Friday, August 15, 2008

வனாந்தரத்தைத் தொலைத்தவள் !

விடிகாலை ஆகியிருந்தது. இன்னும் முற்றிலுமாக இருள் விலகியிருக்கவில்லை. செல்வராணிக்கு அதற்கு மேல் உறங்கப் பிடிக்கவில்லை. உறங்க நினைத்தாலும் 'உறக்கம் வருவேனா ? ' என்றிருந்தது. நேற்றிலிருந்து கனவுகளிற்குள் மூழ்கத் தொடங்கியிருந்தவளின் மனதிற்குள் காதல் பாடல்களாய் ஒலித்துக் கொண்டிருந்தன.

சட்டென்று எழுந்து போர்வையை மடித்துவைத்துவிட்டு தாவணியைச் சரி செய்துகொண்டாள்.விளக்கேற்றினால் பக்கத்தில் படுத்திருக்கும் தங்கைகளின் தூக்கம் கலையுமென்று சிறுவயதிலிருந்தே பழகிய இடமாதலால் இருட்டுக்குள்ளும் எதிலும் முட்டிமோதாமல் குசினிக்கு நடந்தவள் அங்கிருந்த சிறு சிம்னி விளக்கைப் பற்ற வைத்து குசினிக்கு ஒளியூட்டினாள்.அடுப்பிலிருந்த குளிர்ந்த சாம்பலையள்ளி உள்ளங்கையில் ஏந்திப் போய் பல் துலக்கி, முகம் கழுவி வந்தாள்.கடற்காற்று சிம்னி விளக்கை அணைத்து விடுவதிலேயே தன் பலம் முழுவதையும் செலவழித்துக் கொண்டிருந்ததைப் போலிருந்தது.

நேற்றுக் காலை தம்பி பிளந்து போட்டிருந்த விறகுத் துண்டுகளைப் போட்டு சிறிது மண்ணெண்ணெய் ஊற்றி அடுப்பினை எரிய வைத்துத் தண்ணீரைக் கொதிக்க வைக்கமுயன்றாள். ஈரலித்திருந்த விறகுத் துண்டுகளிலிருந்து பெரும் புகை கசிந்து குசினியைச் சூழ்ந்துகொள்ள ஆரம்பித்தது.வேறொரு நாளென்றால் பெரும் எரிச்சலைச் சுமந்தவளாக முணுமுணுத்தபடி இருந்திருப்பாள். ஆனால் இன்று அப்படியில்லை. அவள் மனம் முழுவதிலும் ஸ்ரீதர் வண்ணம் வண்ணமாகக் கனவுகளைப் பூசி , வரப் போகும் வசந்தத்தை எதிர்பார்த்தவாறான மெல்லிசையொன்றை இசைத்துக் கொண்டிருந்தான்.

இருள் இன்னும் ஆக்கிரமித்துக் கொண்டே இருந்தது. அதன் நீண்ட பெரும் கரங்கள் அவள் வீட்டை , அருகிலிருந்த கடலை, அவளது ஊரை முழு இரவும் ஆட்சி செய்து இன்னும் தன் பிடியில் கொண்டிருந்தது.அவளது இரண்டு தங்கைகளும் தம்பியும் இன்னும் உறக்கத்திலிருந்தார்கள். ஞாயிறு விடுமுறை நாளென்பதால் அவர்களை எழுப்பாமல் தூங்கவிட்டிருந்தாள். முன்னறையிலிருந்து அப்பா இருமும் சத்தம் கேட்டது. அவருக்கும் இவளைப் போல இரவு முழுதும் உறக்கம் இருந்திருக்காது.

செல்வராணி தன் விரலில் பளபளத்த புது மோதிரத்தைப் பார்த்துக் கொண்டாள். குறைந்தது அரைப் பவுணாவது இருக்கும். அழகிய வடிவத்திலான தங்க மோதிரத்தின் மத்தியில் சிறிய சிவப்புக்கல் பதிக்கப்பட்டிருந்தது.அது எவ்வளவு பெறுமதியானதாக இருப்பினும் அவளுக்கென்ன ? ஒரு ஆண்மகன் முதன்முதலாக ஆசையாக அவள் விரல்களில் அணிவித்தது. இப்படிப்பட்ட ஒரு நாளுக்காகத்தானே அவள் இவ்வளவு நாளும் காத்திருந்தாள். இந்த உலகையே விலையாக்கி அவளிடம் கொடுத்து மோதிரத்தைத் திருப்பிக் கேட்டால் கூட கொடுக்கவே மாட்டாள் என்பதைப் போல மிக ஆசையாக ஒரு புன்னகையோடு அதனையே பார்த்தவாறிருந்தாள்.

