Friday, August 15, 2008

வனாந்தரத்தைத் தொலைத்தவள் !

விடிகாலை ஆகியிருந்தது. இன்னும் முற்றிலுமாக இருள் விலகியிருக்கவில்லை. செல்வராணிக்கு அதற்கு மேல் உறங்கப் பிடிக்கவில்லை. உறங்க நினைத்தாலும் 'உறக்கம் வருவேனா ? ' என்றிருந்தது. நேற்றிலிருந்து கனவுகளிற்குள் மூழ்கத் தொடங்கியிருந்தவளின் மனதிற்குள் காதல் பாடல்களாய் ஒலித்துக் கொண்டிருந்தன.

சட்டென்று எழுந்து போர்வையை மடித்துவைத்துவிட்டு தாவணியைச் சரி செய்துகொண்டாள்.விளக்கேற்றினால் பக்கத்தில் படுத்திருக்கும் தங்கைகளின் தூக்கம் கலையுமென்று சிறுவயதிலிருந்தே பழகிய இடமாதலால் இருட்டுக்குள்ளும் எதிலும் முட்டிமோதாமல் குசினிக்கு நடந்தவள் அங்கிருந்த சிறு சிம்னி விளக்கைப் பற்ற வைத்து குசினிக்கு ஒளியூட்டினாள்.அடுப்பிலிருந்த குளிர்ந்த சாம்பலையள்ளி உள்ளங்கையில் ஏந்திப் போய் பல் துலக்கி, முகம் கழுவி வந்தாள்.கடற்காற்று சிம்னி விளக்கை அணைத்து விடுவதிலேயே தன் பலம் முழுவதையும் செலவழித்துக் கொண்டிருந்ததைப் போலிருந்தது.

நேற்றுக் காலை தம்பி பிளந்து போட்டிருந்த விறகுத் துண்டுகளைப் போட்டு சிறிது மண்ணெண்ணெய் ஊற்றி அடுப்பினை எரிய வைத்துத் தண்ணீரைக் கொதிக்க வைக்கமுயன்றாள். ஈரலித்திருந்த விறகுத் துண்டுகளிலிருந்து பெரும் புகை கசிந்து குசினியைச் சூழ்ந்துகொள்ள ஆரம்பித்தது.வேறொரு நாளென்றால் பெரும் எரிச்சலைச் சுமந்தவளாக முணுமுணுத்தபடி இருந்திருப்பாள். ஆனால் இன்று அப்படியில்லை. அவள் மனம் முழுவதிலும் ஸ்ரீதர் வண்ணம் வண்ணமாகக் கனவுகளைப் பூசி , வரப் போகும் வசந்தத்தை எதிர்பார்த்தவாறான மெல்லிசையொன்றை இசைத்துக் கொண்டிருந்தான்.

இருள் இன்னும் ஆக்கிரமித்துக் கொண்டே இருந்தது. அதன் நீண்ட பெரும் கரங்கள் அவள் வீட்டை , அருகிலிருந்த கடலை, அவளது ஊரை முழு இரவும் ஆட்சி செய்து இன்னும் தன் பிடியில் கொண்டிருந்தது.அவளது இரண்டு தங்கைகளும் தம்பியும் இன்னும் உறக்கத்திலிருந்தார்கள். ஞாயிறு விடுமுறை நாளென்பதால் அவர்களை எழுப்பாமல் தூங்கவிட்டிருந்தாள். முன்னறையிலிருந்து அப்பா இருமும் சத்தம் கேட்டது. அவருக்கும் இவளைப் போல இரவு முழுதும் உறக்கம் இருந்திருக்காது.

