Tuesday, July 15, 2008

என் ஜன்னலின் சினேகிதி !


ராத்திரி கனக்க மழை பெய்திருக்கவேணும்.நல்லாக் குளிரடிச்சது.அம்மா,வெள்ளனையோட திறந்து விட்ட ஜன்னல்லிருந்து வெயில் வரேக்க எவ்வளவு சுகமாக்கிடக்குது.இண்டைக்கு இன்னும் அவளைக் காணேல்ல.வழக்கமா இந்த நேரத்திற்கெல்லாம் அவளிண்ட கூட்டத்தோட வந்து இந்த ஜன்னலடியில நிண்டு கத்திக்கொண்டிருப்பாள்.

அங்க பாருங்கோ.றோட்டிலை பிள்ளையளெல்லாம் ஸ்கூல் போறது தெரியுதில்லே?இப்படித்தான் நானும் முன்ன ஸ்கூலுக்குப் போய்க்கொண்டிருந்தனான்.வடிவா வெள்ளச்சட்டையெல்லாம் போட்டுக்கொண்டு போவன்.அம்மாதான் எண்ணையெல்லாம் வச்சு,ரெண்டு பின்னல்லயும்,கறுப்பு ரிப்பன் வச்சுக் கட்டியனுப்பிவிடுவா.சைக்கிள்ல போகேக்க ரிப்பன் பறக்கும் தெரியுமே? அவ்வளவு கெதியா நான் ஸ்கூலுக்குப் போவன் அப்பயெல்லாம்.

*****

"வாங்கோ சிவாண்ணை,எப்படியிருக்கிறியள்? வெளிநாட்டிலிருந்து வந்துட்டியளெண்டு கேள்விப்பட்டனான் தான்.நாங்களே வரவேண்டுமெண்டு இருந்தம்.வயசுப்பிள்ளை ரோஷினியை எங்கே விட்டுட்டு வாரதெண்டுதான் யோசிச்சுக் கொண்டிருந்தனான்.
உவள் ராஜமக்கா வரேல்லியே? "

"வந்தவள்.உவள் கோவிலடியில நிறைய ஊர்ப் பொண்டுகளோட கதச்சுக்கொண்டு நிக்குறாள்.கன நாளைக்குப் பிறகெல்லே ஊருக்கு வாரது.அதுவும் உந்தப் பொண்டுகள் சேர்ந்து கதைக்கத் தொடங்கிட்டுதெண்டால் நேரம் போறதே தெரியும்?அதுதான் நான் தங்கச்சி வீட்டுல நிக்குறன்.நீர் கதைச்சுப் போட்டு ஆறுதலா அங்க வந்து சேருமெண்டு சொல்லிப் போட்டு இங்க வந்தனான் "

*****

ஏன் இண்டைக்கு மட்டுமிவள் இவ்வளவு தாமதமெண்டு தெரியேல்ல.நீங்கள் பார்த்தனீங்களே அவளை?
தினமும் அம்மா தார இரவுச் சாப்பாட்டின்ர மிச்சம் மீதிகள இந்த ஜன்னலைத் திறந்து சட்டென்று வெளியே கொட்டிட்டு மூடிவிடுவன்.ராவில ஜன்னலைத் திறந்து வச்சுக் கொண்டு நிண்டமெண்டா பேய்,பிசாசு,ஆவியெல்லாம் வீட்டுக்குள்ள வந்திடுமெண்டு தெய்வானப்பாட்டி சொல்லியிருக்கிறவ.போன கிழமை குண்டடிபட்டுச் செத்த சரோ அக்காவின்ற ஆவியும் வருமாம்.

அவளும் நானும் நல்ல சினேகம்.எங்கட வீட்டுக்கு அயலிலதான் அவளிண்ட வீடுமிருக்குது.அவ வீட்டுல வெள்ளைக் கொய்யா இருக்குது பாருங்கோ.அது பறிச்சதெண்டால் எனக்கும் நாலஞ்சு காய் சொப்பிங் பேக்ல போட்டுக் கொண்டு வந்து தருவா.

