Saturday, October 4, 2008

அப்பாச்சி

தொலைபேசியை வைத்தவளுக்குப் பதற்றமாகிவிட்டது. அடுத்தகிழமை அவளை நிச்சயிக்க திலகன் வீட்டிலிருந்து வர இருக்கிறார்கள். இப்போதைய பதற்றத்துக்குக் காரணம் அதுவல்ல. வீட்டுவாசலில் போய் நின்றாள். நண்பகலுக்கு முன்னதான வெளிச்சத்தோடு வெப்பத்தையும் சுமந்திருந்த வெயில் அகன்ற முற்றத்தில் அகலப் படுத்திருந்தது. வீதியில் மீன்காரன் போவது தெரிந்தது. வெயிலை எதிர்க்கத் தலையிலொரு தொப்பி.சைக்கிளின் பின்பகுதியில் தராசால் மூடியபடி மீன் பெட்டி. மீன்காரனைக் கண்டால் நிறுத்தும்படி அம்மா சொல்லியிருந்தாள்.

அவளது வீட்டுக்கும் வீதியோரத்தோடு ஒட்டியிருந்த கேட்டுக்கும் இடையில் பாய் போட்டு ஒரு ஊருக்குச் சாப்பாடு போடலாம்.அவ்வளவு பெரிது. இவள் கூப்பிடுவாளென எதிர்பார்த்தோ என்னவோ, அவன் வேக வேகமாகத் தன் சைக்கிளை மிதித்து அடுத்த தெருவுக்குப் போய்விட்டிருந்தான். யாருக்கும் இவளோடு பேரம் பேசி முடிக்கமுடியாது. அதுவும் மீன்காரனோடு பேரம் பேசப்போனால் மீனைத் துப்புரவாக்கும் போது ஒதுக்கப்படும் பகுதிகளுக்காகக் காத்திருக்கும் பூனை கூட 'மீனும் வேண்டாம், அதன் வாலும் வேண்டாம்' என ஓடிப்போகும்.

'தப்பிவிட்டான்' என மனதிற்குள் கறுவிக்கொண்டவள் சமையலறைக்குள் போனாள். அம்மா அரிசி கழுவிக் கொண்டிருந்தாள்.

" அந்தப் பழைய தட்டைக் கொண்டு போ "

" எதுக்கு? எங்க? "

" உன்ர மாமியார் வீட்டுக்கே கொண்டு போகச் சொன்னனான் ? மீன் துண்டுகளைப் போடத்தான். இல்லையெண்டால் புதுத்தட்டெல்லாம் மீன் வாசமடிக்கும் "

" அவன் நிக்காமப் போயிட்டான். நீங்கள் மீன் துண்டு கேக்குறீங்கள். இண்டைக்கு வேற ஏதாவது செய்யுங்கோ."

" வேற ஏதாவது செய்யுறதோ..? உன்ர அப்பாக்கிட்ட மீன் சமைச்சு வைக்குறன். பகலைக்கு வாங்கோ எண்டு சொல்லியிருக்கிறன். அந்த மனுஷன் விழுந்தடிச்சுக் கொண்டு ஓடி வரும்.புளியைக் கூடக் கரைச்சு வச்சிட்டன். மீனெண்டால் அவருக்கு உசிரெண்டு உனக்குத் தெரியும் தானே ?"

"அப்ப பேசாம கடலுக்குள்ள போய் இருக்கச் சொல்லுங்கோ. மீன்காரன் நிக்காமப் போயிட்டான்.நானே இங்க உடம்பு பதறிக் கொண்டு நிக்குறன் "

சொல்லிவிட்டு ஃபிரிட்ஜிலிருந்து ஒரு போத்தல் குளிர்ந்த நீரை எடுத்துக் கொண்டு சாப்பாட்டு மேசை மேல் உட்கார்ந்துகொண்டாள்.