தண்ணீர் கொதிக்கும் சத்தம் கேட்டு சுயநினைவுக்கு வந்தவள் சிவப்புத் தேனீர் ஊற்றியெடுத்து கருப்பட்டித் துண்டோடு அப்பாவிடம் கொண்டுபோய்க் கொடுத்தாள்.ஏதோ யோசனையோடு கயிற்றுக் கட்டிலில் அமர்ந்திருந்த அப்பா இவளை ஏறிட்டுப் பார்த்து எதுவும் சொல்லாமல் வாங்கிக் கொண்டார். திரும்பவும் குசினிக்கு வந்தவள் நேற்றுச் செய்து எஞ்சியிருந்த இனிப்புப் பலகாரங்களை ஒரு தட்டில் வைத்து அப்பாவிடம் கொண்டுபோய்க் கொடுத்தாள்.

அவளுக்குச் சட்டென்று தன் அம்மா நினைவு வந்தது. அவளது சிறுவயதில் ஏதாவது விஷேசங்களின் போது அம்மா இதுபோலச் செய்து அன்பாகத் தருவாள். கடைசித் தங்கையைப் பிரசவித்த அதே நாளில்தான் அம்மாவும் இறந்து போனாள். பிரசவத்திற்காக வீட்டிலிருந்து போகும் போது இவளை அருகில் அழைத்துத் தலையைத் தடவி ' வீட்டைப் பத்திரமாப் பார்த்துக்கோ ராணி ' என்று சொல்லிப் போனது இவள் காதுகளில் இன்றும் எதிரொலிக்கிறது. அம்மா அவளிடம் கடைசியாகச் சொல்லிச் சென்றபடியே இன்றுவரையில் அவள் வீட்டைப் பத்திரமாகப் பார்த்துக் கொண்டுதானிருக்கிறாள். அருகிலிருந்து பார்க்கத்தான் அம்மா இல்லை.

நேற்று இந்த நேரங்களில் மனதில் எந்த ஆரவாரங்களுமற்று மிகவும் சாதாரணமாகவே எந்நாளையும் போல வளைய வந்தாள். எல்லாம் ஒரு மாதத்திற்கு முன்னர் அவளைப் பெண் பார்த்துவிட்டுப் போன ஸ்ரீதர் வீட்டிலிருந்து 'பெண்ணைப் பிடித்திருக்கிறது.இன்று மாலையே நிச்சயிக்க வருகிறோம் ' என்ற தகவல் கிடைக்கும் வரை தான். மீன் வியாபாரத்திற்காகப் போயிருந்த அப்பாதான் உடனே வீட்டுக்கு வந்து அவளிடம் விடயத்தைச் சொன்னார்.

அவளுக்கு தான் வானத்தில் மிதப்பது போல இருந்தது. எந்தப் பிடிமானமும் அற்ற ஒரு கொடியாகத் தன்னை எண்ணியிருந்தவளுக்கு ஒரு பெருவிருட்சமே படரக் கிடைத்தது போல ஆறுதலாக உணர்ந்தாள். இத்தனைக்கும் அவளைப் பெண் பார்க்க வந்த அன்று ஸ்ரீதரை அவள் ஒழுங்காகப் பார்க்கக் கூட இல்லை.ஏற்கெனவே இருபதிற்கும் மேற்பட்ட வரன்கள் வந்து பார்த்துப் போய்த் தட்டிக் கழித்து இருபத்தெட்டு வயதாகி நிற்கும் தன்னைக் கூட ஒருவர் பார்த்து ஏற்றுக்கொண்டு நிச்சயிக்க வருகிறார் என்பதே செல்வத்தைப் பெயரில் மட்டுமே கொண்டவளுக்கு பேருவகை கொள்ளவும் , அவர் மேல் விருப்பம் கொள்ளவும் போதுமானதாக இருந்தது.கொடுக்கப்பட வேண்டிய சீதன விபரப் பட்டியலும் அப்பாவால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது.

அவர்கள் வருகிற விடயத்தைக் கேள்விப்பட்ட உடனேயே தங்கைகளுடன் சேர்ந்து வீட்டைச் சுத்தப்படுத்தி இயன்றவரையில் அழகுபடுத்தினாள்.அக்கம்பக்கத்து வீடுகளிலிருந்து பிளாஸ்டிக் கதிரைகளை இரவல் வாங்கி வீட்டு முன் சாலையில் போட்டாள். இரண்டு தெரு தள்ளியிருந்த சித்தி வீட்டுக்குத் தம்பியிடம் தகவலனுப்பி சித்தியை வரவழைத்து வருபவர்களை உபசரிப்பதற்காக பலகாரங்கள் செய்தாள்.உடல் மற்றும் மனம் முழுதும் கல்யாணக் களை தாண்டவமாட அவள் இயந்திரமாக இயங்கினாள்.

நிச்சயம் செய்ய வருகிறார்களென்றதும் மாப்பிள்ளை வீட்டிலிருந்து பெரும் கூட்டத்தை எதிர்பார்த்திருந்தார்கள் அவர்கள்.ஆனால் ஸ்ரீதரோடு அவனது பெற்றோரும் , அக்காவும் மட்டுமே வந்திருந்தார்கள். அக்கா குழந்தை எளிமையான அலங்காரத்தோடிருந்த இவளையே சுற்றிச் சுற்றி வந்தது. அவனது உறவுகளும் இவளது நெருங்கிய சொந்தங்களும் பார்த்திருக்க , மகிழ்ச்சி முகங்கள் சூழ்ந்திருக்க அவளுக்கு அவன் மோதிரம் அணிவித்தான். ஒரு வாலிபனின் கரம் முதன்முதலாகத் தொட்டதில் இயல்பாகவே வெட்கிச் சிவந்தவளை ஸ்ரீதர் ஒரு கணம் இமைக்காமல் பார்த்திருந்தான்.திருமணத்தை வரும் மாதத்தின் இரண்டாம் ஞாயிறன்று நடத்துவதாக உறுதி செய்யப்பட்டது.

அவள் வாழ்வினைப் போலவே விடிய ஆரம்பித்திருந்த கடல் வெளியை ஜன்னல் வழியே பார்த்தவாறிருந்தாள். திருமணத்திற்காக வீட்டுக்கு வர்ணம் பூசும் போது துருப்பிடித்திருந்த ஜன்னல் கம்பிகளுக்கும் வர்ணம் பூசவேண்டுமென எண்ணிக் கொண்டாள். அப்பா தான் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் தனது பிள்ளைகளைப் பட்டினியில் போட்டதில்லை.கஷ்டப்பட்டு உழைக்கும் பணத்தில் ஓரளவு சேமித்து வைத்திருந்தார்.அது இது போன்ற நல்ல காரியங்களின் போது பெரிதளவில் உதவும் என்பது சரியாகிப் போயிற்று இன்று.

அவள் காலை உணவை சீக்கிரமாகச் செய்ய ஆரம்பித்தாள். அப்பா முகம் கழுவிக் கொண்டு அறைக்குள் போவது தெரிந்தது. பெரும்பாலும் ஞாயிற்றுக் கிழமைகளில் அவர் வியாபாரத்துக்குச் செல்வது பகல்வேளையில் தான். அந்த நேரத்தில் தான் புதிதாக மீன்கள் கரைக்கு வரும். அவற்றை ஏலத்தில் வாங்கி சைக்கிளில் பக்கத்து ஊர்களுக்கு எடுத்துச் சென்று விற்றுவருவது அவரது தொழில்.

காலை உணவுவேலைகள் முடிந்ததும் பூரணி அக்கா வீட்டுக்குப் போய் தனக்குச் சில உடுப்புக்கள் தைக்கக் கொடுக்க வேண்டுமென நினைத்துக் கொண்டாள்.பூரணி அக்கா வீடு நாலு தெரு தள்ளியிருந்தது. இதுவரையில் எங்கேயும் தனியாகப் போக அப்பா அனுமதித்தது கிடையாது.அவளது எல்லாப் பயணங்களும் தம்பியுடனும் ,அப்பாவுடனுமே நிகழ்ந்திருக்கின்றன.

சமையல் முடிந்ததும் சிறிய சாப்பாட்டு மேசையில் உணவை ஒழுங்குபடுத்தி அப்பாவை அழைத்துப் பரிமாறினாள். அவர் சாப்பிட்டு முடிக்கையில் உடுப்புத் தைக்கப் போகவேண்டுமென்பதைச் சொன்னவளுக்கு எதிர்பாராவிதமாகத் தனியே செல்ல அனுமதி கிடைத்தது. எல்லாம் ஒரு மோதிரம் செய்த மாயம். ஒரு மோதிரம் அவள் வாழ்விலிருந்த சில தடைகளை ஒரு சாவியைப் போலத் திறந்து விட்டிருந்தது.

அவளும் தனது உணவை முடித்துக் கொண்டு ,மேசையை ஒழுங்குபடுத்தி, மீண்டும் முகம்கழுவி வந்தாள்.இருந்ததிலேயே நல்ல ஆடையொன்றை அணிந்து கொண்டவள் முகத்தில் லேசாகப் பவுடர் தடவிக் கொண்டாள். தைக்கப்பட வேண்டிய துணியை பையில் போட்டு எடுத்துக் கொண்டு தம்பி,தங்கைகளை எட்டிப் பார்த்தாள். அவர்கள் இன்னும் நித்திரையிலேயே இருக்க விலகியிருந்த போர்வையைச் சரிசெய்து அப்பாவிடம் சொல்லிக் கொண்டு வீதியிலிறங்கி நடந்தாள்.

அவள் பூரணி அக்கா வீட்டுக்குப் போய் துணி தைக்கக் கொடுத்துவிட்டு , தனது வீடு நோக்கிச் சில அடிகள் எடுத்துவைத்த வேளையிலேயே அந்தப் பெருஞ்சத்தம் கேட்டது.

************************************************

எல்லோருடனும் அவள் முகாமிலிருந்தாள்.அப்பாவினதும் , தம்பி , தங்கைகளினதும் சடலங்கள் சிக்கி உடனுக்குடனே புதைக்கப்பட்டன எனக் காற்று வழி வந்த செய்திகள் சொல்லின. அழுதழுதே கண்ணீர் வற்றிப் போன விழிகளிரண்டும் கருவளையங்களைச் சுமந்து சோர்ந்திருந்தன.தொண்டு நிறுவனங்கள் உணவையும் மருந்தையும் வழங்கியவாறு இருந்த போதிலும் அவளுக்கு எதுவும் தேவையற்றதைப் போலவே உட்காந்திருந்தாள். இழப்பின் வலியானது அவளை மிகவும் பாதித்திருந்தது. தூக்கமில்லை .பசிக்கவில்லை. அப்பாவின் பாசமுகம் ,தம்பி,தங்கைகளுடனான செல்லச் சீண்டல்கள் நினைவுகளில் மாறி மாறி இடறிக் கொண்டே இருக்கையில் இப்படியொரு இடர் சூழ்ந்த பொழுதில் தன்னை மட்டும் காப்பாற்றிக் கொண்டேனோ என்றும் துயருற்றுச் சோர்ந்தாள்.

அவளது வீடு இருந்த சுவடே இல்லையெனப் பேசிக் கொண்டார்கள். இருப்பினும் அப்பாவும் , உடன்பிறப்புகளும் உயிரோடு இருப்பார்களென்ற நம்பிக்கையின் கீற்று அவளுள்ளத்தில் இருந்துகொண்டே இருந்தது.

"ராணி அக்கா, உங்களைத் தேடி யாரோ வந்திருக்காங்க. உங்க பேரைச் சொல்லி விசாரிச்சாங்க "

ஒரு சிறுமி வந்து சொன்னதும் பரபரப்பாக உடனே எழுந்துகொண்டாள்.அங்கிருந்தபடியே முகாம் வாசலை எட்டிப் பார்த்தாள். ஸ்ரீதர் நின்றிருப்பது தெரிந்தது.கால்கள் துவழ முகாம் வாசலுக்கு வேகமாக நடை போட்டாள்.ஸ்ரீதர் இவளை ஏறிட்டுப் பார்த்து " உன்கிட்டக் கொஞ்சம் பேசணும் " என்று முகாம் சுவரோரமாக நகர்ந்தான். அவள் மௌனமாகப் பின் தொடர்ந்தாள்.

"உன் வீட்டுப் பக்கம் போனேன். வீடு இருந்த அடையாளமே இல்ல. அப்பா, தம்பி,தங்கச்சிங்க எல்லோருமே இல்லாமப் போயிட்டாங்கன்னு பேசிக்கிட்டாங்க. நீ இங்கேயிருக்கிறது இப்பத்தான் தெரிஞ்சது..அதான் ஓடி வந்தேன். "

'ஒரு உறவெனத் தேடி இவராவது வந்திருக்கிறாரே ' என மனம் சிறிது ஆறுதலடைந்திற்று. இந்தக் கொடி படர வேண்டிய விருட்சம் , வனாந்தரமே அழிந்திட்ட போதிலும் கொடியைத் தேடி வந்திருக்கிறது. அந்த விருட்சத்தின் வேர்கள் முழுவதுமாக நனைந்திடும் அளவுக்குக் கதறியழும் வீழிநீரைக் கொடி கொண்டிருக்கிறது இப்போது.

அவள் அவனை நிமிர்ந்து பார்த்தவாறே இருந்தாள். நிலத்தில் எதையோ தேடுவதைப் போலத் தலை குனிந்து கொண்டவன்,
" நம்ம நிச்சயதார்த்தம் நடந்த வேளையிலதான் அபசகுனமா இப்படிச் சுனாமியெல்லாம் வந்திருக்குன்னு என்னோட வீட்டுல நினைக்கிறாங்க. வீட்டுல உள்ளவங்களை மீறி உன்னைக் கட்டிக்கிறது சாத்தியமில்ல. அதான் நம்ம கல்யாணம் இனிமே நடக்காதுன்னு சொல்லிட்டுப் போக வந்தேன். அந்த மோதிரத்தைக் கழட்டிக் கொடுத்துட்டேன்னா இருட்டுறதுக்குள்ள வீட்டுக்குப் போய்ச் சேர்ந்திடுவேன் " என்றான்.

- எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

Friday, August 1, 2008

எச்சம்


"அவனோட பேரைச் சொல்ற மாதிரியோ, அவனை ஞாபகப்படுத்துற மாதிரியோ எதுவுமே இனிமேல இந்த வீட்டில இருக்கக்கூடாது. ராசிம்மா, எல்லாத்தையும் சேர்த்து வை. யாராவது ஏழை ,எளியதுகளுக்குக் கொடுத்துடலாம் ".

வீட்டிற்கு வந்த உடனேயே கூடத்திலிருந்த பலகையைத் தூக்கி வெளியே எறிந்தவாறே சொன்னார் ராசாத்தியின் அப்பா. அது முன்பக்க வேலியோரத்திலுள்ள கல்லின் மேல் விழுந்து சப்தமெழுப்பி அடங்கியது. முற்றத்திலிருந்து வீட்டுக் கூடத்துக்கு இரண்டு படிகள் ஏறி வரவேண்டும். அந்தக்காலப் படிகள். ஒவ்வொன்றும் ஒரு அடியளவு உயரத்தில் கருங்கல்லினால் கட்டப்பட்ட உயர்ந்த படிகள். அவரது பெற்றோர் மூலம் கிடைத்த பூர்விகச் சொத்தாக எஞ்சியிருந்த ஒரே வீட்டின் படிகள். காலம் காலமாக அந்த வீட்டின் குடித்தனங்களைப் பார்த்துப் பார்த்துத் தேய்ந்த படிகள்.

குமார் அந்தப்பலகையைப் படிகளின் மீது வைத்துத்தான் இரவுகளில் மோட்டார் சைக்கிளை உள்ளே கொண்டு வந்து வைப்பான். குமாருக்கு அந்த வீட்டில் மிகப்பிடித்தவையாக இருந்தவை இரண்டுதான். ஒன்று அந்த மோட்டார் சைக்கிள். மற்றது ராசாத்தியின் ஒரே தங்கை கல்யாணி.

பலகை விழும் சத்தம் கேட்டு பாடக்கொப்பியோடு உள்ளேயிருந்து வந்து எட்டிப்பார்த்தாள் கல்யாணி. அவள் இந்த வருடம் தான் உயர்தரப்பரீட்சை எழுதுவதற்காகக் காத்திருக்கிறாள். கண்களில் மேற்படிப்புப் பற்றிய கனவுகள் மிதந்தன. அம்மா இறக்கும் முன் அக்காவிடம் தங்கையை நன்றாகப் படிக்கவைக்கும் படி சொல்லியிருக்கிறாளாம். முற்றத்தைப் பார்த்துவிட்டு, வாசல் தூணைப் பிடித்தவாறே கண்கள் கலங்கிச் சிவந்திருந்த அக்காவைப் பார்த்தாள். உதடுகள் துடித்தபடி பெரும் அழுகையை அடக்கச் சிரமப்பட்டபடி நின்றுகொண்டிருந்தாள் ராசாத்தி.

வெளியே போய்விட்டு அப்போதுதான் வந்த அப்பா, சட்டையைக் கழற்றிவிட்டுச் சாய்மனைக் கதிரையில் உட்காந்து கொண்டார். போன காரியம் என்னவாயிற்று என அப்பா ஏதாவது சொல்வாரென அப்பாவை ஒரு கணம் பார்த்தாள் ராசாத்தி. ஆளுருக்கும் வெயிலின் கிரணங்கள் , முகத்தில் வயோதிபத்தையும் மீறிக் கருமையைத் தந்திருந்தது. இளகிய மனம். அன்பான அப்பா. தற்போதைய முகத்தில் கோபத்தின் அடர்த்தி, இயலாமையின் பரிதவிப்பு வியாபித்திருந்தது. வியர்த்து வழிந்த மேனியைத் துண்டால் துடைத்தவாறே கண்மூடிக் கொண்டார் அவர்.

கல்யாணி உள்ளே போய் கூஜாவிலிருந்த குளிர்ந்த நீரை ஒரு கிளாஸில் எடுத்துவந்து அப்பா முன்னிருந்த சிறிய மேசை மேல் வைத்து " என்னாச்சுப்பா? " என்றாள். அவர் மெதுவாகக் கண்திறந்து பார்த்து திரும்பவும் கண்ணை மூடிக் கொண்டார். அவராகவே சொல்லுவார் என அவள் அருகிலிருந்த கதிரையில் அமர்ந்துகொண்டாள்.

உள் அறையில் தொட்டிலில் படுத்திருந்த ராசாத்தியின் ஆறுமாதக் குழந்தை சிணுங்கும் சப்தம் கேட்டது. ராசாத்தி திரும்பவும் அப்பாவை ஒருமுறை பார்த்துவிட்டு தனது அறைக்குப் போய்த் தொட்டிலை ஆட்டத்தொடங்கினாள். தாலாட்டாக எதையும் பாடவில்லை. கண்ணில் வழியும் கண்ணீர் குரலைக் கரகரப்பாக்கிக் காட்டிக் கொடுத்துவிடும்.