*****

" இஞ்சருங்கோ.சிவாண்ணை வந்திருக்கிறார்.நீங்க உட்காருங்கோ அண்ணை.அவர் முத்தத்துல கோடறிக்குப் பிடி போட்டுக்கொண்டு நிக்கிறாரெண்டு நினைக்கிறேன்.பிள்ளைகள் வரேல்லியே?"

" இருக்கட்டும்.அவர் வேலை முடிஞ்சு மெதுவா வரட்டும்.நானும்,ராஜமும் விடிய முன்னமே வெளிக்கிட்டு வந்துட்டம்.கோயில்ல சனம் கூட முன்னம் சேவிச்சுட்டு வந்துடனுமெண்டுதான் கெதியா வந்தம்.பிள்ளையள் தூங்கிக் கொண்டிருந்தவை.இரவே சொல்லியிருந்தம்.அதாலை தேட மாட்டினம்."

"உந்த பெரிய அப்புச்சிப் பாட்டி,கிணத்தடியில வழுக்கி விழுந்து இடுப்பொடச்சிக் கொண்டவையில்லே.அப்ப இந்த ரோஷினியை சரோக்கிட்ட விட்டுட்டு ஓடிப்போய்ப் பார்த்துட்டு வந்தனான்.உங்கட பிள்ளையள் அங்கே நிண்டிச்சினம்.மாமி,மாமியெண்டு வடிவாக் கதச்சினம்.ஒரு நாளைக்கு இங்க கூட்டிக் கொண்டு வாங்கோவன் அண்ணை.சொந்த பந்தங்களையெல்லாம் அவையளும் தெரிஞ்சிக் கொள்ளவேண்டுமெல்லே."

"ஓமோம்.இப்ப பரீட்சை சமயமெல்லே.அதனாலதான் விட்டுட்டு வந்தனாங்கள்.அவையளுக்கும் இங்க வரவேணுமெண்டுதான் கொள்ளை ஆசை.அதுகளை நாங்கள் கூட்டிக் கொண்டு போனாத்தானே உண்டு.எங்கேயும் தனியா அனுப்பப் பயமாக் கிடக்கு."

*****

உங்களுக்குத் தெரியுமே...?உவள் சரோ கடைசியா வந்த நேரம்,நான் அம்மாக்கிட்ட மருதோண்டி வச்சு விடச் சொல்லி அடம் புடிச்சுக் கொண்டிருந்தனான்.உவள்தான் அரச்சு,சிரட்டையில கொண்டு வந்து,எண்ட உள்ளங்கைகள நீட்டச் சொல்லி வடிவா வட்டம் வட்டமா வச்சுவிட்டவள்.பாருங்கோ எவ்வளவு வடிவாச் சிவந்திருக்குதெண்டு.
என்னோடது வடிவான வெள்ளக் கையல்லோ.டக்கெண்டு சிவந்திடுமெண்டு அம்மம்மா சொன்னவ.நான் ஸ்கூலுக்குப் போற காலத்தில இப்படி மருதோண்டி வச்சுக் கொண்டு போனேனெண்டால் எண்ட வகுப்புல எல்லோரும் கைய நீட்டச் சொல்லி அழகு பார்ப்பினம்.அதுல உவள் ஜோதி..அதுதான் செல் விழுந்து குடும்பத்தோட செத்துப் போனாளே.உவள் என் கையை முகந்தும் பார்ப்பாள்.அவளுக்கும் என்னை மாதிரி மருதோண்டி வாசமெண்டால் கொள்ளைப் பிரியம்.

இப்பயும் எனக்கு சரோ அக்கா ஞாபகம் வரேக்கை இந்தக் கை ரெண்டையும் பார்த்துக் கொண்டிருப்பன்.வடிவா,சிவப்புச் சிவப்பா குட்டிக் குட்டி நிலாக்கள் மாதிரி இருக்கா? இது மாதிரித்தான் இப்ப சரோ அக்காவும் வானத்தில இருந்து என்னைப் பார்த்துக்கொண்டிருப்பா எண்டு அம்மா சொன்னவ.