" ஏண்டியம்மா? அவன் நிக்காமப் போயிட்டான் எண்டால் நீ எதுக்குப் பதற வேணும் ? "

" பதறுறதே ? எதுக்குப் பதறுறேன் எண்டு தெரிஞ்சுக் கொண்டால் நீங்களும் ஆடிப் போவியள் "

அம்மா அரிசியை அப்படியே வைத்துவிட்டு சங்கீதாவின் அருகில் வந்தாள். சங்கீதாவின் அம்மா ஒரு வாயில்லா ஜீவன். அப்பாவி. அடுத்தவீட்டுக் குழந்தைக்கு அம்மை ஊசி போட்டார்கள் என்றால் கூடக் கேட்டுக் கண்கலங்குகிற மனசு.

" என்னடி ?அடுத்த கிழமை நிச்சயத்தை வச்சுக் கொண்டு என்னைப் பதற விடுறாய் ? அப்பாவுக்கு விஷயந்தெரிஞ்சால் என்னாகும்?"

" அப்பாவுக்கு எப்படியும் தெரியத்தானே வேணும்...இண்டைக்குப் பகல் சாப்பாட்டுக்கு வர்றப்ப நானே அவரிட்டச் சொல்லப் போறன்..கேட்டு ஆடிப்போகப் போறார் பாருங்கோ. "

அம்மாவின் கண்கள் அதற்குள் கலங்கத் தொடங்கிவிட்டது. இடுப்பில் சொருகியிருந்த புடைவை முந்தானையெடுத்து மூக்கை உறிஞ்சிக் கொண்டாள்.

"அம்மா, நீங்கள் எதுக்கு இப்ப அழுறீங்கள் ? "

" நீதான் ..அடுத்த கிழமை நிச்சயத்தை வச்சுக் கொண்டு இப்ப உனக்கும் மீன்காரனுக்கும் ஏதோ..."

"அடச்சீ..அம்மா..வாயை மூடுங்கோ முதல்ல..நான் சொல்லவந்தது அதில்ல... சித்தப்பா கோல் பண்ணியிருந்தவர் "

அம்மாவிற்கு தனது கணிப்பு தப்பாகிப் போனதில் வெட்கமாகப் போய்விட்டது சங்கீதாவின் தோளில் செல்லமாகத் தட்டி "என்ன சொன்னவர்? " எனக் கேட்டாள்.

" அப்பாச்சி என்னோட நிச்சயத்துக்கு இங்க இருக்கவேணுமெண்டு விரும்புறாவாம். சித்தப்பாவுக்குக் கால்ல ஏதோ வருத்தமாம்.நடக்க ஏலாதாம். முடிஞ்சால் அப்பாவுக்கு இன்னும் ரெண்டு நாள்ல வந்து அப்பாச்சியக் கூட்டிக் கொண்டு போகச் சொன்னார் "

சங்கீதாவைப் பீடித்திருந்த பதற்றம் இப்பொழுது அம்மாவையும் பிடித்துக் கொண்டது. சட்டென்று அருகிலிருந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டாள். அப்பாச்சி என அழைக்கப்படுபவர் சங்கீதாவுடைய அப்பாவின் அம்மா. அவளது அதிரடி மாமியார். 'சூட்டுக் கிழவி' என அவள் மனதிற்குள் மட்டும் அடிக்கடி திட்டிக் கொள்வாள். அந்தளவுக்கு அவரது சொல்லும் செயலும் பெரும் புயலைக் கிளப்பும். அப்பாச்சி ஐந்து வருடத்திற்கு முன்னால் வந்து ஒரு கிழமை இருந்துவிட்டுப்போன போது நடந்த கூத்துக்கள் சொல்லிமாளாது.