செல்வராணி தன் விரலில் பளபளத்த புது மோதிரத்தைப் பார்த்துக் கொண்டாள். குறைந்தது அரைப் பவுணாவது இருக்கும். அழகிய வடிவத்திலான தங்க மோதிரத்தின் மத்தியில் சிறிய சிவப்புக்கல் பதிக்கப்பட்டிருந்தது.அது எவ்வளவு பெறுமதியானதாக இருப்பினும் அவளுக்கென்ன ? ஒரு ஆண்மகன் முதன்முதலாக ஆசையாக அவள் விரல்களில் அணிவித்தது. இப்படிப்பட்ட ஒரு நாளுக்காகத்தானே அவள் இவ்வளவு நாளும் காத்திருந்தாள். இந்த உலகையே விலையாக்கி அவளிடம் கொடுத்து மோதிரத்தைத் திருப்பிக் கேட்டால் கூட கொடுக்கவே மாட்டாள் என்பதைப் போல மிக ஆசையாக ஒரு புன்னகையோடு அதனையே பார்த்தவாறிருந்தாள்.

தண்ணீர் கொதிக்கும் சத்தம் கேட்டு சுயநினைவுக்கு வந்தவள் சிவப்புத் தேனீர் ஊற்றியெடுத்து கருப்பட்டித் துண்டோடு அப்பாவிடம் கொண்டுபோய்க் கொடுத்தாள்.ஏதோ யோசனையோடு கயிற்றுக் கட்டிலில் அமர்ந்திருந்த அப்பா இவளை ஏறிட்டுப் பார்த்து எதுவும் சொல்லாமல் வாங்கிக் கொண்டார். திரும்பவும் குசினிக்கு வந்தவள் நேற்றுச் செய்து எஞ்சியிருந்த இனிப்புப் பலகாரங்களை ஒரு தட்டில் வைத்து அப்பாவிடம் கொண்டுபோய்க் கொடுத்தாள்.

அவளுக்குச் சட்டென்று தன் அம்மா நினைவு வந்தது. அவளது சிறுவயதில் ஏதாவது விஷேசங்களின் போது அம்மா இதுபோலச் செய்து அன்பாகத் தருவாள். கடைசித் தங்கையைப் பிரசவித்த அதே நாளில்தான் அம்மாவும் இறந்து போனாள். பிரசவத்திற்காக வீட்டிலிருந்து போகும் போது இவளை அருகில் அழைத்துத் தலையைத் தடவி ' வீட்டைப் பத்திரமாப் பார்த்துக்கோ ராணி ' என்று சொல்லிப் போனது இவள் காதுகளில் இன்றும் எதிரொலிக்கிறது. அம்மா அவளிடம் கடைசியாகச் சொல்லிச் சென்றபடியே இன்றுவரையில் அவள் வீட்டைப் பத்திரமாகப் பார்த்துக் கொண்டுதானிருக்கிறாள். அருகிலிருந்து பார்க்கத்தான் அம்மா இல்லை.

நேற்று இந்த நேரங்களில் மனதில் எந்த ஆரவாரங்களுமற்று மிகவும் சாதாரணமாகவே எந்நாளையும் போல வளைய வந்தாள். எல்லாம் ஒரு மாதத்திற்கு முன்னர் அவளைப் பெண் பார்த்துவிட்டுப் போன ஸ்ரீதர் வீட்டிலிருந்து 'பெண்ணைப் பிடித்திருக்கிறது.இன்று மாலையே நிச்சயிக்க வருகிறோம் ' என்ற தகவல் கிடைக்கும் வரை தான். மீன் வியாபாரத்திற்காகப் போயிருந்த அப்பாதான் உடனே வீட்டுக்கு வந்து அவளிடம் விடயத்தைச் சொன்னார்.