இனி அவளது வாழ்வின் எஞ்சிய நாட்களில் குமார் இல்லை என்பது மட்டும் அப்பா சொல்லாமலேயே புரிந்துவிட்டது. அறையைச் சுற்றிப் பார்வையைச் சுழல விட்டாள். குமார் கடைசியாக வீட்டைவிட்டுப் போகும்போது தன்னால் இயன்றதையெல்லாம் கொண்டுபோயிருந்தான்.குழந்தை தூங்கியபிறகு அலமாரியிலிருக்கும் அவனது பழைய உடுப்புக்களையும், கட்டிலின் கீழிருக்கும் ஒரு சப்பாத்துச் சோடியினையும், மேசையின் மேலிருக்கும் அவனது சீப்பு மற்றும் எண்ணெய் போத்தலையும் சேர்த்து மூட்டை கட்டி அப்பாவிடம் கொடுக்கவேண்டும் என்ற எண்ணம் அவள் மனதில் ஓடலாயிற்று.

குழந்தை கண்மூடியிருந்தது. தொட்டில் ஆடுவது ஒரு கணம் நின்றுபோயிடினும் கைகள் இரண்டையும் இறுக்க மூடிக் கண் திறந்து பார்த்து மலங்க மலங்க விழித்தது. விழித்த கண்களில் தூக்கம் இன்னும் மிச்சமிருப்பது தெரிந்தது. ராசாத்தி தொட்டிலை ஆட்டிக் கொண்டேயிருந்தாள். இந்தத் தொட்டிலைக் கட்டித்தரச் சொல்லிக் கேட்ட அன்றுதான் குமாரிடமிருந்தான இறுதி அடிகள் அவளுக்கு விழுந்தன.

அவனது அடிகளில் என்றும் கணக்குவழக்கே இருந்ததில்லை. சின்னச் சின்னக் கோபத்துக்கெல்லாம் கை நீட்டப்பழகியிருந்தான். அவளும் அமைதியாக அத்தனை அடிகளையும் வாங்கிக் கொண்டேயிருப்பாள். அவன் வீட்டிலில்லாத பொழுதுகளில் தன் நிலையை எண்ணி அழுவாள். அவன் முன்னால் அழுதாலும், மூதேவி எனத் தொடங்கும் வசவு வார்த்தைகளைக் கொண்டு திட்டியவாறே திரும்பத் திரும்ப அடிப்பான். அன்றைய தினம் பெரும் பிரச்சினை வரக்காரணம் அவனது அடிகளையும், கொடுஞ்சொற்களையும் அப்பா கேட்க நேர்ந்ததுதான்.

அது குழந்தை பிறந்த நான்காம் மாதம். குழந்தைப்பிறப்பில் பிரச்சினையாகி சத்திர சிகிச்சையின் போது குழந்தையோடு, அவளது கருப்பையையும் முற்றாக நீக்கிவிட்டிருந்தனர். பத்துமாதம் குழந்தையைச் சுமந்த அவளுடல், பருத்துப் போய்க் கொஞ்சம் அவலட்சணமாகியிருந்தது உண்மைதான்.

அவள் வீட்டுக்கு வந்த நேரம் தொட்டு அவன் வார்த்தைகளால் வதைக்கலானான். அவள் துரதிர்ஷ்டக்காரியென்றும் அவனுக்கு நிறையக் குழந்தைகள் வேண்டுமென்றும் அவளால் இனி முடியாதாகையால் தங்கையைக் கட்டிவைக்குமாறும் கேட்டு அவளை நச்சரிக்கலானான். அவனிதை முதன்முறை சொன்னபொழுதில் அவள் மிகவும் அதிர்ந்து போனாள். பிற்பாடு அவன் எல்லாச் சண்டைகளின் போதும் இதையே சொல்லிவர அவளுக்குப் பழகிவிட்டது. தீயின் நாக்குகள் நெருப்பை எரிந்துகொண்டேயிருந்தன.

கல்யாணி இவளை விடவும் மிகுந்த அழகினைத் தன்வசம் கொண்டிருந்தாள். அதிலும் இளமையோடு, சிவப்பாக இருந்தது அவளை அவன் பக்கம் ஈர்த்திருக்கக்கூடும். ராசாத்திக்கு அவள் தங்கை என்பதனை விடக் குழந்தை என்பதே சரி. அவளது பத்துவயதில் பிறந்திட்ட தங்கை. அம்மாவைப் புற்றுநோய் தாக்கி இறந்துபோனதிலிருந்து அவளைப் பார்த்துப்பார்த்து வளர்த்தவள் இவள்தான்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர்தான் ராசாத்திக்குக் கல்யாணமாயிற்று. ராசாத்தியின் கரிய நிறம் அவளைப் பெண் பார்க்கவருபவர்களின் கண்களை மிகவும் உறுத்தியதில் அனேக வரன்களால் நிராகரிக்கப்பட்டாள். இறுதியாக வந்த குமாரும் முதலில் மறுத்துவிட்டுப் பின்னர் சில ஒப்பந்தங்களோடு சம்மதித்தான். ரொக்கமாக ஒரு தொகைப்பணமும், ஒரு மோட்டார் சைக்கிளும், அவர்கள் குடியிருக்கும் வீடும் அவனுக்கு வேண்டுமென்று தரகரிடம் கேட்டு, தரகர் ராசாத்தியின் அப்பாவிடம் ஒப்புதல் வாங்கிய பிறகே அவன் கல்யாணத்திற்குச் சம்மதித்தான்.