போனமுறை சித்தப்பாவே அவரைக் கூட்டிவந்தார். இரயில் நிலையத்திலிருந்து ஒரு ஆட்டோ பிடித்து நேராக வீட்டு கேட்டருகில் வந்து இறங்கினர். சங்கீதாவுக்கு அப்பொழுது பத்தொன்பது வயது. அழகுக்கலை பற்றிப் படித்துக் கொண்டிருந்தாள். படித்ததைச் செய்துபார்க்கத் தங்கையோடு சேர்ந்து தன் நீளத் தலைமுடியை நேர்படுத்தி, அயர்ன் பண்ணிக் கொஞ்சம் செம்பட்டை நிறத்தில் சாயமும் அடித்திருந்தாள். அன்றைக்கு அவளுக்குச் சனி உச்சத்தில் இருந்திருக்கவேண்டும். வீட்டு கேட்டருகில் வந்துநின்ற ஆட்டோவை அவள்தான் முதலில் கவனித்தாள்.

வாசலிலிருந்து ஒரே ஓட்டமாக ஓடி வந்து கேட்டைத் திறந்துவிட்டாள். எண்பது வயதில் சாதாரண தோற்றத்திலிருந்த ஆச்சி முகத்தில் எள்ளும்கொள்ளும் வெடித்தது. அந்த வயதான ரௌத்ரத்தைக் கவனிக்காத இவள் " வாங்கோ ஆச்சி, வாங்கோ சித்தப்பா" என்று ஆச்சி கையைப் பிடித்துக் கொண்டாள்.

"ஆச்சி வாறது இருக்கட்டும்..குமருப்பிள்ள தானே நீ..? இப்படி ஓடி வாறாய்? இப்படியே உன்னை உன்ர அம்மா வளர்த்திருக்குது ? என்ர காலத்துலயும் இருந்தோமே. முத்தத்துல ஒரு ஈ,காக்கை அசைஞ்சாக் கூட வெட்டைக்கு இறங்கேலாது. அவ்வளவு ஒழுக்கமா வளர்ந்தோம். உன்னையும் வளர்த்திருக்குது பார் உன்ர அம்மா "

சங்கீதாவுக்குத் திகைப்பாகிப் போய்விட்டது. சித்தப்பாவைப் பார்த்தாள். 'இது எதையும் கண்டுகொள்ளாதே' என்பது போலக் கண்களால் சாடை செய்தார். பின்னர் அவள் கையில் ஆச்சியின் பயணப்பையைக் கொடுத்துவிட்டு முன் கடையில் வாழைப்பழம் வாங்கிவருவதாகச் சொல்லி ஆச்சிக்குக் களவாக சிகரெட் குடிக்கப் போனார். வாய் சவ சவ எனச் சிகரெட் கேட்டுக் கொண்டிருந்தது அவருக்கு. ஆச்சி முன்னால் அதெல்லாம்... ம்ஹூம்..மூச்.

" என்ன நீ ? சாமத்துல ஊர் சுத்துற மோகினிப் பேயாட்டம் தலையை இப்படி விரிச்சுப் போட்டுக் கொண்டு இருக்கிறாய் ? ஒரு நூல்துண்டாவது கிடைக்கேல்லியே நல்லாச் சடை பின்னிக் கட்டுறதுக்கு ? "

" ஆச்சி முதல்ல உள்ளே வாங்கோவன், கதைப்பம் "

" ஓம் கதைப்பம் கதைப்பம்." என்ற ஆச்சி அவள் தலைமுடியைப் பிடித்து உற்றுப் பார்த்து,

"அடக் கடவுளே..இங்கே பாரடி..உன்ர தலைமயிரெல்லாம் வெள்ளக் காரச்சியாட்டம் செம்பட்டைக் கலராகிப் போய்க்கிடக்கு . எங்கேடி உன்ரை அம்மா? நல்லா எண்ணைய் வச்சு, வழிச்சுக் கோதிக் கட்டிவிடாம உன்னை இப்படித் திரியவிட்டிருக்கிறாள். அப்படியென்ன செய்து கிழிக்கிறாள் வீட்ட ? நீ இப்படித் திரிஞ்சியெண்டால் உன்னை ஆரு கட்டுவினம் ?" என்றவாறு வாசல்வரை வந்த அப்பாச்சி, முற்றத்தைத் திரும்பவும் பார்த்து வீட்டின் திண்ணையிலிறங்கி வலது கோடிக்குப் போனார். பின்னாலேயே சங்கீதாவும் அவரைத் தொடர்ந்தாள்.

