Friday, January 9, 2009
ஈரம்
இன்று சிலவேளை மழை பெய்யலாம் எனத் தோன்றியது. முற்றத்தில் காலை வெயில் பளீரென அடித்துக் கொண்டிருந்தது. எனினும் வானில் கருமேக மூட்டம் பல வடிவங்களைக் கொண்டு களைந்துகொண்டிருந்தது. அந்தக் குடிசை முழுதும் ஒரு பூனையின் மென்மயிரென அவிந்து கொண்டிருந்த நெல்லின் மணம் பரவிவிட்டிருந்தது. செல்லாயி அந்தப் பானையின் மூடியைத் தூக்கி நீர்மட்டம் பார்த்தாள். இன்னும் கொஞ்ச நேரத்தில் முற்றாக அவிந்துவிடும். பின்னர் முற்றத்தில் பரத்திவிட்டு உடுப்புக் கழுவப் போகலாம்.
குடிசையின் ஒரு மூலையில் கயிற்று ஊஞ்சலில் தொங்கவிட்டிருந்த ஓலைப்பாயொன்றை எடுத்தாள். முற்றத்தில் வெயிலின் அடர்த்தி அதிகமாக இருந்த ஒரு இடத்தைப் பார்த்து பாயினை விரித்தாள். வெயில் தரையை விட்டு அவள் விரித்த பாயில் படுத்துக் கொண்ட சமயம் உள்ளே போய் நெற்பானையைத் துணியால் பிடித்துத் தூக்கமுடியாமல் தூக்கி வந்து பாயருகில் வைத்தாள். பெரும் அகப்பை கொண்டு நெல்லை அள்ளி அள்ளி பாயில் பரப்பத் தொடங்கினாள்.
வயல் வேலைக்கு ஒரு கூலியாகச் செல்லும் அவளுக்குக் கிடைத்த கூலிதான் இந்த ஒரு கூடை நெல். அவித்து, குத்திப் புடைத்து வைத்துக் கொண்டால் அவளுக்கும் விறகு வெட்டியான அவள் கணவனுக்கும் ஒரு மாத வயிற்றுப்பாட்டுக்குப் போதும். நாற்று நட, கதிரறுக்க எனச் சுற்றுவட்டாரத்தில் எங்கு வயல்வேலை நடந்தாலும் செல்லாயிக்கு அழைப்பிருந்தது. அவளது கைநேர்த்தியும், சுறுசுறுப்பும் அவளுக்கு நல்லபெயர் வாங்கிக் கொடுத்திருந்தது. வாங்கும் கூலிக்கு வஞ்சனை செய்யாமல் அவளும் உடல்பாடுபட்டு உழைத்தபடி இருந்தாள். குழந்தை பிறந்த பிறகு கூட இரண்டு மாதங்கள் மட்டுமே அவள் வேலைக்குச் செல்லாமல் இருந்தாள். பிறகு வயல்வெளி நிழல் மரங்களில் தொட்டில் கட்டிக் குழந்தையைத் தூங்கவைத்துவிட்டு அவள் தன்பாட்டுக்கு வேலை செய்தாள்.
வெயில் தன் ஆதிக்கத்தை இப்பொழுது நெல்லின் மேல் பரப்பத் தொடங்கியது. சூடாகப் பரத்தப்பட்டிருந்த நெல்லின் மேலிருந்து இலேசாகப் புகை கிளம்பியது. முழுவதுமாகப் பரத்தி முடித்தபின் எழுந்து நின்று ஒருமுறை முழுவதுமாகப் பார்த்தாள். ஏதோ ஒன்று குறைவது போலத் தோன்ற குடிசையருகில் வந்து எட்டி நின்று ஓலைக் கூரையின் பாக்குமரக் கம்புகளுக்கு இடையில் சொருகப்பட்டிருந்த உடைந்த முகம்பார்க்கும் கண்ணாடித் துண்டுகளை எடுத்துவந்து நெற்பாயின் நான்கு மூலைகளிலும் நடுவிலும் வைத்தாள். இனிக் காக்கை,குருவிகள் அண்டாது எனத் திருப்தியாக உள்ளே சென்றாள். அவளது ஆறுமாதக் குழந்தை இன்னும் தூங்கிக் கொண்டிருந்தது அவளுக்கு நிம்மதியாக இருந்தது. ஆறுதலாக நேற்று இரவு தண்ணீர் ஊற்றிவைத்திருந்த எஞ்சிய பழஞ்சோற்றினை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டாள். சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், எலுமிச்சை ஊறுகாய் என எடுத்துவைத்துக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தாள்.
முருகையன் கீழ்த் தோட்டத்தில் இப்பொழுது விறகுவெட்டிக் கொண்டிருப்பான் என எண்ணிக் கொண்டாள். அவளது குழந்தைக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. எப்பாடு பட்டாவது பணம் கொஞ்சம் சேர்த்தெடுத்து , பக்கத்துப் பெரிய கோயிலுக்குத் தூக்கிப் போய் மொட்டையடித்துக் காதுகுத்தி ஒரு நல்லபெயராக வைக்கவேண்டுமென நேற்றிரவும் அவள் முருகையனிடம் சொல்லியிருந்தாள். அவனும் அதனை உத்தேசித்தே பாடுபட்டு உழைத்துக் கொண்டிருப்பதாகச் சொன்னான்.
சாப்பிட்டு முடித்து, கழுவவேண்டிய அழுக்குத் துணிகளைத் தேடிக் கொண்டிருந்த சமயம் தொட்டிலில் இருந்த குழந்தை காலை உதைத்துச் சிணுங்க ஆரம்பித்தது. துணிகளை அப்படியே போட்டுவிட்டுக் குழந்தையருகில் வந்து சத்தமாக செல்லம் கொஞ்ச ஆரம்பித்தாள். பழகிய குரலைக் கேட்டதும் குழந்தை புன்னகைத்தது. எடுத்து முத்தமிட்டுப் பால்கொடுத்தாள். ஒரு பழந்துணியை நிலத்தில் விரித்து குழந்தையைப் படுக்கவைத்தாள். வயிறு நிறைந்த திருப்தியில் அக்குடிசையின் ஓலைக் கூரை பார்த்துத் தனியாகக் கதைத்துக் கொண்டிருந்த அதன் வெற்றுக் கால்களுக்குக் கொலுசு வாங்கிப் போடவேண்டுமென நினைத்துக் கொண்டாள்.