*****

"வாங்கோ மச்சான்.எப்படியிருக்கிறியள்? முத்தத்துல கொஞ்சம் வேலையா இருந்தனான்.வந்து கனநேரமே? "

"இல்லையில்லை.இப்பத்தான் வந்தனான்.என்ன மச்சானிது? கனக்க மெலிஞ்சு போய் நிக்குறியள்?"

"அதையேன் கேக்குறியள்? வாரத்துக்கு மூணு முறை கடைக்குச் சாமான் வாங்க டவுனுக்குப் போகவேண்டிக் கிடக்கு.மாசத்துக்கு ரெண்டு முறை உவள் ரோஷினியை கூட்டிக் கொண்டு மருந்தெடுக்க டொக்டரிட்ட போகவேண்டியிருக்கு.கடும் அலைச்சல் கண்டியளே.
ஏண்டாப்பா இங்கேயே நிக்குறீர்? போய்த் தேத்தண்ணி ஊத்திக் கொண்டு வாரும்."

"ஓமோம்.குசினிக்குப் போகத்தான் இருந்தனான்.உவள் ராஜமும் வரட்டுமெண்டு இருந்தன்.இங்க பக்கத்துக் கோவிலடியில நிக்குறாளாம்.சரி.அவள் ஆறுதலா வரட்டும்.கதைச்சுக் கொண்டிருங்கோ.நான் தேத்தண்ணியோட வாறன்"

*****

என்னடாப்பா இது? காக்கை கரையுது முத்தத்துல.உந்தக் காக்கைச் சத்தம் கேட்டதெண்டால் என்றை சினேகிதி வரமாட்டாள்.முதல்ல உந்தச் சனியனை விரட்ட வேண்டும்.
"ச்சூ...ச்சூ..."
போற மாதிரித் தெரியேல்ல.என்ன பார்த்துக்கொண்டிருக்கிறியள்? கொஞ்சம் விரட்டிவிடுங்கோவன்.உதைக் கண்டால் அவள் வரமாட்டாள்.இந்த வீணாப்போனவையளக் கண்டா அவளுக்குச் சரியான பயம்.அதுலயும் கருப்பெண்டா எனக்கும் பயம்தான்.ராவைக்குக் கூட அம்மா பக்கத்துல படுத்தாலும் இருட்டில படுக்கமாட்டேன்.
இருங்கோ,இந்தப் பேனையால அவையளுக்கு வீசியடிக்கப் போறேன்.

*****

"பிள்ளைகள் வரேல்லியே?"

"இல்லை மச்சான்.உவள் ராஜமிண்ட தங்கச்சி செண்பகம் ஊரிலையிருந்து இடம்பெயர்ந்து வந்து இப்ப எங்கட வீட்டுலதான் தங்கியிருக்கிறவ.அவக்கிட்ட பிள்ளையளப் பார்த்துக்கொள்ளச் சொல்லிப் போட்டு வந்தனாங்கள்."

"ஓமோம்.அது நல்லது.உவள் 19 வயசுப் பெட்டை சரோ,இந்த மூன்றாம் வீட்டு அறிவுத்தம்பியோட மகள் உப்படித்தான்.போன கிழமை அவரிண்ட கிழக்கு வளவுக்குள்ளயிருந்து தென்னஞ்சூள பொறுக்கிக்கொண்டு வாரனெண்டு போனவள்.ரொம்ப நேரமாகியும் காணேல்லயெண்டு எல்லா இடத்திலயும் தேடித் தேடிக் கடைசில ராத்திரி குண்டடி பட்டுப் பிணமாக்கிடந்தவள சுடுகாட்டிலிருந்து தூக்கிவந்தம்.வல்லுறவுக்குமாளாக்கியிருந்திச்சினம்.வீட்டிலிருந்தாளெண்டால் உவள் இங்கேதான் ரோஷினியோட விளையாடிக் கொண்டிருப்பாள்.நாங்கள் எங்கேயாவது போறதெண்டால் கூட ரோஷினியை உவள் கிட்டத்தான் விட்டுட்டுப் போவம்.பாவம் நல்ல பிள்ளை."