" எங்கேயடி இங்க இருந்த பெரிய மாங்காய் மரம் ? " ஆச்சியின் கண்களில் சினம் தெறித்தது.

" காய் நிறைஞ்சு கூரை மேல விழுந்து ஓடெல்லாம் உடையுதெண்டு அப்பாதான் வெட்டினவர் " என்று குரல் நடுங்கச் சொன்னாள்.

" உன்ர அப்பாவின்ர கல்யாணத்தப்ப என்ர கையால நாட்டிக் கொடுத்த மரம். அதப் போய் வெட்டியிருக்கானே. உன்ர அம்மாதான் வெட்டச் சொல்லியிருப்பாள். எனக்குத் தெரியாதெண்டு நெனச்சியே ? "

ஆச்சிக்குக் கோபத்தில் உடல் நடுங்கியது. சங்கீதா அவர் தோளைப் பிடித்து அணைத்து மெதுவாகச் சொன்னாள்.

" ஆச்சி, இப்ப நீங்கள் களைச்சுப்போய் வந்திருக்கிறியள். முதல்ல உள்ள வாங்கோ. ஒரு தேத்தண்ணியக் குடிச்சுப் போட்டு தோட்டத்துக்குப் போகலாம். ஏழெட்டு மணித்தியாலப்பயணமெண்டால் லேசே ? "

இப்பொழுது ஆச்சி கொஞ்சம் சமாதானமானார். அவளது கையை விட்டுவிட்டு விடுவிடுவென்று வீட்டுத் தலைவாசல் வரை வந்தார். ஆனால் உள்ளே போகவில்லை. வைராக்கியம். மருமகள் வந்து தன் வாயால் கூப்பிடும் வரை உள்ளே செல்வதில்லையென்ற வைராக்கியம். சங்கீதாவுக்குப் புரிந்தது.

"அம்மா..அம்மோவ்"

" ஏணடியம்மா இப்படித் தலவாசல்ல நின்றுகொண்டு கூப்பாடு போடுறாய்? நான் உன்ர சாமத்தியச் சடங்குக்கு வந்தப்ப மூங்கில் கேட்டல்லோ இருந்தது. இப்ப என்ன இரும்புக்கு மாறியிருக்குது ? "

" ஓம் ஆச்சி..அது பழசாகிப் போச்சுதெண்டு அப்பாதான் இதைச் செஞ்சு போட்டவர். "

" என்னது பழசாகிப் போச்சுதே ? அதை ஆறுமாசத்துக்கொருதரம் புதுப்பிச்சுக் கட்ட வேணும். அதைக் கூடச் செய்ய ஏலாமல் உன்ர அப்பா சோம்பேறியாகிப் போய்ட்டாரே? உன்ர அம்மாவுக்குச் சொல்றதுக்கென்ன ?. இது ஆஸ்பத்திரி கேட் மாதிரியல்லோ கிடக்கு ? "

" வாங்கோ மாமி..வாசல்லையே நிண்டு கொண்டிருக்கிறியள் ? பின்கட்டுல உடுப்புக் காயப்போட்டுக் கொண்டிருந்தனான். அதுதான் நீங்கள் வந்த சத்தமே கேக்கல்ல..உள்ளுக்கு வாங்கோ " என்றவாறு உள்ளிருந்து அம்மா வந்தாள்.

" வாறன் வாறன்.என்ன இந்த அந்தி பட்ட நேரத்துல உடுப்புக் கழுவுற பழக்கம்? காலையிலேயே கழுவிப் போட ஏலாதே ?..என்ன எல்லாமே மாறிக்கிடக்கு ? நீ இதையெல்லாம் கவனிக்கிறதில்லையோ? இவளிண்ட கொண்டையைப் பார். சேவல் கருமலாட்டம் ஒவ்வொரு முடியும் ஒவ்வொரு நிறத்துல கிடக்கு. அடி ..முந்தானையை ஒழுங்காப் போடடி" எனச் சங்கீதாவின் தோளில் நொடித்தார். அவள் சிணுங்கியவாறு அம்மாவை முறைத்தாள்.

" நானெல்லாம் இவளிண்ட வயசுல கையில ரெண்டு, இடுப்பில ரெண்டெண்டு நாலு புள்ளயச் சொமந்தவள். இவளுக்கு இன்னும் மாப்பிளை பார்க்கலையோ ?"

" பார்த்துக் கொண்டிருக்கிறம் மாமி.. முதல்ல இந்த ரூமுல போய் உடுப்பை மாற்றிக் கொள்ளுங்கோவன். உவர் சித்தப்பா வந்தவரல்லோ ? எங்கே காணோம் ? "

அம்மா சித்தப்பாவைத் தேடி முற்றத்துக்குப் போனார். சங்கீதா ஆச்சியின் பின்னால் அவர் பயணப்பையை எடுத்துக் கொண்டு அவள் அறைக்குப் போனாள். ஆச்சி அறைக்குள் நுழைந்த அடுத்தகணம் அலறியடித்து, சங்கீதாவையும் தள்ளிக்கொண்டு வீட்டு வாசலுக்கு ஓடி வந்து மூச்சிரைத்தார்.

" என்னாச்சுது மாமி என்னாச்சுது? " எனக் கத்திக் கொண்டு முற்றத்திலிருந்த அம்மா உள்ளே ஓடிவந்தார். சித்தப்பா பின்னால் ஓடி வந்து ஆச்சியைத் தாங்கிக் கூடத்திலிருந்த கதிரையில் உட்காரவைத்தார்.

" மகள்..ஒரு கிளாஸ் தண்ணி கொண்டுவாங்கோ " என்றார்.

சங்கீதா ஓடிப்போய்த் தண்ணீர் எடுத்துவந்து கொடுத்தாள். ஆச்சி அதை வாங்கி ஒரே மூச்சில் அவ்வளவையும் குடித்தார். பொக்கை வாயில் வழிந்த தண்ணீர் அவர் நெஞ்சையும் நனைத்தது.

" என்ன அம்மா என்ன ஆச்சுது? "

" உவள் காமாட்சி இருந்தாளே...எங்கட ஊர்க் கோயில் புளியமரத்துல தூக்குப் போட்டுச் செத்தவள்."

ஆச்சி இளைத்து இளைத்துச் சொல்லத்தொடங்கினார். சித்தப்பாவும், அம்மாவும், சங்கீதாவும் எதுவும் புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

" ஓம் அம்மா. அவளுக்கென்ன இப்ப. அவள் செத்து இப்ப கன நாளாச்சுல்லே..? ஆறுமாசத்துக்கும் மேல ஆகியிருக்கும் "

" உவள் சாகுறதுக்கு கொஞ்சநாள் முன்னாடி எங்கட தோட்டத்துல தென்னமோலை பொறுக்க வந்தாள். அப்ப நான் நல்லா ஏசி அனுப்பிட்டன். இப்ப ... இப்ப.. "

" இப்ப என்ன மாமி ? "

" உவள் பேயாகி நான் போற இடமெல்லாம் வந்து பழி வாங்கக் காத்துக்கொண்டிருக்கிறாள்."

இப்பொழுது சங்கீதாவின் அம்மா நன்றாகப் பயந்துபோனாள். சங்கீதாவின் தோள்களைப் பற்றிக் கொண்டாள்.

" என்ன மாமி சொல்றியள்? "

சித்தப்பா எதுவும் பேசாமல் ஆச்சி போய்ப்பார்த்துப் பயந்து ஓடி வந்த அறைக்குள் போனார். இருட்டுக்குள் இருந்த ஏதோ ஒன்றைப் பார்த்துப் பயந்தவராக அவரும் விரைந்து திரும்பி வந்தார்.