குழந்தையின் அழுக்குத் துணிகளும், அவளதும் அவனதும் அழுக்குத் துணிகளுமாகச் சேகரித்ததற்கு மத்தியில் சவர்க்காரத்தையும் வைத்து மூட்டையாகக் கட்டினாள். ஒற்றையடிப் பாதையில் இறங்கி மேட்டில் ஏறி மீண்டும் இரண்டு பள்ளங்கள் இறங்கி நடந்தால் சிற்றோடை வரும். அவளுக்கு வேலைக்கு அழைப்பில்லாத நாட்களில் துணிகளையும் குழந்தையையும் தூக்கிக் கொண்டு துவைத்து வரப் போவது அவளது வழமை. ஓடைக் கரை மருதமரத்தில் ஒரு தொட்டிலைக் கட்டி, குழந்தையின் வயிற்றை நிரப்பித் தூங்கவிட்டாளானால் ஈரக் காற்றுக்கும், பெருமரத்தின் நிழலுக்குமான சுகம் கண்டு குழந்தை எந்த ஆர்ப்பாட்டமுமில்லாமல் நிம்மதியாக உறங்கும். எல்லாத் துணிகளையும் கழுவிவிட்டு, அவளும் குளித்து, குழந்தையையும் குளிப்பாட்டியெடுத்துக்கொண்டு தன் வீட்டுக்கு வருவாள்.
முற்றத்துக்கு வந்துபார்த்தாள். வெயில் நெல்லைப் பரிகசித்தபடி ஆவியாக்கிக் கொண்டிருந்தது. மேகக் கருமூட்டம் சூரியனைச் சில நேரங்களில் ஒளித்துவைத்தபடி அவளுக்கு விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தது. மழை வருமோ? போனமுறை அப்படித்தான். அடித்த வெயிலை நம்பி நெல் அவித்து முற்றத்தில் பரத்திவிட்டு, பக்கத்துக் கிராமத்து சின்னாச்சிக் கிழவியின் சாவுவீட்டுக்குப் போயிருந்த போது பேய்மழை பிடித்துக் கொண்டது. அவசரமாக ஓடிவரவும் முடியாது. மழை நின்ற பின்னால் வந்து பார்த்தால் முற்றத்தில் ஓடிய வெள்ள நீருக்குப் பாயில் நெல் இருந்த சான்றுக்காகச் சில நெல்மணிகள் மட்டுமே எஞ்சியிருந்தது. பல நாள் உழைப்பு. ஒரு மாத உணவு. எல்லாம் ஒரு பொழுது மழையில் வீணாகிப் போனதில் பெருஞ்சோகம் அப்பியது அவளில். முருகையன்தான் 'விடு புள்ள, நமக்குக் கொடுப்பினை இல்ல..அவ்ளோதான்' என்று ஆறுதல் சொன்னான்.
கடும் சூட்டோடு அடித்த வெயில் இப்போதைக்கு மழை வராது என்ற எண்ணத்தை அவளில் ஊன்றியது. உள்ளே போய் குழந்தைக்கு ஓடைக் கரையில் தொட்டில் கட்டவென வைத்திருந்த பழஞ்சேலையால் மூட்டையைச் சுற்றியெடுத்து குடிசைக்கு வெளியே கொண்டுவந்து வைத்தாள். குடிசையின் கொல்லைக் கதவை மூடிவிட்டு, குழந்தையைத் தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டாள். வெளிக்கதவுக்கான பூட்டினையெடுத்துக் கொண்டு வெளியே வந்து கதவைப் பூட்டினாள். துணிமூட்டையை எடுத்துத் தலையில் வைத்தவள் திரும்பவும் பரத்தியிருந்த நெல்லை ஒரு முறை பார்த்துக் கொண்டாள்.
மேடு ஏறிப் பள்ளங்கள் இறங்கிவந்தவளுக்கு மூச்சு வாங்கியது. ஓடைக்கரை சலவைக் கல்லில் துணிகளை வைத்தவள் சலசலத்து ஓடும் ஓடையை ஒரு முறை கண்களால் மேய்ந்தாள். ஓடையில் இவளைத் தவிர யாரையும் காணவில்லை.தெளிந்த நீர். மழை பெய்தால் மட்டும் கலங்கிய நீராகி வெள்ளக் காடாகிவிடும். போன வருஷம் அடை மழை வந்தபோது இந்த மருத மரம் கூடப் பாதிவரை மூழ்கியதாக ஊருக்குள் பேசிக் கொண்டார்கள்.
துணிமூட்டையைச் சுற்றியிருந்த தொட்டில் சேலையைத் தனியாக எடுத்தாள். மருத மரத்தின் அண்டிய ஒரு கிளைக்குச் சேலையின் ஒரு முனையை எறிந்தவள் வாகாகத் தொட்டிலைக் கட்டிவிட்டாள். ஒரு கல்லில் அமர்ந்து குழந்தைக்குப் பால் கொடுத்தாள். குடித்துக் கொண்டிருக்கும் பொழுதே கண் சொருக ஆரம்பித்தது குழந்தைக்கு. அப்படியே அள்ளியெடுத்தவள் அதன் நெற்றியில் மெலிதாக முத்தமிட்டாள். பின்னர் கட்டிய தொட்டிலில் படுக்கவைத்து கொஞ்சநேரம் ஆட்டிவிட்டாள்.
உடுத்திருந்த சேலையோடு ஓடையில் இறங்கினாள். முழங்கால் வரை நனைத்து ஓடிய தண்ணீரில் நின்றுகொண்டு ஒவ்வொரு துணியாக அலச ஆரம்பித்தாள். ஓடை மணலும், நழுவிய நீரும் காலடியில் குறுகுறுத்தது. சிறு மீன் குஞ்சுகள் காலுக்குக் கூச்சம் தந்தபடி கவ்வத் தொடங்கின. குளித்து முடித்துப் போய் மீன் வாங்கிவந்து முருகையன் வரும் போது சுடுசோற்றோடு மணக்க மணக்க மீன் கறி சமைத்து வைக்கவேண்டும் என எண்ணிக் கொண்டாள்.