அவளுக்கு தான் வானத்தில் மிதப்பது போல இருந்தது. எந்தப் பிடிமானமும் அற்ற ஒரு கொடியாகத் தன்னை எண்ணியிருந்தவளுக்கு ஒரு பெருவிருட்சமே படரக் கிடைத்தது போல ஆறுதலாக உணர்ந்தாள். இத்தனைக்கும் அவளைப் பெண் பார்க்க வந்த அன்று ஸ்ரீதரை அவள் ஒழுங்காகப் பார்க்கக் கூட இல்லை.ஏற்கெனவே இருபதிற்கும் மேற்பட்ட வரன்கள் வந்து பார்த்துப் போய்த் தட்டிக் கழித்து இருபத்தெட்டு வயதாகி நிற்கும் தன்னைக் கூட ஒருவர் பார்த்து ஏற்றுக்கொண்டு நிச்சயிக்க வருகிறார் என்பதே செல்வத்தைப் பெயரில் மட்டுமே கொண்டவளுக்கு பேருவகை கொள்ளவும் , அவர் மேல் விருப்பம் கொள்ளவும் போதுமானதாக இருந்தது.கொடுக்கப்பட வேண்டிய சீதன விபரப் பட்டியலும் அப்பாவால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது.

அவர்கள் வருகிற விடயத்தைக் கேள்விப்பட்ட உடனேயே தங்கைகளுடன் சேர்ந்து வீட்டைச் சுத்தப்படுத்தி இயன்றவரையில் அழகுபடுத்தினாள்.அக்கம்பக்கத்து வீடுகளிலிருந்து பிளாஸ்டிக் கதிரைகளை இரவல் வாங்கி வீட்டு முன் சாலையில் போட்டாள். இரண்டு தெரு தள்ளியிருந்த சித்தி வீட்டுக்குத் தம்பியிடம் தகவலனுப்பி சித்தியை வரவழைத்து வருபவர்களை உபசரிப்பதற்காக பலகாரங்கள் செய்தாள்.உடல் மற்றும் மனம் முழுதும் கல்யாணக் களை தாண்டவமாட அவள் இயந்திரமாக இயங்கினாள்.

நிச்சயம் செய்ய வருகிறார்களென்றதும் மாப்பிள்ளை வீட்டிலிருந்து பெரும் கூட்டத்தை எதிர்பார்த்திருந்தார்கள் அவர்கள்.ஆனால் ஸ்ரீதரோடு அவனது பெற்றோரும் , அக்காவும் மட்டுமே வந்திருந்தார்கள். அக்கா குழந்தை எளிமையான அலங்காரத்தோடிருந்த இவளையே சுற்றிச் சுற்றி வந்தது. அவனது உறவுகளும் இவளது நெருங்கிய சொந்தங்களும் பார்த்திருக்க , மகிழ்ச்சி முகங்கள் சூழ்ந்திருக்க அவளுக்கு அவன் மோதிரம் அணிவித்தான். ஒரு வாலிபனின் கரம் முதன்முதலாகத் தொட்டதில் இயல்பாகவே வெட்கிச் சிவந்தவளை ஸ்ரீதர் ஒரு கணம் இமைக்காமல் பார்த்திருந்தான்.திருமணத்தை வரும் மாதத்தின் இரண்டாம் ஞாயிறன்று நடத்துவதாக உறுதி செய்யப்பட்டது.

அவள் வாழ்வினைப் போலவே விடிய ஆரம்பித்திருந்த கடல் வெளியை ஜன்னல் வழியே பார்த்தவாறிருந்தாள். திருமணத்திற்காக வீட்டுக்கு வர்ணம் பூசும் போது துருப்பிடித்திருந்த ஜன்னல் கம்பிகளுக்கும் வர்ணம் பூசவேண்டுமென எண்ணிக் கொண்டாள். அப்பா தான் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் தனது பிள்ளைகளைப் பட்டினியில் போட்டதில்லை.கஷ்டப்பட்டு உழைக்கும் பணத்தில் ஓரளவு சேமித்து வைத்திருந்தார்.அது இது போன்ற நல்ல காரியங்களின் போது பெரிதளவில் உதவும் என்பது சரியாகிப் போயிற்று இன்று.

