்த தினக்குறிப்பேடு, மையூற்றும் பேனா, அதன் நீலக் கறை துடைக்கும் வெள்ளைத் துணி, இன்னும் அவ்வளவு காலமாக அவள் எழுதிச் சேர்த்து வைத்திருந்த அத்தனைக் காகிதங்களையும் சேகரித்து வீட்டின் உள்கூடத்தில் போட்டு எரித்தேன். அதனை எரிக்கும் வரையில் அவள் கண்ணீர் நிறைந்த கண்களோடும் , சிவந்த கன்னத்தோடும் எனது செய்கையைத் தடுக்க முனைந்தவாறு என் பின்னாலேயே சுற்றிச் சுற்றி வந்ததுவும் நான் அவளை உதறியதில் இரு முறை வீசப்பட்டுப் போய் நிலத்தில் விழுந்ததுவும் இன்னும் நினைவிலிருக்கிறது.

உங்கள் தோளில் ஒரு எறும்பு ஊர்கிறது பாருங்கள். அதனைத் தட்டிவிடுங்கள். ஆம். இந்த எறும்பைப் போலத்தான் அன்று அவளும் தூரப்போய் விழுந்தாள். கோபத்தின் வெறியில் அன்று நான் முற்றிலுமாக என்னிலை மறந்தவனாக இருந்தேன். பாருங்கள். இப்பொழுது கூட உங்களிடம் அவள் வரையும் ஓவியங்களைப் பற்றிச் சொல்லமறந்து விட்டேன். அவள் மிகவும் அழகாக ஓவியங்களும் வரைவாள். திருமணமான இரண்டாவது நாள் ஒரு மாலை வேளையில் அவள் வரைந்த ஓவியங்களை எனக்குக் காட்டினாள். அவை மிகவும் அழகானவையாகவும், வண்ணமயமான காட்சிகளாகவுமிருந்தன. ஆனால் நான் எனக்கவை பிடிக்காதவை போன்ற பாவனையோடு முகத்தினைத் திருப்பிக் கொண்டேன். அன்றிலிருந்துதான் அவள் வரைவதை விட்டிருக்க வேண்டும்.

அன்று அந்தக் காகிதக் குவியல்கள் முற்றிலுமாக எரிந்து முடிக்கும்வரை அங்கேயே நின்றிருந்தேன். நிலத்தில் விழுந்த இடத்தில் உட்கார்ந்தவாறே எரிவதைப் பார்த்துச் சோர்ந்திருந்தாள் அவள். சிவந்த கன்னத்தினூடே கண்ணீர் நிற்காமல் வழிந்தபடி இருந்தது. அது முற்றாக எரிந்து முடிந்ததும் நான் எனது தூக்கத்தைத் தொடரப் போனேன். அறைக் கதவைத் தாழ்ப்பாளிட்டுக்கொண்டு அன்று நிம்மதியாக உறங்கினேன்.

அவள் சிறிது நேரம் அழுதுகொண்டிருந்திருப்பாள். நான் எழும்பிக் குளித்து முடிக்கையில் சாப்பாட்டு மேசையின் மீது எனக்குப் பிடித்தமான உணவு காத்திருந்தது. அவள் எழுதுவதையும், அந்தக் கரிக்குவியலை அப்புறப்படுத்துவதையும் தவிர்ந்த மற்ற எல்லாக் காரியங்களையும் வழமையைப் போலவே மிகவும் அமைதியாகவும் இயல்பாகவும் நிறைவேற்றினாள். அந்தக் கரிக்குவியலை அப்புறப்படுத்த நான் சொல்லவுமில்லை. அவளாக அப்புறப்படுத்துவாளென்றே எண்ணியிருந்தேன்.

அன்றைய மதிய உணவிற்குப் பின்னரும் வழமையான ஒவ்வொரு சனிக்கிழமையைப் போன்றே எனது பெண் சினேகிதியைச் சந்திக்கச் சென்று அவளுடன் தங்கியிருந்துவிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு வீடு திரும்பும் போதும் அந்தக் கரிக்குவியல் அப்படியே இருந்தது. மிகுந்த களைப்புடனிருந்த நான், அஸ்விதா எனக்காகச் செய்திருந்த இரவுச் சமையலையும் புறக்கணித்தவனாகத் தூங்கி எழுகையில் எனது காலுறைகள் அகற்றப்பட்டிருப்பதையும் அலுவலகத்துக்கான ஆடை நேர்த்தியாக மடித்து வைக்கப்பட்டிருப்பதையும் கண்டேன். அன்று காலையில் வழமையாகக் கிளம்பும் நேரத்துக்கு முன்னதாகவே கிளம்பவேண்டியவனாக இருந்தேன். எனது கைத்தொலைபேசியை சினேகிதி வீட்டில் மறந்து விட்டுவந்திருந்தேன். அதை எடுத்துக் கொண்டு அலுவலகம் கிளம்புவதாகத் திட்டம்.

காலையில் நான் வெளியேறும் போது அகற்றப்படாமலிருந்த கரிக்குவியல் இப்பொழுது சுத்தமாக அப்புறப்படுத்தப்பட்டிருந்தமை எனக்கு மகிழ்வினைத் தந்தது. வழமையாக எனது ஒவ்வொரு அசைவிற்கும் என் முன்னே வந்து நிற்பவள் அன்று முன்னாலேயே வராதது எனக்கு மிகவும் ஆச்சரியத்தை வரவழைத்தது. முதன்முறையாக மெல்லிய குரலில் அவளை வீடு முழுவதும் தேடத் தொடங்கினேன். அவளுக்குப் பிடித்தமான ஊஞ்சலிலோ, சமையலறையிலோ கூட அவளிருக்கவில்லை. இந்த இடத்தில் இதனையும் நான் சொல்ல வேண்டும். என் முதல் காதலி பரிசளித்து நான் ஆசையாக வளர்த்துவந்த என் ஒற்றைக் கிளியை அஸ்விதா கூண்டை விட்டும் திறந்து பறக்கவிட்டிருந்தாள். அதனாலேயே எனக்கு அவள் மேல் மீண்டும் அளவுகடந்த கோபம் வந்தது.

மிகக் கடுமையாக வீடுமுழுதும் அவள் பெயரெதிரொலிக்கச் சத்தமெழுப்பியபடி படுக்கையறையைத் திறந்த போது அவள் அழகிய விழிகளை மூடிப் படுக்கையிலிருப்பது தெரிந்தது. நான் அவ்வளவு பலமாகச் சத்தமெழுப்பியும் எழும்பாததால் கோபம்  மிதமிஞ்சி அவளை நோக்கிக் கையில் அகப்பட்ட பூச்சாடியால் வீசியடித்தேன். அது அவள் நெற்றியில் பட்டுக் கீழே விழுந்து பெருஞ்சத்தத்தோடு சிதறியது. ஆனால் அவளிடமிருந்து எந்தச் சலனமுமில்லை. எனக்கு வந்த ஆத்திரத்தில் அவளருகே போய் பலங்கொண்ட மட்டும் பிடித்துலுக்கினேன்.

அவள் மிகவும் குளிர்ந்து போனவளாக இருந்தாள். இதழோரமாக வெண்ணிற நுரை வழிந்து காய்ந்து போயிருந்தது. மூக்கினருகே விரல் வைத்துப் பார்த்தேன். இறுதியாக, அவள் இறந்து போயிருந்தது புரிந்தது. மனதின் மூலையில் அதிர்ச்சி தாக்க உடனே எனது பெண் சினேகிதிக்குத் தொலைபேசி, விபரத்தைச் சொன்னேன். சனியன் ஒழிந்துவிட்டதெனச் சொல்லி அட்டகாசமாகச் சிரித்தவள் உடனடியாக என்னைக் காவல்துறைக்கு அறிவிக்கும் படியும் இல்லாவிட்டால் பின்னால் சிக்கல் வருமென்றும் பணித்தாள். அவள் சொன்னபடியே காவல்துறைக்கு அறிவித்ததுதான் எனது தப்பாகப் போயிற்று.

அவர்கள் வந்து பல விசாரணைகள் மூலம் என்னைத் திணறடித்தனர். நான் இது தற்கொலையென உறுதிபடச் சொன்ன போதும் இறப்பிற்கான காரணம் எதையும் எழுதி வைக்காமல் இறந்துபோனதால் கொலையாக இருக்கக் கூடுமெனச் சொல்லி என்னைச் சந்தேகித்தனர். பாவி.படுபாவி.. 'வாழப்பிடிக்கவில்லை. ஆதலால் நான் தற்கொலை செய்துகொள்கிறேன்' என ஒரு வரியெழுதி வைத்துவிட்டுச் செத்தொழிந்திருந்தாலென்ன? மரணவிசாரணை அறிக்கைகளும், பிரேதப் பரிசோதனை அறிக்கைகளும் எனக்கெதிராகவே இருந்தன.

நான் அவளைத் தள்ளிவிட்டு விழுந்த அன்று அவளது வலது கை விரல்களிலொன்று எலும்பு முறிவிற்காளாகியிருந்திருக்கிறது. இரண்டு நாட்களாக அவள் எதுவும் சாப்பிடாமல் பட்டினியிலிருந்திருக்கிறாள். விசாரணையின் போது நான் காலையில் வீட்டிலிருந்து சென்றதாகப் பொய்யாய்ச் சொன்ன நேரத்துக்குச் சற்றுமுன்னர்தான் அவள் விஷத்தினை அருந்தியிருந்திருக்கிறாள். கதவின் தாழ்ப்பாள்க் கொக்கியில் இறுதியாப் பதிந்த கைரேகை எனதாக இருந்ததோடு , இறுதியாக பிணத்தின் தலையில் பூச்சாடியால் அடித்திருந்ததும் என்னைக் கொலைகாரனெனத் தீர்ப்பெழுதப் போதுமானதாக இருக்கிறது. எனினும் இன்னும் தீர்ப்பு வரவில்லை. அதுவரையில் விசாரணைக் கைதியாகச் சிறையிலடைக்கப்பட்டிருக்கிறேன்.

எனது பெண் சினேகிதி சாட்சியங்களோடு எனக்கு உதவிக்கு வருவாளென நினைத்தேன். ஆனால் அவள் இதுவரை வரவில்லை. அவள் தனது கணவனுக்குப் பயந்திருக்கக் கூடும். எனது சிறைத் தோழனே... இப்பொழுது நீங்கள் சொல்லுங்கள். என்ன குற்றத்தைச் செய்துவிட்டு நீங்கள் சிறையிலிருக்கிறீர்கள் ?

மீண்டுமொன்றை ஆரம்பத்தில் சொல்ல மறந்துவிட்டேன். அஸ்விதா ஒரு பிறவி ஊமைப் பெண்.

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை.

நன்றி
# அகநாழிகை இலக்கிய இதழ்
# உயிர்மை
# நவீன விருட்சம்
# திண்ணை