வானம் கருக்கத் தொடங்கியது. அண்ணாந்து பார்த்தவளின் நெற்றியில் மழையின் முதல் துளி விழுந்தது. ஐயோ இன்றைக்கும் மழையா ? ஓடைக் கரைக்கு ஏறியவள் தூறல் வலுக்க முன்னர் குடிசைக்கு ஓடத் தொடங்கினாள். அவளது பல நாள் உழைப்பு. ஒரு மாத உணவு. மூச்சு வாங்க ஓடி வந்தவள் சிறு தூறலில் நனைந்திருந்த நெற்பாயின் நான்கு மூலைகளையும் ஒன்றாகச் சேர்த்துப் பிடித்து குடிசைத் திண்ணை வரை இழுத்துவந்தாள். இடுப்பில் கட்டியிருந்த சாவியை எடுத்து பூட்டினை விடுவித்துக் குடிசையைத் திறந்து நெற்பாயினை உள்ளே வைத்த பொழுது மழை வலுத்தது.
இப்பொழுது அவளுக்கு நிம்மதியாக இருந்தது. அரும்பாடு பட்டுச் சேர்த்து, அவித்துக் காயவைத்த நெல்லை பெரும் மழையிலிருந்து காப்பாற்றியாகிவிட்டது .நிம்மதிப் பெருமூச்சு விட்டவளின் கண்களுக்கு குடிசைக்குள்ளிருந்த வெற்றுத் தொட்டில் கண்ணில் பட்டது. 'ஐயோ என் குழந்தை' எனப்பதறியவாறு குடிசையையும் பூட்டாமல் பெரும் மழையில் நனைந்தவாறு திரும்பவும் ஓடைக்கரைக்கு ஓடத் தொடங்கினாள்.
-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.
Monday, December 1, 2008
ஒற்றைச் சுவடு
ஒளி பட்டுத் தெறிக்கும்
முகம் பார்க்கும் கண்ணாடி
சுமந்துவரும் விம்பங்கள் பற்றி
மெல்லிய காற்றிற்கசையும் திரைச்சீலைகளிடமும்
சொல்லப் படாக் கதைகள் இருக்கின்றன
தரை,சுவர்,தூண்,கூரையெனப்
பார்த்திருக்கும் அனைத்தும்
வீட்டிற்குள்ளான ஜீவராசிகளின்
உணர்வுகளையும்
அத்தனை ரகசியங்களையும்
அறிந்தே இருப்பினும் வாய் திறப்பதில்லை
" ஆதித்யா, உன் தனிமை பேசுகிறேன். கேட்கிறாயா? "
" நான் தனித்தவனாக இல்லை. இந்தச் சாலையோர மஞ்சள் பூக்கள், காலையில் வரும் தேன்சிட்டு, புறாக்கள், கிளிகள், மைனாக்கள், எனது எழுத்துக்கள் என எனைச் சூழப்பல இருக்கத் தனித்தவனாக இல்லை. நீ பிதற்றுகிறாய். வழி தவறி வந்திருக்கிறாய் "
" இல்லை. உன் மனதுக்கு நீ தனித்தவன். இதுவரையில் நீ வாழ்ந்த வாழ்க்கையில் ஒரு முகமூடியை அணிந்தபடியே ஊர்கள் தோறும் சுற்றி வந்திருக்கிறாய். நீ நீயாக இருந்ததில்லை. இப்பொழுதும் ஒப்புக்கொள்ள மறுக்கிறாய். நீ ஆதித்யா. ஆனால் ஆதித்யாவாக என்றும் நீ இருந்ததில்லை. உனது சுயத்தை வெளிக்காட்டத் தயங்கியபடி உள்ளுக்குள் மருகுகிறாய். "
" உன்னிடம் என்னைப் பற்றிய விளக்கம் கேட்க வேண்டிய அவசியம் எனக்கென்ன இருக்கிறது ? நீ யார் ? எதற்கு வந்திருக்கிறாய்? "
" இந்த அலட்சியம், யாரையும் மதிக்காத அகம்பாவம், எல்லாவற்றிலும் நான் மட்டுமென்றான திமிர், பணம் சம்பாதிப்பதை மட்டுமே வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டிருக்கும் சுயநலம், உனது தேவைகளுக்கு ஏற்றவிதத்தில் உருமாறிக் கொள்ளும் பச்சோந்தித்தனம், முக்கியமாக எதையும், யாரையும் புரிந்துகொள்ளாத அல்லது புரிந்துகொள்ள முயற்சிக்காத முன்கோபம் இவையெல்லாம் தான் இன்றென்னை உன்னருகில் அழைத்துவந்திருக்கிறது. "
" சரி. இருந்துவிட்டுப்போகட்டும். எனக்கு நீ வந்திருப்பது பிடிக்கவில்லை. அதுவும் கேள்விகளோடு...கேள்விகள்...கேள்விகள்..கேள்விகள். உன் வருகையின் நோக்கமென்ன ? "
" நானாக வரவில்லை. அன்பே உருவான ஸ்ரீயைப் பிரிந்தாய். நான் தானாக வந்துவிட்டேன். நான் வரக்கூடாதெனில் ஏன் அவளையும் பிரிந்தாய்? இது உனது முதல் மனைவிக்குப் பிறகான நான்காவது காதல். அவளை நேரில் பார்க்காமலே வந்த காதல். அசிங்கங்களுக்குள் வாழ்ந்த உன்னைத் தூய்மைப்படுத்தி அருகிலமர்த்திக் கொண்டவளை உதைத்து நீ வந்திருக்கிறாய். நான் வந்துவிட்டேன். "
" ஆம். அவளைப் பிரிந்தேன். அவளென்னை நிம்மதியாக இருக்கவிடவில்லை. என்னை அடிமைப்படுத்தப் பார்த்தாள். அவள் சொல்லும்விதமெல்லாம் நான் நடந்துகொள்ள வேண்டுமென எதிர்பார்த்தாள். மீறினால் வாதித்தாள். "
" எதனால் அவள் அப்படி நடந்துகொள்கிறாள் என யோசித்தாயா ? ஒரு கணமேனும் அது குறித்து அவள் நிலையிலிருந்து சிந்தித்தாயா? "
" எதற்கு சிந்திக்கவேண்டும்? நான் நானாகத்தான் இருப்பேன். அவளுக்காக நான் ஏன் என்னை மாற்றிக்கொள்ளவேண்டும்? "
" நீ மாற்றிக்கொண்டிருக்கத்தான் வேண்டும். ஏனெனில் நீதான் அவளைத் துரத்தித் துரத்திக் காதலித்தாய். ஒத்துவராதெனச் சொல்லி அவள் விலகி விலகிப் போனபோது அவள் குறித்துக் கவிதைகள் பாடினாய். உனது குருதியைத் தொட்டுக் கடிதம் எழுதி அவளை உன் பக்கம் ஈர்த்தாய். அவள் உனக்காக அவள் முடிவை மாற்றிக் கொள்ளவில்லையா ? நீ மாற்றிக் கொள்வதில் உனக்கென்ன தயக்கம் ? "