அவள் காலை உணவை சீக்கிரமாகச் செய்ய ஆரம்பித்தாள். அப்பா முகம் கழுவிக் கொண்டு அறைக்குள் போவது தெரிந்தது. பெரும்பாலும் ஞாயிற்றுக் கிழமைகளில் அவர் வியாபாரத்துக்குச் செல்வது பகல்வேளையில் தான். அந்த நேரத்தில் தான் புதிதாக மீன்கள் கரைக்கு வரும். அவற்றை ஏலத்தில் வாங்கி சைக்கிளில் பக்கத்து ஊர்களுக்கு எடுத்துச் சென்று விற்றுவருவது அவரது தொழில்.

காலை உணவுவேலைகள் முடிந்ததும் பூரணி அக்கா வீட்டுக்குப் போய் தனக்குச் சில உடுப்புக்கள் தைக்கக் கொடுக்க வேண்டுமென நினைத்துக் கொண்டாள்.பூரணி அக்கா வீடு நாலு தெரு தள்ளியிருந்தது. இதுவரையில் எங்கேயும் தனியாகப் போக அப்பா அனுமதித்தது கிடையாது.அவளது எல்லாப் பயணங்களும் தம்பியுடனும் ,அப்பாவுடனுமே நிகழ்ந்திருக்கின்றன.

சமையல் முடிந்ததும் சிறிய சாப்பாட்டு மேசையில் உணவை ஒழுங்குபடுத்தி அப்பாவை அழைத்துப் பரிமாறினாள். அவர் சாப்பிட்டு முடிக்கையில் உடுப்புத் தைக்கப் போகவேண்டுமென்பதைச் சொன்னவளுக்கு எதிர்பாராவிதமாகத் தனியே செல்ல அனுமதி கிடைத்தது. எல்லாம் ஒரு மோதிரம் செய்த மாயம். ஒரு மோதிரம் அவள் வாழ்விலிருந்த சில தடைகளை ஒரு சாவியைப் போலத் திறந்து விட்டிருந்தது.

அவளும் தனது உணவை முடித்துக் கொண்டு ,மேசையை ஒழுங்குபடுத்தி, மீண்டும் முகம்கழுவி வந்தாள்.இருந்ததிலேயே நல்ல ஆடையொன்றை அணிந்து கொண்டவள் முகத்தில் லேசாகப் பவுடர் தடவிக் கொண்டாள். தைக்கப்பட வேண்டிய துணியை பையில் போட்டு எடுத்துக் கொண்டு தம்பி,தங்கைகளை எட்டிப் பார்த்தாள். அவர்கள் இன்னும் நித்திரையிலேயே இருக்க விலகியிருந்த போர்வையைச் சரிசெய்து அப்பாவிடம் சொல்லிக் கொண்டு வீதியிலிறங்கி நடந்தாள்.

அவள் பூரணி அக்கா வீட்டுக்குப் போய் துணி தைக்கக் கொடுத்துவிட்டு , தனது வீடு நோக்கிச் சில அடிகள் எடுத்துவைத்த வேளையிலேயே அந்தப் பெருஞ்சத்தம் கேட்டது.

************************************************

எல்லோருடனும் அவள் முகாமிலிருந்தாள்.அப்பாவினதும் , தம்பி , தங்கைகளினதும் சடலங்கள் சிக்கி உடனுக்குடனே புதைக்கப்பட்டன எனக் காற்று வழி வந்த செய்திகள் சொல்லின. அழுதழுதே கண்ணீர் வற்றிப் போன விழிகளிரண்டும் கருவளையங்களைச் சுமந்து சோர்ந்திருந்தன.தொண்டு நிறுவனங்கள் உணவையும் மருந்தையும் வழங்கியவாறு இருந்த போதிலும் அவளுக்கு எதுவும் தேவையற்றதைப் போலவே உட்காந்திருந்தாள். இழப்பின் வலியானது அவளை மிகவும் பாதித்திருந்தது. தூக்கமில்லை .பசிக்கவில்லை. அப்பாவின் பாசமுகம் ,தம்பி,தங்கைகளுடனான செல்லச் சீண்டல்கள் நினைவுகளில் மாறி மாறி இடறிக் கொண்டே இருக்கையில் இப்படியொரு இடர் சூழ்ந்த பொழுதில் தன்னை மட்டும் காப்பாற்றிக் கொண்டேனோ என்றும் துயருற்றுச் சோர்ந்தாள்.