"இந்தாங்கோ அண்ணை.தேத்தண்ணி ஊத்தேல்ல.வேப்பமரத்துல உந்த சாத்தாவாரி கனக்கக் கிடந்துச்சு.அதுதான் இடிச்சுக் கஞ்சி வச்சனான்.இந்தப் பனங்கருப்பட்டியோட குடிங்கோ அண்ணை.உடம்புக்கு நல்லது.வெளிநாட்டுல குடிச்சேயிருக்க மாட்டியள்."

"ஓம் தங்கச்சி.இதையெல்லாம் கனநாளைக்குப் பிறகு குடிக்கிறனான்.முன்னம் அம்மா சுவையாச் செஞ்சுதருவா இதுபோல.வெளிநாட்டுல சோறே ஒழுங்காக் கிடைக்காது."

*****

அட,பேனை வீசியடிக்கக் காக்கை பறந்திட்டுது.இங்க வாங்கோ.பாருங்கோ.அந்தக் கரண்ட் கம்பியில நிண்டு வெறிச்சுப் பார்த்துக்கொண்டு இருக்குதில்லே.உந்தக் கருப்பன்தான்.அடாடா பாருங்கோ.அதே கரண்ட் கம்பியில ஒரு வௌவால் தலைகீழாய்ச் செத்துக்கிடக்கு.உந்தக் காக்கைக்கு ஷொக் அடிக்காதே? மனுசருக்கெண்டால் ஷொக் அடிக்கும் தெரியுமே? நான் பார்த்திருக்கிறனான்.

உங்களோட கதைச்சுக் கொண்டு நிண்டதுல உவளை நான் மறந்துட்டன்.இன்னும் காணேல்லை.எனக்கு கவலையாக் கிடக்கு.பாருங்கோ,நீங்க இண்டைக்கு வந்த நேரமாப்பார்த்து இவள் வரேல்ல.தினசரி வாரவ.சிலநாள் நான் எழும்பமுன்னமே வந்து ஜன்னலடியில நிப்பாள்.பருப்புக் கடலை இருக்கேல்ல.அவளுக்கு அதுல கொள்ளை ஆசை.அவள் வந்தால் நான் அதத்தான் குடுப்பன்.
இண்டைக்கு உங்களுக்குக் காட்டோனுமெண்டு நினச்சன்.பாருங்கோ,இன்னும் வரேல்ல.

*****

"உவள் ரோஷினி எங்கே காணேல்ல? முன்னாடி நான் வந்தனெண்டால் மாமா,மாமாவெண்டு சொல்லிப் பின்னாலேயே திரிவாள்.இப்ப பதினேழு வயசு முடிஞ்சிருக்குமென்ன? என்ர பிள்ளை வாசனை விட ஒரு வயசுதானே குறைச்சல்? "

"ஓமண்ணை.பதினேழு வயசு முடிஞ்சிட்டுது.கேள்விப்பட்டிருப்பியள்.ஸ்கூலுக்குப் போயிட்டுவரேக்க 'ஐடிண்டி கார்ட் இல்ல,விசாரிக்கவேணும்'எண்டு ஆர்மியால தடுத்துநிறுத்தி முகாமுல கொண்டு போய் விசாரிச்சிருக்கினம்.கரண்ட் ஷொக் எல்லாம் கொடுத்திருக்கினம்.அதுல பிள்ளை நல்லாப் பயந்து போய் புத்தி பேதலிச்சுப் போயிட்டுது.பிள்ளை உயிரோட கிடைச்சதே போதுமெண்டு கூட்டிவந்துட்டம்.டொக்டரிட்ட காட்டிக் கொண்டிருக்கிறம்."

*****

கேட்குதே? உங்களுக்குக் கேட்குதே? அவள் வந்திட்டாள்.கேளுங்கோ.உந்த சத்தத்தைக் கேளுங்கோ.பூ நெல்லி மரத்தடியிலிருந்து கொண்டு சத்தம் போடுறவை.இப்பப் பாருங்கோ.இஞ்சையும் வரும்.அந்தப் பருப்புக்கடலையை பக்கத்துல வச்சிருப்பமென்ன?அவளுக்குக் கொடுக்க வேணும்?

நான் எழும்பிக் கனநேரமாயிட்டுது.இன்னும் மூஞ்சைக் கூடக் கழுவேல்ல.உதுகளப் பாருங்கோ.வெள்ளனையே எழும்பி எவ்வளவு வடிவா என்னைத் தேடி வந்திருக்கெண்டு.அவள் வந்தால் நான் அவள் கூடக் கதைப்பன்.நீங்களும் கதையுங்கோ.சரியே?

*****

"குழப்படியேதும் பண்றவவே?"

"இல்லையண்ணே.அவளும் அவளிண்ட பாடுமெண்டு ரூமுக்குள்ளேதான் கிடப்பாள்.தனக்குத்தானே சத்தமா கதைச்சிக்கொண்டு இருப்பாள்.உங்களுக்கும் சத்தம் கேட்குதில்லே? உவள்தான் கதைக்கிறவள்.ராமு வீட்டு நாயைக் கண்டா மட்டும் கத்திக் கூச்சல் போட்டுடுவாள்.நீங்கள் வந்திருக்கிறது தெரியாதெண்டு நினைக்கிறேன்.இருங்கோ கூப்பிடுறேன்.
ரோஷினி,பிள்ளை இங்க வாங்கோ.யாரு வந்திருக்கினமெண்டு வந்து பாருங்கோ."

*****

உவள் பெயரென்ன எண்டு கேட்க மாட்டியளே? முன்னம் நான் உவளை பாமா எண்டு கூப்பிட்டேன்.அவள் எனக்கு ஸ்கூல்ல நல்ல சினேகிதி.ஒருநாள் காணாமல் போயிட்டா.கடத்திட்டுப் போயிட்டினமாம்.அப்ப அவள் நினைவா பாமா எண்டு கூப்பிட்டேன்.இப்ப சரோ எண்டு கூப்பிடறனான்.

பாருங்கோ அந்த சாம்பல் குருவிதான்.நீங்களும் சரோவெண்டே கூப்பிடுங்கோ.இருங்கோ.அம்மா கூப்பிடுறா.யாரோ வந்திருக்கினமாம்.நான் ஓடிப்போய்ப் பார்த்துட்டு வாரன்.நீங்க சரோகிட்ட பேசிக்கொண்டிருங்கோ.அதுல இருக்கிற பருப்புக் கடலைய ஒவ்வொண்ணாப் போடுங்கோ.நான் கெதியா வாரேன்.சரியே?




-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

சொற்களின் விளக்கங்கள் :-

# கனக்க - அதிகமாக
# வெள்ளனை - காலைநேரம்
# பொண்டு - பெண்கள்
# கன நாள் - நீண்ட நாட்கள்
# ராவு - இரவு
# முத்தம் - முற்றம் / வீட்டின் வெளிப்புறம்
# கொள்ளை ஆசை - மிக விருப்பம்
# வடிவு - அழகு
# தேத்தண்ணி - தேனீர்
# குசினி - சமையலறை
# காக்கை - காகம்
# சாத்தாவாரி - ஒரு வகைக்கீரை

33 comments:

ஷைலஜா said...

கதை நல்லாருக்கு ரிஷான்.
உங்க தமிழ் அங்கங்கே கொஞ்சுகிறது.
சில வார்த்தைகளுக்கு அர்த்தம் சொல்லலேன்னா புரிஞ்சிருக்காது,,
கெதியா வரேன்னா என்ன அர்த்தம்?
நல்ல இயல்பான நடை....
ஷைலஜா

ஹேமா said...

வணக்கம் ரிஷான்.உங்கட கதைகளை வாசிக்கிறேன்.எங்கட யாழ்ப்பாணத் தமிழ் அழகா கொஞ்சி விளையாடுது.
மனிதாபிமானம் நிறைந்த கதைகளாக் கிடக்கு.எங்கட பிரச்சனையையும் தொட்டுக் காட்டிச் சொல்ற விதம் அருமை.வாழ்த்துக்கள்.தொடருங்கள்.
வாரன்.வருவன்.

குமரன் (Kumaran) said...