" அவளுக்கு என் மேல் நம்பிக்கையில்லை. அதனால் தான் மாறச் சொல்கிறாள். நான் ஆண். அவளையும் விட மூத்தவன். பல அனுபவங்களைக் கற்றவன். அவள் சொல்வதைக் கேட்கவேண்டுமென்ற கடமையோ அவசியமோ எனக்கில்லை. "
" அவள் இளமை மிகுந்த அழகி. இதுவரையில் எக்காலத்திலும் உன்னைத் தவிர்த்து எவருடைய காதலுக்கோ , வேறு எச்சலனத்துக்கோ இடம் கொடுக்காதவள். எப்பொழுதும் அவளைச் சூழவும் மிகுந்த அன்பானவர்களை மட்டுமே கொண்டவள். அப்படிப்பட்டவள் உன் மேல் நம்பிக்கையில்லாமலா தனது தாய்நாட்டை விட்டு, பெற்றவர்கள், உடன்பிறப்புகள் அனைத்தையும் விட்டு உன்னுடன் உனது நாட்டுக்கு வந்துவிடுவேன் எனச் சொன்னாள் ? நீயழைத்தது போல் அவள் அப்படி உன்னை அழைத்திருந்தால் நீ போவாயா? மாட்டாய். நீ செல்லமாட்டாய். அவளில்லாவிட்டால் இன்னொரு அழகி. இன்னொரு அப்பாவிப்பெண். மடங்காவிட்டால் பெருவிரலின் ஒரு துளி இரத்தம், சில கவிதைகள் போதுமுனக்கு. "
" நீ அதிகம் பேசுகிறாய். "
" உண்மையைப் பேசுகிறேன். நீ இதுபோல அவளைப் பேசவிடவில்லை. அவள் இதையெல்லாம் சொல்லியிருந்தால் அடங்காப்பிடாரி என அவள் பற்றி உன் சகாக்களிடம் பகிர்ந்துகொண்டிருப்பாய். வழமை போலவே அவர்களிடத்தில் உன்னை நல்லவனாகக் காட்ட அவள் குறித்துத் தீய பிம்பங்களை உருவாக்கிப் புலம்பித் தீர்த்திருப்பாய். "
" இல்லை. அவளும் பேசினாள். இது போல அல்லது இதைவிடவும் அதிகமாக அவள் பேசினாள். எனக்குக் கட்டுப்பாடுகள் விதித்தாள். எனது சுதந்திரத்தை அவளது வார்த்தைகளுக்குள், சத்தியங்களுக்குள் அடக்கினாள்.அவள் சொன்ன சிலவற்றை செய்யத்தானே செய்தேன். இருந்தும் போதவில்லை அவளுக்கு. தினமும் இன்னுமின்னும் புதுப்புதுக் கட்டளைகளோடு வந்தாள். "
" சரி. அந்தக் கட்டளைகளால் இதுவரை உனக்குத் தீயவை எதேனும் நடந்ததா சொல். எல்லாவிதத்திலும் உனது உயர்ச்சியைச் சிந்தித்துத்தானே அவள் தன் எண்ணங்களை உன்னிடத்தில் சொன்னாள். நீ நடந்துகொண்ட விதமும், உனது வாழ்க்கை முறையான தீயநடத்தைகளும் அப்படியவளை விதிக்கச் செய்தன. நீ ஒழுங்கானவனாக இல்லை. இதனாலேயே உன் முதல் மனைவி விஜியையும் பிரியநேர்ந்ததென்பதனை நீ மறந்துவிட்டாய். பின்னர் உனது பணத்தினை மொய்த்தபடி இரவுகளுக்கு நிறையப் பெண்தோழிகள். அது இன்றுவரையிலும் தொடருகின்றதென்பதனை ஒரு தூயவள் எப்படி ஏற்றுக் கொள்வாள்? நீ அவளை மெய்யாலுமே காதலித்திருந்தாயெனில், அவளது நேசமும் அன்பும் மட்டுமே உனக்குப் போதுமெனில் அவள் சொல்லமுன்பே உன் தீய சினேகிதங்களை விட்டிருக்கவேண்டுமல்லவா ? உனது துர்நடத்தைகளை விட்டும் நீங்கியிருக்கவேண்டுமல்லவா ?"
" அவள் என்னை அடிமையாக்கப்பார்த்தாள். "
" மன்னிக்கவும். திருத்திக்கொள். அவள் உன்னை நல்வழிப்படுத்த முயற்சித்தாள். உன்னை நேர்வழியில் கூட்டிச் செல்லவெனக் கைகோர்த்து நடந்தாள். வீணாகும் உனது நேரங்களைச் சுட்டி உனது எழுத்துக்களில் நீ பெரிதாக ஏதாவது சாதிக்கவேண்டுமென விரும்பினாள். நள்ளிரவிலும், நேரம் காலமின்றியும் உனக்குத் தொலைபேசும் ஒழுக்கம் தவறிய பெண்களின் அருகாமையைத் தவிர்க்கச் சொன்னாள். உனக்கது பிடிக்கவில்லை. உனக்குக் காதலியும் வேண்டும். இரவுகளில் கன்னம் தடவப் பெண் தோழிகளும் வேண்டுமென்றால் எந்தத் தூயவள் ஏற்றுக் கொள்வாள் ? ஓரிரு நாள் பொறுத்துப்பார்த்தாய். காதல் குறித்த அழகிய உவமைகள் கொண்டும், பிதற்றல்கள் கொண்டும் அவளது கோரிக்கைகளை நிறுத்தப்பார்த்தாய். உனது வார்த்தைகளைத் தடிக்கச் செய்தாய். விஜி தீக்குளித்த அன்றும் உனது வார்த்தைகள் தானே தடித்தன? ஒவ்வொரு காதலும் உன்னை விட்டு நீங்கியபொழுதாவது அவற்றிலிருந்து பாடம் கற்றுக்கொண்டிருக்க வேண்டாமா நீ ? "
" நீ பழையவற்றைக் கிளறுகிறாய். "
" சரியாகச் சொன்னாய். நீ இன்னும் பழைய குப்பைகளை உன் வாசலில், உனது முகத்துக்கு நேராகவே வைத்திருக்கிறாய். அகற்றவும் மறுக்கிறாய். அதற்கூடாகவே அவளையும் அழைக்கிறாய். குப்பைகள் சூழ வாழ்ந்து பழகாதவள் நாற்றம் தாங்காமல் அதை அகற்றச் சொல்கிறாள். உனது சுவாசத்திற்காகச் சோலைகளை வழிகளில் நிறுத்துகிறாள். நீயாகப் புறந்தள்ளி இன்னுமின்னும் குப்பைகளைச் சேகரித்துக் கொண்டு மீண்டும் மீண்டும் நாற்றங்களில் மெய்மறக்கிறாய். அவளென்ன செய்வாள் விட்டுப் போவதைத் தவிர."
" அவள் சொன்ன ஒரு சிலவற்றையாவது நான் செய்திருக்கிறேன் .ஆனால் அவள் எனக்காக இதுவரையில் அணுவளவாவது ஏதேனும் செய்திருக்கிறாளா ? "
" இதற்குத்தான் அவள் நிலையில் உன்னை வைத்துச் சிந்திக்கச் சொன்னேன். அவள் உன்னைப் பற்றி, உனது உயர்ச்சி பற்றி ஒவ்வொரு கணமும் யோசித்ததால்தானே உனக்கு நல்ல அறிவுரைகள் சொன்னாள். அவள் இதுவரையில் உன்னை நேரில் கூடப் பார்த்ததில்லை. நீ அவளுக்குக் கிடைப்பாயென்ற நிச்சயமேயில்லை. இருந்தும் உன்னை மிகவும் நல்வழிப்படுத்த முயற்சித்தாள். மெய்யான அன்போடு தனது ப்ரியத்திற்குரிய எழுத்தையும் உனக்காக விட்டுவிட்டு தனது சொந்தங்கள் எல்லாவற்றையும் துறந்து உன்னுடன் வந்து, உனக்காகவே வாழ்கிறேன் என்றாள். . உன்னுடன் வாழவந்த பிறகும் உனக்குப் பிடித்தவகையில் சமைத்து, உனக்குப் பிடித்தவகையில் உடுத்தி, உனக்குப் பிடித்தவகையில் உறவாடி உன்னுடனே இருந்திருப்பாள். இதைவிடவும் வேறு என்ன வேண்டும் உனக்கு ? என்ன எதிர்பார்க்கிறாய் நீ ? உனது தவறுகள் குறித்து எந்தக் கேள்வியும் கேட்காதவளையா? அதற்கு நீ ஒரு பொம்மையைக் காதலித்திருக்கவேண்டும். ஒழுக்கம் நிறைந்த ஒரு பெண்ணையல்ல. "
" நான் என்ன செய்யவேண்டுமென நீ சொல்லவருகிறாய்? "
" இந்தக் காதலிலிருந்தாவது , இந்த அனுபவத்திலிருந்தாவது பாடம் கற்றுக்கொள். உனது வீண்பிடிவாதங்களையும் துர்நடத்தைகளையும் தீய சினேகங்களையும் உனை விட்டும் அப்புறப்படுத்து. நீ தவறு செய்தால் அடுத்தவர் மேல் பழியினை ஏற்றித் தாண்டிப்போகப் பார்க்காமல் அது உனது தவறுதானென ஒத்துக்கொள். மீண்டும் அத்தவறு நிகழாமல் பார்த்துக்கொள். "
" சரி. நானும் அவள் மேல் அன்பாகத்தானே இருந்தேன்."
" அன்பு இருந்திருந்தால் அதனை உள்ளுக்குள் வைத்திருந்ததில் என்ன பயன்? இருவரும் அருகிலிருந்தாலாவது அன்பைச் சொல்ல ஒரு புன்னகை, ஒரு சிறு தொடுகை போதும். பகிர்ந்தருந்தும் தேனீர்க்கோப்பை போதும். ஆனால் கடல் கடந்து, தேசங்கள் கடந்து காதல் கொள்பவர்களுக்கு அன்பைச் சொல்ல எழுத்துக்களும் பேச்சும் மட்டும்தானே உள்ளன. அவற்றில் ஏன் உன் அன்பைக் காட்டவில்லை ? யார் யாருக்காகவோ கவிதை, கதை எனக்கிறுக்குமுன்னால் அவளுக்கான காலை வணக்கத்தை ஏன் அன்பைக் குழைத்தனுப்ப முடியவில்லை ?"