மாதாந்தம் வரும் பென்ஷன் பணத்தில் தன் இரு மகள்களுக்குமான செலவுகளைச் சமாளித்து வாழ்ந்துவந்தவருக்கு கல்யாணச் செலவுக்கு தனது ஒரே தென்னந்தோப்பை விற்பதனைத் தவிர வேறுவழியிருக்கவில்லை. விற்று வந்தபணத்தில் குமாருக்கான ரொக்கப்பணத்தோடு, மோட்டார் சைக்கிளையும் வாங்கிக் கொடுத்துக் கல்யாணச் செலவு முழுவதையும் அவரே ஏற்றுச் செய்தார். திருமணம் முடிந்து சில மாதங்களில்தான் குமாரின் சுயரூபம் தெரியவரலாயிற்று.

தினந்தோறும் மதுவாசனையோடு வீட்டுக்கு வரலானான். ஒரு நள்ளிரவில் குடித்துவிட்டு, சைக்கிளோடு வீதியில் விழுந்துகிடந்தவனை இவர்தான் தேடிப்போய்க் கூட்டி வரவேண்டியிருந்தது. அவன் வீட்டிலிருந்த சமயமெல்லாம் கல்யாணியையே தேனீர் தரச் சொல்வதும், உணவு பரிமாறச் சொல்வதும் அவனது ஆடைகளைத் துவைக்கச் சொல்வதுமாக இருந்ததில் முதன்முதலாக அச்சத்தின் சாயல் அவர் மனதில் படியலாயிற்று.

'வீட்டை அவனுக்குக் கொடுத்தாயிற்று.. இன்னும் நாமிங்கே இருப்பது சரியில்லை' என்று ராசாத்தியிடம் காரணம் சொல்லி விட்டு இரண்டு தெரு தள்ளியிருந்த ஒரு வீட்டுக்குத் தங்கள் உடமைகளோடு வாடகைக்குக் குடிபோனார்கள் அப்பாவும், தங்கையும். வீட்டில் குமார் இல்லாத சமயங்களில் இருவரும் வந்து ராசாத்தியைப் பார்த்துவிட்டுப் போனார்கள். குழந்தைப் பிறப்பின் போதும், வைத்தியசாலையிலும் கூடவே உதவிக்கு இருந்தார்கள்.

அன்றைய தினம் தொட்டில் கட்டித்தரச் சொல்லிக் கேட்ட பொழுதில் ஆரம்பித்த சண்டையின் போது அவன் ராசாத்தியை அடித்து, கல்யாணியுடனான திருமண எண்ணத்தைச் சத்தம்போட்டுச் சொன்னது அப்போதுதான் வீட்டுக்கு வந்திருந்த அப்பாவினதும், கல்யாணியினதும் காதுகளிலும் விழுந்தது. அந்தச் சமயம் அவன் வீட்டிலிருப்பானென அவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை. அத்தோடு அவன் சொன்ன சொற்களின் தீக்கங்குகள் அவர்கள் மனதில் பற்றி எரியலாயிற்று. தொடர்ந்தும் அறையிலிருந்து ராசாத்திக்கு அடிக்கும் சப்தம் வந்ததில் அப்பாவின் கோபம் எல்லை கடந்தது.தன்னுயிர் வதைப்படுவதைக் காணச் சகிக்காத கோபம்.

அவர்களது அறைக்குள் போய் மகளுக்கு அடிவிழுவதிலிருந்தும் தடுக்க அவனைப் பிடித்துத் தள்ளிவிட்டதில் அவன் அலமாரியின் மூலைக்கு வீசப்பட்டுப் போய்விழுந்தான். விழுந்தவன் கைகளுக்கு சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த கட்டில் பலகை கிடைத்தது. அதனைத் தூக்கிக்கொண்டு அவரை அடிக்க வந்தான். அவர் அதைத் தடுக்க, அவன் மல்லுக்கட்ட... தொடர்ந்த கைகலப்பை முடிவுக்குக் கொண்டுவர, கல்யாணி அப்பாவை இழுத்துக் கொண்டுபோய் சமையலறைக்குள் அவருடன் உட்புறம் பூட்டிக் கொண்டாள்.

குமார் அதற்கு மேல் அங்கிருக்கவில்லை. தனக்குத்தேவையான எல்லாவற்றையும் சூட்கேசுக்குள் போட்டு அடுக்கியவன், தடுத்துத் தடுத்துப் பார்த்துத் திராணியற்று, வீறிட்டழும் குழந்தையைத் தோளில் போட்டவாறே நின்றிருந்தவளை ஒருகணம் முறைத்துப் பார்த்துவிட்டு மோட்டார் சைக்கிளில் ஏறிப் போய்விட்டான். போனவன் போனவன் தான். திரும்பவும் வரவேயில்லை.ராசாத்தி அவனுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ளமுற்பட்ட போதெல்லாம் அவளது அழைப்புக்கள் நிராகரிக்கப்பட்டுக் கொண்டே வந்தன.