இந்தக் கதையெல்லாம் வருங்காலத்தவர்கள் இன்று நடப்பவற்றை அறிய ஒரு நல்ல பதிவாக அமையுமென்று நினைக்கிறேன் ரிஷான். மேற்கொண்டு என்ன சொல்லவென்று தெரியவில்லை.

M.Rishan Shareef said...

அன்பின் ஷைலஜா,

//
கதை நல்லாருக்கு ரிஷான்.
உங்க தமிழ் அங்கங்கே கொஞ்சுகிறது.
சில வார்த்தைகளுக்கு அர்த்தம் சொல்லலேன்னா புரிஞ்சிருக்காது,,
கெதியா வரேன்னா என்ன அர்த்தம்?
நல்ல இயல்பான நடை.... //

கெதியா வரேன்னா...அவசரமா வர்ரேன்னு அர்த்தம்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)

M.Rishan Shareef said...

வாங்கோ ஹேமா..

உங்களிண்ட முதல்வருகையெண்டு நினைக்கிறன்.உங்கள் வரவு நல்வரவாக அமையட்டும்.
தொடர்ந்து வாங்கோ ..

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி :)

M.Rishan Shareef said...

அன்பின் குமரன்,

எனது சிறுகதைத் தளத்திற்கான முதல்வருகை என நினைக்கிறேன்.
உங்கள் வரவு நல்வரவாக அமையட்டும்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

Sakthy said...

மிகவும் நன்று ரிஷான்..
போரின் வலிகளை தாங்கிக் கொண்டு எத்தனையோ பேர் இப்படி இருப்பார்கள்..
உங்கள் கதை நாயகியைப் போல...
நல்ல இயல்பான நடை....வாழ்த்துக்கள்

Kavinaya said...

வழக்கம் போல நல்லா எழுதியிருக்கீங்க ரிஷான். கதை சொன்ன விதம் அருமை. யாழ்ப்பாணத் தமிழ் (இனிமை) புரிஞ்சாலும் பழக்கமில்லாததால கொஞ்சம் மெதுவாதான் படிச்சேன் :)

Kavinaya said...

வழக்கம் போல நல்லா எழுதியிருக்கீங்க ரிஷான். கதை சொன்ன விதம் அருமை. யாழ்ப்பாணத் தமிழ் (இனிமை) புரிஞ்சாலும் பழக்கமில்லாததால கொஞ்சம் மெதுவாதான் படிச்சேன் :)

KARTHIK said...

உங்கள் தூய தமிழ் மிகவும் அருமை நண்பா
அந்தப்படமும் கதைக்கு தகுந்தார்ப்போளுள்ளது.

Tamilcooking Admin said...

அழுதிட்டேன் :(

பாரதிய நவீன இளவரசன் said...

எம்.ரிஷான் ஷெரீப் அவர்களே... நல்ல எழுத்து நடை.
பதிவின் துவக்கத்தில் காணும் அந்த படம் உங்களது நல்ல தேர்வையும், ரசனையையும் காட்டுகிறது. மொத்தத்தில் ஒரு நல்ல பதிவை வாசித்த திருப்தி. நன்றி.

கானா பிரபா said...

ரிஷான்

இன்றுதான் படித்து முடிக்க வாய்ப்புக் கிடைத்தது. உங்கள் வயதுக்கு மீறிய முதிர்ச்சியான எழுத்துக்கள். வித்தியாசமான நடை, நம் மண்ணின் அவலத்தினை இப்படியான விதவிதமான களங்களில் படையுங்கள்.

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

கவிதைகளைப்போலவே கதைகளும்...தமிழ்ச்சொற்களுக்கு விளக்கம் கொடுத்தது நலம். எங்கட தமிழ் வாசிக்கேக்க ஒரு அன்னியோன்னியம் தெரியுது. இப்பிடிக் கன கதையள் எழுதுங்கோ.

ஃபஹீமாஜஹான் said...

ரிஷான்
யாழ்ப்பாணத் தமிழ் நடையில் கதையை நன்றாகவும் வித்தியாசமாகவும் நகர்த்திச் சென்றுள்ளீர்கள்.