"மகள்..எனக்கும் ஒரு கிளாஸ் தண்ணி கொண்டு வாங்கோ " என்றார்.

( தொடரும் )

-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.


9 comments:

ராமலக்ஷ்மி said...

சஸ்பென்ஸுடன் நிறுத்தியிருக்கிறீர்கள் ரிஷான். வயதுக்கே உரிய தோரணையும் தேவையில்லாத சிடுசிடுப்புமாக அப்பாச்சியின் கதாபாத்திரம் அருமை.

தொடருக்கு வாழ்த்துக்கள்!

Kavinaya said...

அடேயப்பா. கதாபாத்திரங்களும் உரையாடல்களும் வெகு இயல்பு, ரிஷு. அதென்ன தொடரும் போட்டுட்டு, 'சிறுகதை'ன்னு label போட்டிருக்கீங்க? சீக்கிரம் அடுத்த பகுதி போடுங்க!

M.Rishan Shareef said...

அன்பின் ராமலக்ஷ்மி,

//வயதுக்கே உரிய தோரணையும் தேவையில்லாத சிடுசிடுப்புமாக அப்பாச்சியின் கதாபாத்திரம் அருமை.//

வாழ்க்கையின் அத்தனையையும் ஆண்டனுபவித்துவிட்டு மீண்டும் குழந்தைகளாகும் முதியவர்கள் எப்பொழுதுமே ஆச்சரியம் வாய்ந்தவர்கள்தானே?

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)

M.Rishan Shareef said...

அன்பின் கவிநயா,

//அடேயப்பா. கதாபாத்திரங்களும் உரையாடல்களும் வெகு இயல்பு, ரிஷு. அதென்ன தொடரும் போட்டுட்டு, 'சிறுகதை'ன்னு label போட்டிருக்கீங்க? சீக்கிரம் அடுத்த பகுதி போடுங்க!//

இது சிறுகதை தான்.
கொஞ்சம் நீ......ண்டு விட்டது சகோதரி. அதனால்தான் இருபகுதிகளாக்கி விட்டேன். அடுத்த பகுதி சீக்கிரம் வரும்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)

thamizhparavai said...

நண்பர் ரிஷானுக்கு...
உங்களிடமிருந்து சற்று நையாண்டியான கதையா..? நம்பமுடியவில்லை..
நன்றாக இருக்கிறது எழுத்து நடை... மன்னிக்கவும்... நடையல்ல கதையோட்டம்.. அவ்வளவு வேகம்.

//அடுத்தவீட்டுக் குழந்தைக்கு அம்மை ஊசி போட்டார்கள் என்றால் கூடக் கேட்டுக் கண்கலங்குகிற மனசு.//
இது போன்ற வெள்ளந்தி மனசுக்காரர்கள் அரிதாகிக் கொண்டே வருகிற காலமிது.
அடுத்த பாகம் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்...

மெளலி (மதுரையம்பதி) said...

மிக இயல்பான டயலாக்களும், சரியான திருப்பத்திலும் நிறுத்தியிருக்கீங்க ரிஷான். சூப்பர் :)

M.Rishan Shareef said...

அன்பின் தமிழ்ப்பறவை,

அன்பான பாராட்டுக்களுக்கு நன்றி நண்பரே :)

//அடுத்த பாகம் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்...//

இன்னும் 3 நாட்களில் போடுகிறேன்.
உங்கள் வருகையை நானும் எதிர்பார்க்கிறேன். :)

M.Rishan Shareef said...

அன்பின் சந்திரமௌலி,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

அன்பின் நண்பர்களுக்கு,

அப்பாச்சியின் இறுதிப்பாகம் பதிவிடப்பட்டுள்ளது.
அதனை http://mrishansharif.blogspot.com/2008/10/2.html
இங்கு காணலாம்.

நன்றி !

என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்