Thursday, May 1, 2008

அக்கக்காக் குஞ்சு !


இன்னும் தன் கண்திறவாக் குருவிக்குஞ்சினைக் குளிப்பாட்டித் துடைத்துத் தாலாட்டுப்பாடித் தூங்கவைக்கும் யாரையாவது எங்கேனும் பார்த்திருக்கிறீர்களா? நான் பார்த்திருக்கிறேன்.

சச்சுவுக்கு அப்பொழுது ஏழு அல்லது எட்டு வயதிருக்கும்.அந்த வயதுச் சிறுமிகளுக்கேயுரித்தான அத்தனை குறும்புகளும், சேட்டைகளும் அவளுக்கும் வாய்த்திருந்ததில் ஆச்சரியமேதுமில்லை. எனினும் சில பொழுதுகளில் அவள் செய்யும் செயல்களை எண்ணும்போது இப்படியும் யாராவது உலகிலிருப்பார்களா எனவும் எண்ணத் தோன்றும்.

சச்சு எனது பக்கத்து வீட்டிலிருந்தாள். அவளது அப்பாவுக்குச் சொந்தமான ஒரு செங்கல் சூளை ஊரில் இருந்தது. அக்காக்களிருவரும் பக்கத்து,பக்கத்து ஊர்களில் வாழ்க்கைப்பட்டுப் போய்விட அப்பாவுடன் அம்மாவும் சூளை வேலைக்குச் செல்லும் நாட்களில் சச்சுவுக்கு என் வீடும், முற்றமும்தான் விளையாடுகளமானது.

அன்றைய நாட்களில் எனது வீட்டுமுற்றத்தில் அடர்த்தியாகிக் குட்டையானவொரு எலுமிச்சை மரம் இருந்தது. ஒரு முறை அதன் நெருங்கிய கிளைகளுக்கிடையில் ஒரு குருவிக்கூடு இருப்பதைப் பார்த்துவிட்டவள் முட்கள் குத்தக் குத்தக் கூட்டினை எடுத்து விட்டாள்.உள்ளே சாம்பல் நிறம் படர்ந்த ஒரு குஞ்சு, எந்தப் பாசாங்குமற்ற விழிகளை மூடியவாறும் இளஞ்சூட்டோடும் சிறு நுரையீரல் நிரப்பிய காற்று வயிறை உப்ப வைத்துக்கீழிறக்கத் துயிலிலிருந்தது.

தனக்குத் துணைக்கு விளையாட ஒரு உயிர், தான் பெயர் வைத்து ரசிக்க ஒரு ஜீவன்... இன்னும் என்னென்ன நினைத்தாளோ, அப்படியே என் வீட்டுத் திண்ணை நிழலுக்கு எடுத்துவந்தவள் என்னை அழைத்ததன் பெயர் கேட்டாள்.ஓர் நாள்க் குஞ்சின் உருவம் பார்த்துப் பெயர் சொல்லுமளவிற்கு பறவை சாஸ்திரமெதுவும் அறிந்தவனல்ல நான்.மௌனமாய் அவள் முன் உதடு பிதுக்க 'இது அக்கக்காக் குஞ்சாக்கும்' என அவளே சொன்னாள். நள்ளிரவில் மட்டும் கீச்சிடும் குருவியதுவெனவும் அது பற்றி அம்மா நிறைய கதை கதையாய்ச் சொல்லியிருக்கிறாவெனவும் குருவிக் குஞ்சினைத் தடவிக்கொடுத்தவாறே சொன்னாள்.

பிறகு எவ்வளவோ எடுத்துச்சொல்லியும் கேட்காமல் திரும்பக் கூட்டில் வைக்கமறுத்துவிட்டாள். ஒரு குஞ்சின் பிடியில் இன்னொரு குஞ்சு. எதுவும் செய்ய இயலாதவனாக எனது உயர்தரப் பரீட்சைக்கான ஆயத்தங்களில் ஆழ்ந்துவிட்டேன்.

மாலையில் பார்த்தபோது சச்சு விழிகள் சிவக்க விசும்பிக்கொண்டிருந்தாள். என்னவென்று கேட்க, அவள் காட்டிய மாமர நிழலில் ஒரு சிறு மண்மேடு. அதன் மேல் நடப்பட்டவாறு செஞ்செவ்வரத்தம் பூவோடு கிளையொன்று.என்ன நடந்திருக்குமென ஊகிக்க என்னால் முடிந்ததானாலும் கேட்டேன்.

தான் தவறாக ஏதும் செய்யவில்லையெனவும் அதனைக் குளிப்பாட்டித் துடைத்துப் பின் சோறு ஒரு பருக்கை ஊட்டித் தூங்கவைத்ததாகவும் பிறகு பார்த்தால் செத்திருந்ததாகவும் மூக்கிழுத்து விசும்பியவாறு சொன்னாள். அளவிடமுடியாக் கோபம் என்னை ஆட்கொள்ள அவளது காதைத் திருகி உச்சந்தலையில் குட்டி விட்டேன்.மதியம் நான் அவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை.

பின்வந்த ஒரு வாரத்துக்கு எனை நோக்கும் கணங்களில் அவள் முகத்தில் புன்னகை இருக்கவில்லை. கோபம் நிறைந்து அப் பாரம் உடலை அழுத்துவது போலவே வளைய வந்தாள். எல்லாம் என் வீட்டு முகட்டிலிருந்து அணில்குஞ்சொன்று விழும் வரைக்கும்தான்.

அப்பொழுதிருந்த என் பழைய வீட்டில் சீலிங் வசதி எதுவும் செய்யப்பட்டிருக்கவில்லை.நாட்டு ஓடுகளால் மூடப்பட்ட வீட்டின் முகடுகளில் அணில்கள் வெகு சுதந்திரமாய் ஓடித்திரியும். முகட்டுக்கு நேராகத் தரையில் தும்புச் சிதறல்கள், வைக்கோல் துண்டுகள் சிதறிக்காணப்படின் தாய் அணில் பிரசவத்திற்காகக் காத்திருப்பதையும் அதற்கான கூட்டின் ஆயத்தங்களில் இருப்பதையும் உணர்ந்து கொள்ளலாம்.

ஒரு காலைப் பொழுதொன்றில் காதைச் சில்லிட வைக்கும் 'கீச் கீச்' சத்தம் வீடு முழுக்க நிறைந்திருந்தது. வீட்டின் எந்த மூலையிலிருந்து சத்தம் வருகிறதென ஒவ்வொரு கீச்சிடலையும் தொடர்ந்து வீடு முழுக்கத் தேடிப் பார்க்க சாப்பாட்டு மேசை மேல் சிறு உயிர் துடிப்பது தெரிந்தது.

எலிக்குஞ்சுக்குச் சமமான தோற்றமெனினும் தலை சற்றுப் பெரியது.கண்கள் முடிக்கிடக்க இளஞ்சூடாக இருந்தது.இடைவெளி விட்டு விட்டுக் கீச்சிட்டது. ஒரு மேசைக்கரண்டியில் பாலெடுத்து சிறு துணியை அதில் நனைத்து அதன் வாயில் வைத்து அது சப்பத் தொடங்கிய வேளை சச்சு வந்தாள். அவளுக்குத் தரச்சொல்லி அத்தனை கெஞ்சியும் கையில் கொடுக்கமறுத்தேன். என்ன நினைத்தாளோ...? அவசரமாய் அவ்விடத்தை விட்டும் ஓடிப் போனாள்.

பிற்பாடு ஏணி வைத்துச் சுவரில் ஏறி உச்சி முகட்டில் குஞ்சினை வைத்துவிட்டேன். அடுத்த கணமே தாய் அணிலின் வருகையைப் பார்க்கமுடிந்தது. ஒரு உயிரைக் காப்பாற்றிய மகிழ்ச்சி எனக்குள் வந்ததைப்போலவொரு மிகப் பெரும் களிப்பை அதுவும் உணர்ந்திருக்க வேண்டும். சத்தமாய்ச் சத்தமிட்டது.

அடுத்த ஐந்து நிமிடத்தில் வீட்டுக்குப்போய் அவளுக்காகப் பேச மூன்றாம் பிரசவத்துக்காக வந்திருந்த அவளது மூத்த அக்காவை அழைத்து வந்திருந்தாள் சச்சு. அவளது அக்கா அவ்வளவாகப் பேசமாட்டார். அடர்த்தியான மௌனமும், வார்த்தையில் விவரிக்க முடியாதவொரு மென்சோகமும் எப்பொழுதும் அவர் முகத்தில் இழையோடும். முதல் இரண்டு பெண்குழந்தைகளுக்குப் பிறகு மூன்றாவதாக ஒரு ஆண்குழந்தையைப் பெற்று வரவேண்டுமென்ற வலியுருத்தலோடு மாமியாராலும், கணவனாலும் தாய் வீட்டுக்கு அனுப்பப்பட்டிருந்தார்.

உயர்தரப் பரீட்சை எழுதிமுடித்த கையோடு நானும் அப்பாவும் அம்மாவும் அப்பாவின் வேலை இடம் மாற்றத்தாலும் எனது கணணிப்படிப்பைக் கருத்தில் கொண்டும் தலைநகர் வந்துவிட்டோம்.அதன் பிறகு ஊரோடு கடந்த பதினொரு வருடங்களாக எமக்கெந்தத் தொடர்பும் இருக்கவில்லை.

மூடிக்கிடக்கும் பழையவீட்டை விற்றுவிடலாமெனச் சமீபத்தில் நாங்கள் தீர்மானித்து ஊர் நோக்கி வரும்போது வாகனத்துக்குள் பழைய ஊர்க்கதைகளோடு சச்சு பற்றியும் பேசிக்கொண்டோம். பாழடைந்த வீட்டுக்குரிய அத்தனை குணாதிசயங்களோடும் நிறைந்திருந்த எமது வீட்டைச் சுற்றிப் பார்த்துத் திரும்பியவேளை அம்மாவுடன் சச்சுவும் நின்றிருந்தாள்.

மூத்த அக்கா மூன்றாவதாகவும் பெண்குழந்தையைப் பிரசவித்துவிட்டு இறந்துபோனதைத் தொடர்ந்து சில மாதங்களில் அப்பாவும் இறந்து போக, மூன்று குழந்தைகளைப் பராமரிக்கவும், ஆண் வாரிசுக்காக வேண்டியும் சச்சு, அக்கா கணவனுக்கு வாழ்க்கைப் பட்டிருந்தாள். மேடுற்ற வயிரோடு , ஒரு அடர்த்தியான மௌனமும், வார்த்தையில் விவரிக்க முடியாதவொரு மென்சோகமும் அவள் முகத்தில் இழையோடிக்கொண்டிருந்தது.

-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

24 comments:

ஃபஹீமாஜஹான் said...

ரிஷான்
உங்கள் சிறு கதை புதிய பாதையில் அடியெடுத்து வைத்துள்ளது.

கதை சொல்லும் முறையிலில் நிகழ்ந்துள்ள இந்த மாற்றம் உங்கள் எழுத்தின் சிறப்பான முன்னெடுப்புக்குக் கட்டியம் கூறுகின்றது.
வாழ்த்துகிறேன் அன்புடன்

Divya said...

எழுத்து நடையில் ஒரு வித மூதிர்ச்சியை காண முடிந்தது இந்த பதிவில், வாழ்த்துக்கள் ரிஷான்!

G.Ragavan said...

பஞ்சை வைத்து நெஞ்சை அடைக்கும் சோகம் கதை முடிகையில் அழுத்துகிறது. நல்ல எழுத்துக்குத்தான் அந்தத் திறமையுண்டு. நல்ல எழுத்து. வாழ்த்துகள்.

கோகுலன் said...

ரிஷான்,

உங்களின் எழுத்து நடை அருமையாக உள்ளது.

கதையின் முடிவில் சோகம் சொல்லப்பட்ட விதம் அருமை..

வாழ்த்துக்கள்.

Natchathraa said...

ரிஷான் இன்று தான் முதல் முறை உங்க கதை படித்தேன்...அற்புதம்..வேறெதுவும் சொல்ல முடியவில்லை...குருவி குஞ்சு மற்றும் அணில் குஞ்சு இரண்டையும் நேரில் பார்த்த மாதிரியிருக்கு....
கடைசியில் சச்சுவின் நிலை...இன்றும் கூட பல பெண்களின் வாழ்க்கையில் ஏற்படும் துயரம்....உங்களின் திறமைக்கு என் வணக்கம்....வாழ்த்துக்கள்... :) :)

அன்புடன்

நட்சத்திரா....

M.Rishan Shareef said...

அன்பின் சகோதரி பஹீமா ஜஹான்,

//ரிஷான்
உங்கள் சிறு கதை புதிய பாதையில் அடியெடுத்து வைத்துள்ளது.

கதை சொல்லும் முறையிலில் நிகழ்ந்துள்ள இந்த மாற்றம் உங்கள் எழுத்தின் சிறப்பான முன்னெடுப்புக்குக் கட்டியம் கூறுகின்றது.
வாழ்த்துகிறேன் அன்புடன்//

அனைத்து மாற்றங்களும் உங்கள் ஆதரவைக் கொண்டே... :)
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி :)

M.Rishan Shareef said...

அன்பின் திவ்யா,
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி :)

M.Rishan Shareef said...

அன்பின் ஜிரா,

//பஞ்சை வைத்து நெஞ்சை அடைக்கும் சோகம் கதை முடிகையில் அழுத்துகிறது. நல்ல எழுத்துக்குத்தான் அந்தத் திறமையுண்டு. நல்ல எழுத்து. வாழ்த்துகள்.//

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

அன்பின் கோகுலன்,

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பா :)

M.Rishan Shareef said...

வாங்க நட்சத்திரா,

உங்கள் வருகை இனிய நல்வரவாக அமையட்டும்.

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி :)

Sanjai Gandhi said...

கலக்கல் ரிஷான். படிக்க படிக்க இது கதையா நிஜ சம்பவமா என சந்தேகம் வந்துவிட்டது... அப்படியே ஒன்றிப்போக வாஇத்துவிட்டாய் கண்ணா... சபாஷ்..

M.Rishan Shareef said...

வாங்க சஞ்சய் :)
முதல்முறையாக என் வலைப்பக்கத்துக்கு வந்திருக்கிறீர்கள்.
உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

//கலக்கல் ரிஷான். படிக்க படிக்க இது கதையா நிஜ சம்பவமா என சந்தேகம் வந்துவிட்டது... அப்படியே ஒன்றிப்போக வாஇத்துவிட்டாய் கண்ணா... சபாஷ்..//

வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி நண்பரே :)

Sakthy said...

அழகான விபரிப்பு..
அந்த பறவைக்குஞ்சும் , அணிலும் ..
அந்த சச்சுவைப் போல எத்தனை பெண்களோ..

வாழ்த்துக்கள் ரிஷான்
நட்புடன்
ஸ்நேகிதி

rapp said...

ரொம்ப ரொம்ப நல்ல சிறுகதை. ஆனா சோகமான நெஞ்சை உருக்கும் முடிவுதான் மனசை கஷ்டப்படுத்திடுச்சி.
இது கற்பனையா?

Kavinaya said...

அறியாமல் சிறுவயதில் செய்து விடும் தவறுகளும்... வளர்ந்தபின் அறிந்தே அனுபவிக்கும் வேதனைகளும்...

சிறுகதையில் பெருங்கனம் ஏற்ற உங்களால் தான் முடிகிறது ரிஷான்.

M.Rishan Shareef said...

அன்பின் சக்தி,

//அழகான விபரிப்பு..
அந்த பறவைக்குஞ்சும் , அணிலும் ..
அந்த சச்சுவைப் போல எத்தனை பெண்களோ.. //

பூலோகம் பூராவும் நிறைந்திருக்கிறார்கள் சக்தி.அத்தனை பேர் கதையையும் எழுதிமுடிக்க ஒரு ஆயுள் போதாது.

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி ஸ்னேகிதி :)

M.Rishan Shareef said...