அவளது வீடு இருந்த சுவடே இல்லையெனப் பேசிக் கொண்டார்கள். இருப்பினும் அப்பாவும் , உடன்பிறப்புகளும் உயிரோடு இருப்பார்களென்ற நம்பிக்கையின் கீற்று அவளுள்ளத்தில் இருந்துகொண்டே இருந்தது.

"ராணி அக்கா, உங்களைத் தேடி யாரோ வந்திருக்காங்க. உங்க பேரைச் சொல்லி விசாரிச்சாங்க "

ஒரு சிறுமி வந்து சொன்னதும் பரபரப்பாக உடனே எழுந்துகொண்டாள்.அங்கிருந்தபடியே முகாம் வாசலை எட்டிப் பார்த்தாள். ஸ்ரீதர் நின்றிருப்பது தெரிந்தது.கால்கள் துவழ முகாம் வாசலுக்கு வேகமாக நடை போட்டாள்.ஸ்ரீதர் இவளை ஏறிட்டுப் பார்த்து " உன்கிட்டக் கொஞ்சம் பேசணும் " என்று முகாம் சுவரோரமாக நகர்ந்தான். அவள் மௌனமாகப் பின் தொடர்ந்தாள்.

"உன் வீட்டுப் பக்கம் போனேன். வீடு இருந்த அடையாளமே இல்ல. அப்பா, தம்பி,தங்கச்சிங்க எல்லோருமே இல்லாமப் போயிட்டாங்கன்னு பேசிக்கிட்டாங்க. நீ இங்கேயிருக்கிறது இப்பத்தான் தெரிஞ்சது..அதான் ஓடி வந்தேன். "

'ஒரு உறவெனத் தேடி இவராவது வந்திருக்கிறாரே ' என மனம் சிறிது ஆறுதலடைந்திற்று. இந்தக் கொடி படர வேண்டிய விருட்சம் , வனாந்தரமே அழிந்திட்ட போதிலும் கொடியைத் தேடி வந்திருக்கிறது. அந்த விருட்சத்தின் வேர்கள் முழுவதுமாக நனைந்திடும் அளவுக்குக் கதறியழும் வீழிநீரைக் கொடி கொண்டிருக்கிறது இப்போது.

அவள் அவனை நிமிர்ந்து பார்த்தவாறே இருந்தாள். நிலத்தில் எதையோ தேடுவதைப் போலத் தலை குனிந்து கொண்டவன்,
" நம்ம நிச்சயதார்த்தம் நடந்த வேளையிலதான் அபசகுனமா இப்படிச் சுனாமியெல்லாம் வந்திருக்குன்னு என்னோட வீட்டுல நினைக்கிறாங்க. வீட்டுல உள்ளவங்களை மீறி உன்னைக் கட்டிக்கிறது சாத்தியமில்ல. அதான் நம்ம கல்யாணம் இனிமே நடக்காதுன்னு சொல்லிட்டுப் போக வந்தேன். அந்த மோதிரத்தைக் கழட்டிக் கொடுத்துட்டேன்னா இருட்டுறதுக்குள்ள வீட்டுக்குப் போய்ச் சேர்ந்திடுவேன் " என்றான்.

- எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

18 comments:

வால்பையன் said...

இந்த ரணங்கள் எவ்வளவு மருந்திட்டாலும் ஆறாது.

தமிழன்-கறுப்பி... said...

என்ன ரிஷான் இப்படியொரு கதையை சொல்லிட்டிங்க

தமிழன்-கறுப்பி... said...

என்ன ரிஷான் இப்படியொரு கதையை சொல்லிட்டிங்க !!!!!

தமிழன்-கறுப்பி... said...