" இப்பொழுது நான் என்ன செய்யவேண்டும் என்கிறாய்? "
" உனது தீய நடத்தைகளை விட்டொழி. யாருக்கும் வாக்குறுதியளிக்கும் முன்பு இரு தடவைகள் யோசி. கொடுத்த வாக்குறுதியை மீறாதே இனிமேல் உன்னை நேசிக்கும் எவர்க்கும் உனது அன்பினை செய்கைகளாலும் நடத்தைகளாலும் வார்த்தைகளாலும் வெளிப்படுத்து. நீ நீயாக இருந்து அவளது விருப்பப்படியே எழுத்துக்களில் சாதித்துக்காட்டு. "
" சரி. செய்கிறேன். அவள், அவளது அன்பு எனக்கு மீளவும் வேண்டும். கிடைப்பாளா ? "
" முதலில் இப்படி அழுவதை நிறுத்து. ஒன்று அவளில்லையேல் வாழ்க்கையே இல்லையென்று விசித்து விசித்தழுகிறாய். இல்லாவிடில் இனி மகிழ்ச்சியாக வாழ அவள் நினைவுகள் மட்டுமே போதுமெனச் சொல்லிச் சொல்லிச் சிரிக்கிறாய். முதலில் ஒரு நல்ல மனநலவைத்தியனிடம் போய் முழுமையாக உன்னைப் பற்றி எடுத்துரைத்து சிகிச்சை பெற்றுக்கொள். யதார்த்தம் உணர். சூழவும் பார். இப்பொழுது கூட உன்னையே நீ இரண்டாம் நபரென எண்ணி உன்னுடனே நீ சத்தமாகக் கதைத்துக்கொண்டிருக்கிறாய். . காலை நடைக்காக வந்திருப்பவர்கள், வீதியில் செல்பவர்கள், பால்காரன், பத்திரிகை போடுபவன் என எல்லோரும் வீதியோரம் அமர்ந்திருக்கும் உன்னைப் பைத்தியக்காரன் எனச் சொல்லி வேடிக்கை பார்க்கிறார்கள் பார். "
- எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை
நன்றி - உயிர்மை
முகம் பார்க்கும் கண்ணாடி
சுமந்துவரும் விம்பங்கள் பற்றி
மெல்லிய காற்றிற்கசையும் திரைச்சீலைகளிடமும்
சொல்லப் படாக் கதைகள் இருக்கின்றன
தரை,சுவர்,தூண்,கூரையெனப்
பார்த்திருக்கும் அனைத்தும்
வீட்டிற்குள்ளான ஜீவராசிகளின்
உணர்வுகளையும்
அத்தனை ரகசியங்களையும்
அறிந்தே இருப்பினும் வாய் திறப்பதில்லை
" ஆதித்யா, உன் தனிமை பேசுகிறேன். கேட்கிறாயா? "
" நான் தனித்தவனாக இல்லை. இந்தச் சாலையோர மஞ்சள் பூக்கள், காலையில் வரும் தேன்சிட்டு, புறாக்கள், கிளிகள், மைனாக்கள், எனது எழுத்துக்கள் என எனைச் சூழப்பல இருக்கத் தனித்தவனாக இல்லை. நீ பிதற்றுகிறாய். வழி தவறி வந்திருக்கிறாய் "
" இல்லை. உன் மனதுக்கு நீ தனித்தவன். இதுவரையில் நீ வாழ்ந்த வாழ்க்கையில் ஒரு முகமூடியை அணிந்தபடியே ஊர்கள் தோறும் சுற்றி வந்திருக்கிறாய். நீ நீயாக இருந்ததில்லை. இப்பொழுதும் ஒப்புக்கொள்ள மறுக்கிறாய். நீ ஆதித்யா. ஆனால் ஆதித்யாவாக என்றும் நீ இருந்ததில்லை. உனது சுயத்தை வெளிக்காட்டத் தயங்கியபடி உள்ளுக்குள் மருகுகிறாய். "
" உன்னிடம் என்னைப் பற்றிய விளக்கம் கேட்க வேண்டிய அவசியம் எனக்கென்ன இருக்கிறது ? நீ யார் ? எதற்கு வந்திருக்கிறாய்? "
" இந்த அலட்சியம், யாரையும் மதிக்காத அகம்பாவம், எல்லாவற்றிலும் நான் மட்டுமென்றான திமிர், பணம் சம்பாதிப்பதை மட்டுமே வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டிருக்கும் சுயநலம், உனது தேவைகளுக்கு ஏற்றவிதத்தில் உருமாறிக் கொள்ளும் பச்சோந்தித்தனம், முக்கியமாக எதையும், யாரையும் புரிந்துகொள்ளாத அல்லது புரிந்துகொள்ள முயற்சிக்காத முன்கோபம் இவையெல்லாம் தான் இன்றென்னை உன்னருகில் அழைத்துவந்திருக்கிறது. "
" சரி. இருந்துவிட்டுப்போகட்டும். எனக்கு நீ வந்திருப்பது பிடிக்கவில்லை. அதுவும் கேள்விகளோடு...கேள்விகள்...கேள்விகள்..கேள்விகள். உன் வருகையின் நோக்கமென்ன ? "
" நானாக வரவில்லை. அன்பே உருவான ஸ்ரீயைப் பிரிந்தாய். நான் தானாக வந்துவிட்டேன். நான் வரக்கூடாதெனில் ஏன் அவளையும் பிரிந்தாய்? இது உனது முதல் மனைவிக்குப் பிறகான நான்காவது காதல். அவளை நேரில் பார்க்காமலே வந்த காதல். அசிங்கங்களுக்குள் வாழ்ந்த உன்னைத் தூய்மைப்படுத்தி அருகிலமர்த்திக் கொண்டவளை உதைத்து நீ வந்திருக்கிறாய். நான் வந்துவிட்டேன். "
" ஆம். அவளைப் பிரிந்தேன். அவளென்னை நிம்மதியாக இருக்கவிடவில்லை. என்னை அடிமைப்படுத்தப் பார்த்தாள். அவள் சொல்லும்விதமெல்லாம் நான் நடந்துகொள்ள வேண்டுமென எதிர்பார்த்தாள். மீறினால் வாதித்தாள். "
" எதனால் அவள் அப்படி நடந்துகொள்கிறாள் என யோசித்தாயா ? ஒரு கணமேனும் அது குறித்து அவள் நிலையிலிருந்து சிந்தித்தாயா? "
" எதற்கு சிந்திக்கவேண்டும்? நான் நானாகத்தான் இருப்பேன். அவளுக்காக நான் ஏன் என்னை மாற்றிக்கொள்ளவேண்டும்? "
" நீ மாற்றிக்கொண்டிருக்கத்தான் வேண்டும். ஏனெனில் நீதான் அவளைத் துரத்தித் துரத்திக் காதலித்தாய். ஒத்துவராதெனச் சொல்லி அவள் விலகி விலகிப் போனபோது அவள் குறித்துக் கவிதைகள் பாடினாய். உனது குருதியைத் தொட்டுக் கடிதம் எழுதி அவளை உன் பக்கம் ஈர்த்தாய். அவள் உனக்காக அவள் முடிவை மாற்றிக் கொள்ளவில்லையா ? நீ மாற்றிக் கொள்வதில் உனக்கென்ன தயக்கம் ? "
" அவளுக்கு என் மேல் நம்பிக்கையில்லை. அதனால் தான் மாறச் சொல்கிறாள். நான் ஆண். அவளையும் விட மூத்தவன். பல அனுபவங்களைக் கற்றவன். அவள் சொல்வதைக் கேட்கவேண்டுமென்ற கடமையோ அவசியமோ எனக்கில்லை. "
" அவள் இளமை மிகுந்த அழகி. இதுவரையில் எக்காலத்திலும் உன்னைத் தவிர்த்து எவருடைய காதலுக்கோ , வேறு எச்சலனத்துக்கோ இடம் கொடுக்காதவள். எப்பொழுதும் அவளைச் சூழவும் மிகுந்த அன்பானவர்களை மட்டுமே கொண்டவள். அப்படிப்பட்டவள் உன் மேல் நம்பிக்கையில்லாமலா தனது தாய்நாட்டை விட்டு, பெற்றவர்கள், உடன்பிறப்புகள் அனைத்தையும் விட்டு உன்னுடன் உனது நாட்டுக்கு வந்துவிடுவேன் எனச் சொன்னாள் ? நீயழைத்தது போல் அவள் அப்படி உன்னை அழைத்திருந்தால் நீ போவாயா? மாட்டாய். நீ செல்லமாட்டாய். அவளில்லாவிட்டால் இன்னொரு அழகி. இன்னொரு அப்பாவிப்பெண். மடங்காவிட்டால் பெருவிரலின் ஒரு துளி இரத்தம், சில கவிதைகள் போதுமுனக்கு. "
" நீ அதிகம் பேசுகிறாய். "
" உண்மையைப் பேசுகிறேன். நீ இதுபோல அவளைப் பேசவிடவில்லை. அவள் இதையெல்லாம் சொல்லியிருந்தால் அடங்காப்பிடாரி என அவள் பற்றி உன் சகாக்களிடம் பகிர்ந்துகொண்டிருப்பாய். வழமை போலவே அவர்களிடத்தில் உன்னை நல்லவனாகக் காட்ட அவள் குறித்துத் தீய பிம்பங்களை உருவாக்கிப் புலம்பித் தீர்த்திருப்பாய். "
" இல்லை. அவளும் பேசினாள். இது போல அல்லது இதைவிடவும் அதிகமாக அவள் பேசினாள். எனக்குக் கட்டுப்பாடுகள் விதித்தாள். எனது சுதந்திரத்தை அவளது வார்த்தைகளுக்குள், சத்தியங்களுக்குள் அடக்கினாள்.அவள் சொன்ன சிலவற்றை செய்யத்தானே செய்தேன். இருந்தும் போதவில்லை அவளுக்கு. தினமும் இன்னுமின்னும் புதுப்புதுக் கட்டளைகளோடு வந்தாள். "
" சரி. அந்தக் கட்டளைகளால் இதுவரை உனக்குத் தீயவை எதேனும் நடந்ததா சொல். எல்லாவிதத்திலும் உனது உயர்ச்சியைச் சிந்தித்துத்தானே அவள் தன் எண்ணங்களை உன்னிடத்தில் சொன்னாள். நீ நடந்துகொண்ட விதமும், உனது வாழ்க்கை முறையான தீயநடத்தைகளும் அப்படியவளை விதிக்கச் செய்தன. நீ ஒழுங்கானவனாக இல்லை. இதனாலேயே உன் முதல் மனைவி விஜியையும் பிரியநேர்ந்ததென்பதனை நீ மறந்துவிட்டாய். பின்னர் உனது பணத்தினை மொய்த்தபடி இரவுகளுக்கு நிறையப் பெண்தோழிகள். அது இன்றுவரையிலும் தொடருகின்றதென்பதனை ஒரு தூயவள் எப்படி ஏற்றுக் கொள்வாள்? நீ அவளை மெய்யாலுமே காதலித்திருந்தாயெனில், அவளது நேசமும் அன்பும் மட்டுமே உனக்குப் போதுமெனில் அவள் சொல்லமுன்பே உன் தீய சினேகிதங்களை விட்டிருக்கவேண்டுமல்லவா ? உனது துர்நடத்தைகளை விட்டும் நீங்கியிருக்கவேண்டுமல்லவா ?"
" அவள் என்னை அடிமையாக்கப்பார்த்தாள். "
" மன்னிக்கவும். திருத்திக்கொள். அவள் உன்னை நல்வழிப்படுத்த முயற்சித்தாள். உன்னை நேர்வழியில் கூட்டிச் செல்லவெனக் கைகோர்த்து நடந்தாள். வீணாகும் உனது நேரங்களைச் சுட்டி உனது எழுத்துக்களில் நீ பெரிதாக ஏதாவது சாதிக்கவேண்டுமென விரும்பினாள். நள்ளிரவிலும், நேரம் காலமின்றியும் உனக்குத் தொலைபேசும் ஒழுக்கம் தவறிய பெண்களின் அருகாமையைத் தவிர்க்கச் சொன்னாள். உனக்கது பிடிக்கவில்லை. உனக்குக் காதலியும் வேண்டும். இரவுகளில் கன்னம் தடவப் பெண் தோழிகளும் வேண்டுமென்றால் எந்தத் தூயவள் ஏற்றுக் கொள்வாள் ? ஓரிரு நாள் பொறுத்துப்பார்த்தாய். காதல் குறித்த அழகிய உவமைகள் கொண்டும், பிதற்றல்கள் கொண்டும் அவளது கோரிக்கைகளை நிறுத்தப்பார்த்தாய். உனது வார்த்தைகளைத் தடிக்கச் செய்தாய். விஜி தீக்குளித்த அன்றும் உனது வார்த்தைகள் தானே தடித்தன? ஒவ்வொரு காதலும் உன்னை விட்டு நீங்கியபொழுதாவது அவற்றிலிருந்து பாடம் கற்றுக்கொண்டிருக்க வேண்டாமா நீ ? "
" நீ பழையவற்றைக் கிளறுகிறாய். "
" சரியாகச் சொன்னாய். நீ இன்னும் பழைய குப்பைகளை உன் வாசலில், உனது முகத்துக்கு நேராகவே வைத்திருக்கிறாய். அகற்றவும் மறுக்கிறாய். அதற்கூடாகவே அவளையும் அழைக்கிறாய். குப்பைகள் சூழ வாழ்ந்து பழகாதவள் நாற்றம் தாங்காமல் அதை அகற்றச் சொல்கிறாள். உனது சுவாசத்திற்காகச் சோலைகளை வழிகளில் நிறுத்துகிறாள். நீயாகப் புறந்தள்ளி இன்னுமின்னும் குப்பைகளைச் சேகரித்துக் கொண்டு மீண்டும் மீண்டும் நாற்றங்களில் மெய்மறக்கிறாய். அவளென்ன செய்வாள் விட்டுப் போவதைத் தவிர."