அன்பின் ராப்,

//ரொம்ப ரொம்ப நல்ல சிறுகதை. ஆனா சோகமான நெஞ்சை உருக்கும் முடிவுதான் மனசை கஷ்டப்படுத்திடுச்சி.
இது கற்பனையா? //

இல்லை..நிஜ நிகழ்வுதான்.
கதைக்குள் நான் நுழைவதுதான் கற்பனை.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)

M.Rishan Shareef said...

அன்பின் கவிநயா,

//அறியாமல் சிறுவயதில் செய்து விடும் தவறுகளும்... வளர்ந்தபின் அறிந்தே அனுபவிக்கும் வேதனைகளும்...

சிறுகதையில் பெருங்கனம் ஏற்ற உங்களால் தான் முடிகிறது ரிஷான். //

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)

ஷைலஜா said...

//மூத்த அக்கா மூன்றாவதாகவும் பெண்குழந்தையைப் பிரசவித்துவிட்டு இறந்துபோனதைத் தொடர்ந்து சில மாதங்களில் அப்பாவும் இறந்து போக, மூன்று குழந்தைகளைப் பராமரிக்கவும், ஆண் வாரிசுக்காக வேண்டியும் சச்சு, அக்கா கணவனுக்கு வாழ்க்கைப் பட்டிருந்தாள். மேடுற்ற வயிரோடு , ஒரு அடர்த்தியான மௌனமும், வார்த்தையில் விவரிக்க முடியாதவொரு மென்சோகமும் அவள் முகத்தில் இழையோடிக்கொண்டிருந்தது. .//

>>>
சச்சு போல எத்தனை முதிய

அக்கக்காகுஞ்சுகள்! மென்சோகம் அவள் முகத்தில் மட்டுமல்ல சகோதரனே , படிப்பவர் மனங்களிலும் தான்..இது உங்கள் எழுத்தின் வெற்றி!

Unknown said...

அன்பின் சகோதரி ஷைலஜா,

//சச்சு போல எத்தனை முதிய
அக்கக்காகுஞ்சுகள்! மென்சோகம் அவள் முகத்தில் மட்டுமல்ல சகோதரனே , படிப்பவர் மனங்களிலும் தான்..இது உங்கள் எழுத்தின் வெற்றி! //

உங்கள் கருத்து என்னை மகிழ்விக்கிறது.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி:)

குசும்பன் said...

சஞ்சய் வலைசரம் மூலம் இங்கு வந்தேன் சிறுகதை அருமை.

ராமலக்ஷ்மி said...

சச்சுவுக்கு குருவிக்கு குஞ்சுடனான அனுபவம் ஒரு அழகான சோகக் கவிதை.//என்ன நடந்திருக்குமென ஊகிக்க என்னால் முடிந்ததானாலும் கேட்டேன்.//
தலையில் குட்டினாலும் அது அந்த நேரக் கோபம். சச்சுவுக்கு ஏதுமறியா குஞ்சுவுக்கும் இல்லையே பெரிய வித்தியாசம். அதனால்தான் முடிவும் மனதைப் பிசைகிறது.

கவிதையாய் ஒரு கதை.

M.Rishan Shareef said...

அன்பின் குசும்பன்,

எனது சிறுகதைத் தளத்திற்கான உங்கள் முதல்வருகை எனக்கு மகிழ்வினைத் தருகிறது. உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

அன்பின் ராமல்க்ஷ்மி,

//சச்சுவுக்கு குருவிக்கு குஞ்சுடனான அனுபவம் ஒரு அழகான சோகக் கவிதை.//என்ன நடந்திருக்குமென ஊகிக்க என்னால் முடிந்ததானாலும் கேட்டேன்.//
தலையில் குட்டினாலும் அது அந்த நேரக் கோபம். சச்சுவுக்கு ஏதுமறியா குஞ்சுவுக்கும் இல்லையே பெரிய வித்தியாசம். அதனால்தான் முடிவும் மனதைப் பிசைகிறது.

கவிதையாய் ஒரு கதை. //

வருகைக்கும் அழகிய கருத்துக்கும் நன்றி சகோதரி :)