வீட்டில் வாழாவெட்டியாக மூத்தபெண் இருந்தால் இளையவள் வாழ்க்கையும் பாதிக்கப்படுமே என்ற கவலை அப்பாவைப் பிடித்து வாட்டத் துவங்கியது. எப்படியாவது குமாரைச் சந்தித்து மன்னிப்புக் கேட்டு அவனைத் திரும்பக் கூட்டிவர எண்ணினார் அவர். நாலைந்து முறை அவன் ஊருக்குப் போனபோதெல்லாம் அவனைச் சந்திக்க முடியாமல் போகவே ஊர்த் தலைவரிடம் முறையிட்டு விட்டுப் போனார். அவர் இன்றுதான் வரச்சொல்லியிருந்தார்.

குழந்தை தூங்குவதைப் போல் தெரியவில்லை. கள்ளம்கபடமற்ற விழிகளைத் திறந்து இவளைப் பார்த்துப் புன்னகைத்தது. சிரிக்கக் கூடிய மனநிலையிலா இருக்கிறாள் அவள் ? மிகுந்த துயரத்தை மனம் சுமக்க, சிறு விளையாட்டுப் பொருளொன்றை அதன் கையில் கொடுத்துக் கட்டிலில் விட்டாள். குமாரது பொருட்களையெல்லாம் சேகரித்து அவனது சாறனொன்றிலேயே மூட்டை கட்டத் துவங்கினாள்.

கண் திறந்து பார்த்த அப்பாவிடம் " உங்களுக்கு குடிக்க ஏதாச்சும் ஊத்தட்டுமாப்பா? " எனக் கல்யாணி கேட்டாள். தலையை ஆட்டி மறுத்தவருக்குக் குமார் ஊர்த்தலைவர் வீட்டில் வைத்து எல்லோர் முன்னாலும் சொன்னது காதுகளில் மீண்டும் எதிரொலித்தது.

" அன்னிக்கு வீட்ட விட்டு அடிச்சுத் தொரத்திட்டு இன்னிக்கு மன்னிப்புக் கேட்க வந்திருக்கீக. எனக்கு நிறையக் குழந்தைங்க வேனும்..ஒத்தக் குழந்தைக்காக நான் கல்யாணம் பண்ணிக்கல. எனக்குக் கல்யாணியைக் கட்டி வைக்குறதுன்னாச் சொல்லுங்க..இப்பவே வாறேன். கட்டி வைங்க. ஒரு வீட்டிலேயே ரெண்டு பேரையும் வச்சுக் காப்பாத்துறேன். இல்லேன்னாச் சொல்லுங்க..இப்பவே அத்துவிட்டுடறேன். தாயும் வேணாம்..புள்ளயும் வேணாம் "

இதனைக் கேட்ட உடனேயே அவன் முகத்தில் 'தூ' எனக் காறியுமிழ வேண்டுமென எழுந்த எண்ணத்தைச் சிரமப்பட்டு அடக்கிக் கொண்டார். எதுவும் பேசாமலேயே வந்துவிட்டவர்தான் அவனது எல்லாப்பொருட்களையும் மூட்டை கட்டச் சொன்னார். ஒரு கிளியைப் பூனையிடம் கொடுத்து அதன் சிறகுகளை இழந்தது போதும்..இன்னொன்றின் சிறகுகளையும் இழப்பதற்கு அவர் மனம் ஒப்பவில்லை.

மூட்டையைத் தூக்கிவந்து அப்பாவின் அருகினில் வைத்தாள் ராசாத்தி. சத்தம் கேட்டு அவர் கண்திறந்து பார்த்தார். அவளது கரத்திலிருந்த குழந்தையை வாங்கிக் கொண்டார். அவர் காலடியில் அமர்ந்துகொண்டாள் ராசாத்தி.

" அவன் நமக்கு வேணாம்மா.ரொம்பத் தப்பாப் பேசுறான். அவனைக் கெட்ட கனவா நெனச்சு மறந்துடலாம். இனிமே அவனை ஞாபகப்படுத்துற எதுவுமே இந்த வீட்டுல என் கண்ணுல படக்கூடாது. எல்லாத்தையும் எங்கேயாவது கொண்டுபோய்த் தொலைச்சிடணும் "

அப்பா சொல்வதைக் கேட்டவாறே,

" இவனும் அவர அப்படியே உரிச்சு வச்சுப் பொறந்திருக்கானே...இவனை எங்கே கொண்டுபோய் நான் தொலைக்க ? " என்று கதறியழ ஆரம்பித்தாள் ராசாத்தி.


-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.