" அவள் சொன்ன ஒரு சிலவற்றையாவது நான் செய்திருக்கிறேன் .ஆனால் அவள் எனக்காக இதுவரையில் அணுவளவாவது ஏதேனும் செய்திருக்கிறாளா ? "
" இதற்குத்தான் அவள் நிலையில் உன்னை வைத்துச் சிந்திக்கச் சொன்னேன். அவள் உன்னைப் பற்றி, உனது உயர்ச்சி பற்றி ஒவ்வொரு கணமும் யோசித்ததால்தானே உனக்கு நல்ல அறிவுரைகள் சொன்னாள். அவள் இதுவரையில் உன்னை நேரில் கூடப் பார்த்ததில்லை. நீ அவளுக்குக் கிடைப்பாயென்ற நிச்சயமேயில்லை. இருந்தும் உன்னை மிகவும் நல்வழிப்படுத்த முயற்சித்தாள். மெய்யான அன்போடு தனது ப்ரியத்திற்குரிய எழுத்தையும் உனக்காக விட்டுவிட்டு தனது சொந்தங்கள் எல்லாவற்றையும் துறந்து உன்னுடன் வந்து, உனக்காகவே வாழ்கிறேன் என்றாள். . உன்னுடன் வாழவந்த பிறகும் உனக்குப் பிடித்தவகையில் சமைத்து, உனக்குப் பிடித்தவகையில் உடுத்தி, உனக்குப் பிடித்தவகையில் உறவாடி உன்னுடனே இருந்திருப்பாள். இதைவிடவும் வேறு என்ன வேண்டும் உனக்கு ? என்ன எதிர்பார்க்கிறாய் நீ ? உனது தவறுகள் குறித்து எந்தக் கேள்வியும் கேட்காதவளையா? அதற்கு நீ ஒரு பொம்மையைக் காதலித்திருக்கவேண்டும். ஒழுக்கம் நிறைந்த ஒரு பெண்ணையல்ல. "
" நான் என்ன செய்யவேண்டுமென நீ சொல்லவருகிறாய்? "
" இந்தக் காதலிலிருந்தாவது , இந்த அனுபவத்திலிருந்தாவது பாடம் கற்றுக்கொள். உனது வீண்பிடிவாதங்களையும் துர்நடத்தைகளையும் தீய சினேகங்களையும் உனை விட்டும் அப்புறப்படுத்து. நீ தவறு செய்தால் அடுத்தவர் மேல் பழியினை ஏற்றித் தாண்டிப்போகப் பார்க்காமல் அது உனது தவறுதானென ஒத்துக்கொள். மீண்டும் அத்தவறு நிகழாமல் பார்த்துக்கொள். "
" சரி. நானும் அவள் மேல் அன்பாகத்தானே இருந்தேன்."
" அன்பு இருந்திருந்தால் அதனை உள்ளுக்குள் வைத்திருந்ததில் என்ன பயன்? இருவரும் அருகிலிருந்தாலாவது அன்பைச் சொல்ல ஒரு புன்னகை, ஒரு சிறு தொடுகை போதும். பகிர்ந்தருந்தும் தேனீர்க்கோப்பை போதும். ஆனால் கடல் கடந்து, தேசங்கள் கடந்து காதல் கொள்பவர்களுக்கு அன்பைச் சொல்ல எழுத்துக்களும் பேச்சும் மட்டும்தானே உள்ளன. அவற்றில் ஏன் உன் அன்பைக் காட்டவில்லை ? யார் யாருக்காகவோ கவிதை, கதை எனக்கிறுக்குமுன்னால் அவளுக்கான காலை வணக்கத்தை ஏன் அன்பைக் குழைத்தனுப்ப முடியவில்லை ?"
" இப்பொழுது நான் என்ன செய்யவேண்டும் என்கிறாய்? "
" உனது தீய நடத்தைகளை விட்டொழி. யாருக்கும் வாக்குறுதியளிக்கும் முன்பு இரு தடவைகள் யோசி. கொடுத்த வாக்குறுதியை மீறாதே இனிமேல் உன்னை நேசிக்கும் எவர்க்கும் உனது அன்பினை செய்கைகளாலும் நடத்தைகளாலும் வார்த்தைகளாலும் வெளிப்படுத்து. நீ நீயாக இருந்து அவளது விருப்பப்படியே எழுத்துக்களில் சாதித்துக்காட்டு. "
" சரி. செய்கிறேன். அவள், அவளது அன்பு எனக்கு மீளவும் வேண்டும். கிடைப்பாளா ? "
" முதலில் இப்படி அழுவதை நிறுத்து. ஒன்று அவளில்லையேல் வாழ்க்கையே இல்லையென்று விசித்து விசித்தழுகிறாய். இல்லாவிடில் இனி மகிழ்ச்சியாக வாழ அவள் நினைவுகள் மட்டுமே போதுமெனச் சொல்லிச் சொல்லிச் சிரிக்கிறாய். முதலில் ஒரு நல்ல மனநலவைத்தியனிடம் போய் முழுமையாக உன்னைப் பற்றி எடுத்துரைத்து சிகிச்சை பெற்றுக்கொள். யதார்த்தம் உணர். சூழவும் பார். இப்பொழுது கூட உன்னையே நீ இரண்டாம் நபரென எண்ணி உன்னுடனே நீ சத்தமாகக் கதைத்துக்கொண்டிருக்கிறாய். . காலை நடைக்காக வந்திருப்பவர்கள், வீதியில் செல்பவர்கள், பால்காரன், பத்திரிகை போடுபவன் என எல்லோரும் வீதியோரம் அமர்ந்திருக்கும் உன்னைப் பைத்தியக்காரன் எனச் சொல்லி வேடிக்கை பார்க்கிறார்கள் பார். "
- எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை
நன்றி - உயிர்மை
Labels:
உயிர்மை,
சமூகம்,
சிறப்பு,
சிறுகதை,
நிகழ்வுகள்
Subscribe to:
Posts (Atom)