காலத்துயரத்தை இன்னுமொரு கோணத்தில் பதிவு செய்திருக்கிறீர்கள்.ஒவ்வொரு கதையையும் வித்தியாசமாக எழுதுகிறீர்கள்.வாழ்த்துக்கள் இன்னும் இன்னும் புதிது படைத்திடவும் வெற்றிபெற்றிடவும்

தமிழன்-கறுப்பி... said...

நீ கலக்கு நண்பா..!
உனக்கு கைகூடி வருகிறது :)

சொல்லப்போனால் எனக்கு வெக்கமா இருக்கு ரிஷான்...
ஊர்த் தமிழிலை என்னால இப்ப எழுதக்கூட முடியாமக்கிடக்கெண்டு நினைக்கேக்க..:(

வாழ்த்துக்கள் ரிஷான்...

தமிழன்-கறுப்பி... said...

வர வர எழுத்தின் தரம் கூடிக்கொண்டிருக்கு நிறைய எழுதுங்க...

வாழ்த்துக்கள்..!

M.Rishan Shareef said...

அன்பின் சக்தி,

//மிகவும் நன்று ரிஷான்..
போரின் வலிகளை தாங்கிக் கொண்டு எத்தனையோ பேர் இப்படி இருப்பார்கள்..
உங்கள் கதை நாயகியைப் போல...
நல்ல இயல்பான நடை....வாழ்த்துக்கள் //

ஆமாம் ஸ்னேகிதி.
ஒருவர், இருவரல்ல..பலபேர் தினமும் உயிர் வதைப்படுகிறார்கள்...!

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி ஸ்னேகிதி !

M.Rishan Shareef said...

அன்பின் கவிநயா,

//வழக்கம் போல நல்லா எழுதியிருக்கீங்க ரிஷான். கதை சொன்ன விதம் அருமை. யாழ்ப்பாணத் தமிழ் (இனிமை) புரிஞ்சாலும் பழக்கமில்லாததால கொஞ்சம் மெதுவாதான் படிச்சேன் //

நீங்கள் படித்ததிலேயே எனக்கு மகிழ்ச்சிதான்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)

M.Rishan Shareef said...

அன்பின் கார்த்திக்,

//உங்கள் தூய தமிழ் மிகவும் அருமை நண்பா
அந்தப்படமும் கதைக்கு தகுந்தார்ப்போளுள்ளது.//

உங்கள் முதல்வருகை எனக்கு மகிழ்வினைத் தருகிறது.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா !

M.Rishan Shareef said...

அன்பின் வரவனையான்,

//அழுதிட்டேன் :( //

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

அன்பின் பாரதீய நவீன இளவசரன்,

உங்கள் முதல்வருகை எனக்கு மகிழ்வினைத் தருகிறது. உங்கள் வரவு நல்வரவாக அமையட்டும்.

//எம்.ரிஷான் ஷெரீப் அவர்களே... நல்ல எழுத்து நடை.
பதிவின் துவக்கத்தில் காணும் அந்த படம் உங்களது நல்ல தேர்வையும், ரசனையையும் காட்டுகிறது. மொத்தத்தில் ஒரு நல்ல பதிவை வாசித்த திருப்தி. நன்றி.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

அன்பின் கானாபிரபா,

//ரிஷான்

இன்றுதான் படித்து முடிக்க வாய்ப்புக் கிடைத்தது. உங்கள் வயதுக்கு மீறிய முதிர்ச்சியான எழுத்துக்கள். வித்தியாசமான நடை, நம் மண்ணின் அவலத்தினை இப்படியான விதவிதமான களங்களில் படையுங்கள்.//

உங்கள் அனைத்து வேலைகளுக்கும் மத்தியில் வந்து வாசித்துக் கருத்தினையளித்திருப்பது எனக்கு மகிழ்வினைத் தருகிறது.தொடர்ந்து எழுதுவேன். :)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் மதுவதனன்,

//கவிதைகளைப்போலவே கதைகளும்...தமிழ்ச்சொற்களுக்கு விளக்கம் கொடுத்தது நலம். எங்கட தமிழ் வாசிக்கேக்க ஒரு அன்னியோன்னியம் தெரியுது. இப்பிடிக் கன கதையள் எழுதுங்கோ.//

உங்கள் வருகை எனக்கு மகிழ்வினைத் தருகிறது..நிச்சயமாக எழுதுகிறேன்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

அன்பின் பஹீமா ஜஹான்,

//ரிஷான்
யாழ்ப்பாணத் தமிழ் நடையில் கதையை நன்றாகவும் வித்தியாசமாகவும் நகர்த்திச் சென்றுள்ளீர்கள்.

காலத்துயரத்தை இன்னுமொரு கோணத்தில் பதிவு செய்திருக்கிறீர்கள்.ஒவ்வொரு கதையையும் வித்தியாசமாக எழுதுகிறீர்கள்.வாழ்த்துக்கள் இன்னும் இன்னும் புதிது படைத்திடவும் வெற்றிபெற்றிடவும் //

எனது ஒவ்வொரு படைப்புக்களின் போது ஊக்கம் தரும் கருத்துக்களைத் தந்து என்னைச் செம்மைப்படுத்துகிறீர்கள். அனைத்துப் பாராட்டுக்களும் உங்களையே சாரும்.
உங்கள் வாழ்த்துக்கள் தொடரும்வரை இன்னும் புதிது புதிதாக எழுதிக் கொண்டிருப்பேன்.

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி !

M.Rishan Shareef said...

அன்பின் தமிழன்,

//வர வர எழுத்தின் தரம் கூடிக்கொண்டிருக்கு நிறைய எழுதுங்க...

வாழ்த்துக்கள்..! //

உங்கள் வருகை எனக்கு மகிழ்வினைத் தருகிறது.

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !

Anonymous said...

சகோதரா,
வரவனையான் என்ற பெயரில் எழுதியது நானே. தவறுதலாக சமையல் கூட்டு பதிவு பெயரில் எழுதிவிட்டேன்
தூயா

Divya said...

ஹாய் ரிஷான்,

உங்கள் அபாரமான எழுத்து நடையில்.......கதையும் கதையின் நடையும் கொள்ளை அழகு!!
மிக சிறப்பான எழுத்து நடை உங்கள் இலங்கை தமிழில் மேலும் மெருகேறுகிறது!!

புது வார்த்தைகளுக்கு அர்த்தம் கொடுத்திருப்பது பாராட்டத்தக்கது........எளிதில் புரிந்துக்கொள்ள உதவியது!!

\உவள் ரோஷினி எங்கே காணேல்ல?\

:)))

Ramya Ramani said...

இலங்கை தமிழ் இவ்வளவு அழகா Present பண்ணிருக்கீங்க ரிஷான் .சில வார்த்தைகள் விளக்கம் போட்டது வசதியாவும் இருந்தது.வாழ்துக்கள் :))

M.Rishan Shareef said...

அன்பின் திவ்யா,

//ஹாய் ரிஷான்,

உங்கள் அபாரமான எழுத்து நடையில்.......கதையும் கதையின் நடையும் கொள்ளை அழகு!!
மிக சிறப்பான எழுத்து நடை உங்கள் இலங்கை தமிழில் மேலும் மெருகேறுகிறது!!

புது வார்த்தைகளுக்கு அர்த்தம் கொடுத்திருப்பது பாராட்டத்தக்கது........எளிதில் புரிந்துக்கொள்ள உதவியது!! //

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி :)

M.Rishan Shareef said...

வாங்க ரம்யாரமணி,

முதல் தடவை வந்திருக்கிறீர்கள். உங்கள் வரவு எனக்கு மகிழ்வைத் தருகிறது.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)

ராஜ நடராஜன் said...

கொஞ்ச நாளா கதையின்னாலே எனக்கு குளிர்க்காய்ச்சல்.எப்படியோ வந்ததுக்கு சில தமிழ் வார்த்தைகளின் அர்த்தம் கற்றுக்கொள்ள முடிந்தது.

M.Rishan Shareef said...

வாங்க ராஜ நடராஜன் :)

உங்களுக்குக் கற்றுக்கொள்ள உதவியதில் எனக்கு மகிழ்ச்சி ..!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)