வெறுமனே புனைவா அல்லது ?

கிரி said...

ரிஷான் என்ன இப்படி சோகமா முடித்து விட்டீங்க..

"குசினி" னா என்னங்க?

கோகுலன் said...

ஒஹ்..ஹோ.. ரிஷான்.. கதை கஷ்டமா இருக்குப்பா..

நம்மூர்ல இன்னும் எத்தனை நாளைக்குத்தான் அதிர்ஷ்டம் / துரதிர்ஷ்டம் எல்லாம் பார்ப்பாங்களோ?

கதை நன்று நண்பா.. வாழ்த்துக்கள்!!!

Divya said...

ரிஷான்,
கதையை படித்து முடித்துவிட்டு......சிறுது நேரம் வார்த்தைகளின்றி கணமான மெளனத்துடன் இருந்தேன்......கதை ஏற்படுத்திய தாக்கத்தை விவரிக்க வார்த்தைகள் இல்ல ரிஷான்.

உங்கள் படைப்புகளில்......முத்தான பதிப்பு இக்கதை!!

[comment pop-up remove paninathuku nanri]

M.Rishan Shareef said...

அன்பின் வால்பையன்,

//இந்த ரணங்கள் எவ்வளவு மருந்திட்டாலும் ஆறாது.//

நிச்சயமாக :(

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

அன்பின் தமிழன்,

//என்ன ரிஷான் இப்படியொரு கதையை சொல்லிட்டிங்க //

இது போன்ற அகோரத்தில் சிக்கிய அத்தனை பேரிடமும் இதுபோல ஏதோவொரு கதை இருக்கிறது நண்பரே உலகுக்குச் சொல்ல.. :(

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே..:)

M.Rishan Shareef said...

அன்பின் கிரி,

//"குசினி" னா என்னங்க?//

சமையலறையைத்தான் நாங்கள் இலங்கையில் பேச்சுவழக்கில் குசினி என்று குறிப்பிடுவோம்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

அன்பின் கோகுலன்,

//கதை நன்று நண்பா.. வாழ்த்துக்கள்!!!//

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பா :)

M.Rishan Shareef said...

அன்பின் திவ்யா,

//ரிஷான்,
கதையை படித்து முடித்துவிட்டு......சிறுது நேரம் வார்த்தைகளின்றி கணமான மெளனத்துடன் இருந்தேன்......கதை ஏற்படுத்திய தாக்கத்தை விவரிக்க வார்த்தைகள் இல்ல ரிஷான்.

உங்கள் படைப்புகளில்......முத்தான பதிப்பு இக்கதை!!//

உங்கள் கருத்தில் மகிழ்கிறேன்.
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி தோழி :)

Sakthy said...

கதை நன்று ரிஷான் .. வாழ்த்துக்கள்

KARTHIK said...

// இந்தக் கொடி படர வேண்டிய விருட்சம் , வனாந்தரமே அழிந்திட்ட போதிலும் கொடியைத் தேடி வந்திருக்கிறது. அந்த விருட்சத்தின் வேர்கள் முழுவதுமாக நனைந்திடும் அளவுக்குக் கதறியழும் வீழிநீரைக் கொடி கொண்டிருக்கிறது இப்போது.//

இனிவரும் காலத்தில் இதுபோல கதைகள் வராமல் இருக்க வேண்டும்
நல்ல மொழிநடை தொடருங்கள்.

M.Rishan Shareef said...

அன்பின் சக்தி,

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சினேகிதி :)

M.Rishan Shareef said...

அன்பின் கார்த்திக்,

//நல்ல மொழிநடை தொடருங்கள்.//

:)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

ராமலக்ஷ்மி said...

அருமையான நடை. மனதைப் பிசையும் முடிவு. இதுதான் உலகம்.

நல்லதொரு கதை ரிஷான்.

வாழ்த்துக்கள்!

M.Rishan Shareef said...

அன்பின் ராமலக்ஷ்மி,

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி !